Monday, November 16, 2009

புதுக்கவிக்குறள் - பொருள்.



அறனிழுக்கா தல்லவை - பொருட்பால் - குறள் 384


கற்றறிந்த அறவழி காப்பதில்
கணப்பொழுதும் தவறிழைத்து விடாமலும்
வன்முறை தீவிரவாதம் போன்ற
அறமற்ற அநீதிகள் ஏதும்
தன் ஆட்சியில் நிகழாமலும்
வீரம் மிகக்கொண்டும்
மானம் பெரிதெனப் போற்றியும்
நாடாள்பவனே
நல்லதோர் அரசனாவான்


அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு


2 பொருட்பால் - 1 அரசியல்
39 இறைமாட்சி - குறள் 384

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை
------------------------------------------------------------------------------------------------------

தூங்காமை கல்வி - பொருட்பால் - குறள் 383


காரியம் ஆற்றுவதில்
கணப்பொழுதும் கண்ணயராமை
யாவும் பகுத்தறியும் உயர்தரக் கல்வி
எந்நாளும் எதையும் தாங்கும் இதயம்
இம்மூன்றும்
மண்ணாளும் மன்னரிடம்
நீங்காமல் நிறைந்திருக்கும்
சிறப்புத் தகுதிகளாம்


தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு


2 பொருட்பால் - 1 அரசியல்
39 இறைமாட்சி - குறள் 383

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை
-------------------------------------------------------------------------------------------------------

அஞ்சாமை ஈகை - பொருட்பால் - குறள் 382


பகைமை கண்டு அஞ்சாத நெஞ்சுரம்
கொடுத்துக் கொடுத்துச் சிவக்கும் கரங்கள்
அறம் போற்றும் தெளிந்த நல் அறிவு
சிகரம் தொடும் தளராத ஊக்கம்
இவை நான்கும்
சிறந்ததோர் ஆட்சியாளனின்
இயல்புகளாம்


அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு


2 பொருட்பால் - 1 அரசியல்
39 இறைமாட்சி - குறள் 382

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை
----------------------------------------------------------------------------------------------------------

படைகுடி - பொருட்பால் - குறள் 381


வெற்றி முழங்கும் வீரர் படை
பண்பு மாறா உயர் மக்கள்
குறைந்தழியாச் செல்வச் செழுமை
அறிவால் நிறைந்த அமைச்சரவை
அசைக்க முடியா அயல்நாட்டு நட்புறவு
உறுதிமிக்க உள்நாட்டுக் காவல்
இவை ஆறும் நிறைவாய்க் கொண்டதே
ஆண் சிங்கத்துக்கு நிகரான
அரசாங்கம்
 
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசு ளேறு


2 பொருட்பால் - 1 அரசியல்
39 இறைமாட்சி - குறள் 381

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை


நன்றி :                     http://anbudanbuhari.blogspot.com

No comments: