Tuesday, November 24, 2009

குனிந்து நிமிர்ந்து…




வணங்கவேண்டும்
யாரை வணங்குவது.?
வணக்கத்தை.!

வணக்கம் என்ன இறைவனா.?

இறைவனைத் தான்
வணங்குகிறோமா.?

கடமைக்கா
வணங்குகிறோம்
உடைமைக்காக
வணங்குகின்றோமா.?

நேரம் தவறாமல்
வணங்குகிறோம்
நேர்மையை
வணங்குகிறோமா.?

பசிக்காகவேண்டி
பயணிக்கிறோம்
பசித்தவர்களுக்கு
உணவாகின்றோமா.?

நான் என்று
நிமிர்கின்றோமே தவிர
நான் என்று விளங்குகிறோமா.?

படைப்பு
படைத்தவனை வணங்கலாம்
படைத்தவன்
படைப்புக்குள்தானே.!
வணக்கமும்
வணங்கப்படுவதும்
நம்மில்.!

குனிவதெல்லாம்
வணக்கமல்ல
குப்பைகளாய்
வீசப்படும்.

ஏற்றமரம்
குனிந்து நிமிர்கிறது
பயிர்களுக்கு அது
பாசனம்.

பயிர்கள்
நிமிர்ந்து குனிகிறது
நமக்கு தானியங்கள்

நாம்
குனிந்து நிமிர்வது
வணக்கவாழி என்ற
அடையாளத்திற்குதானே

பலர்
குனிவதெல்லாம்
அவர்களின்
வயிற்று ஆகாரத்திற்காக
மட்டுமே
சிந்தனை கிளியனூர் இஸ்மத்
லேபிள்கள்: கவிதை, குனிந்து நிமிர்ந்து
Thanks to : http://www.klr-ismath.blogspot.com/

No comments: