Saturday, January 30, 2010

இஸ்லாமியச் சட்டம் (2)

நீடூர் A.M.சயீத்,
முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம்
ஒரு முஸ்லிம் திருமணம் செய்து கொண்டால் மனைவிக்குத் தேவையான உணவு, உடை, உறையுள் மற்றும் இன்றியமையா வசதிகளை, தன் சக்திக்கேற்ப செய்து கொடுப்பது கடமையாகும். இதே போல மனைவியும் கணவனின் தேவைகளை அறிந்து நடந்து கொள்ள வேண்டும்; கணவனின் அழைப்புக்கு செவிசாய்க்க வேண்டும்.
கணவன், மனைவி இருவரும் தத்தமது கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றி, ஒருவர் மற்றவரது உரிமைகளை மதித்து நடப்பவர்களானால் மணமுறிவுக்கு அவசியமே ஏற்படாது. இதில் யார் தவறு செய்தாலும் பிரச்சினை தான். பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டும். இல்லையேல், அது பெரியதாகி விவாகரத்து வரை கொண்டு போய்விடும்.'மனைவியை அன்போடு நடத்த முடியாமல் பிரச்சினை முற்றினால், நல்ல முறையில் அவளைப் பிரித்து விடு' என்பது இஸ்லாத்தின் கட்டளை.
தகுந்த காரணங்களில்லாமல் திருமண இழப்பு ஏற்படக் கூடாது. இதனால் தான் 'அனுமதிக்கப்பெற்ற செயல்களிலேயே அல்லாஹ்வுக்கு மிகவும் கோபமாக செயல் திருமணம் முறிவு தான்' என அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் தெரிவித்துள்ளார்கள். (அறிவிப்பவர்: இப்ன உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ , ( நூல் : அபூதாவூது)

சிறிய பிரச்சினைகளைத் தமக்குள் தம்பதிகள் தீர்த்துக் கொள்ள வேண்டும். முடியாத போது பெற்றோர், அல்லது உறவினர் மூலமாக சமரசம் செய்து கொள்ள வேண்டும். சமரசத்திற்கு இடமின்றி, இனிமேல் அவன் அவளோடு வாழவே முடியாது என்ற நிலையில் கணவன் மனைவியை விவாகரத்துச் செய்யலாம். இதை விடுத்து
அவளோடு இணக்கமாக வாழாமலும், பிரிந்து போக அனுமதிக்காமலும் துன்புறுத்தலாகாது. அவ்வாறு துன்புறுத்தினால் மனைவி திருமண இழப்புக் கோரலாம்.
இதற்காகத்தான் 1939 மார்ச் 17-ல் 'முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம்' நடைமுறைக்கு வந்தது. முஸ்லிம் ஒருவன் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி விவாகரத்துச் செய்ய மறுத்து, பிணக்கின் காரணமாக மனைவியைத் துன்புறுத்திக் கொண்டிருந்தால், திருமண இழப்புக் கோர மனைவிக்கும் அனுமதி தர வேண்டும் என்ற நோக்கில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. கீழ்க்கண்ட காரணங்களில் ஒன்றைக்காட்டி, திருமணமான ஒரு முஸ்லிம் பெண் விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.
1. நான்கு ஆண்டுகளுக்கு மேலாக கணவன் போன இடம் தெரியவில்லை; கடிதமும் இல்லை; தகவலும் இல்லை; இந்நிலையில் 6 மாத காலக்கெடு கொடுத்து, திருமணம் முறிந்து விட்டதாகத் தீர்ப்பளிக்கப்படும். இதற்கிடையில் கணவன் திரும்பி வந்து மனைவியோடு வாழ விருப்பம் தெரிவித்தால் முன்பு அளிக்கப்பட்ட தீர்ப்பு ரத்தாகி விடும்.
2. ஒருவன் தன் மனைவிக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்க்கைப்படி ஜீவனாம்சம் கொடுக்கத் தவறினால், மனைவி விவாகரத்துக் கோரலாம்.
3. கணவன் 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்தால்.
4. தக்க காரணமேதுமின்றி கணவன் தன் கடமைகளை 3 ஆண்டுகள் வரை நிறைவேற்றத் தவறினால்,
5. கணவன் ஆண்மையிழந்தவனாக இருந்தால்
6. கணவனுக்கு பைத்தியம், தொழு நோய், பால்வினை நோய் ஆகியன ஈராண்டு காலமாக நீடித்தால்.
7. 18 வயது நிறைவடைவதற்கு முன்பு தந்தையாலோ, காப்பாளராலோ திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, உடலுறவு நிறைவு பெறாத நிலையில் 18 வயதுக்குள் அத்திருமணத்தை ஏற்க அவன் மறுத்திருந்தால்.
8. கணவனால் கொடுமைக்குள்ளாக்கப்பட்டால்
9. இஸ்லாமிய சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட வேறு காரணங்கள் இருந்தால்.
மனைவி திருமணத்திற்குப் பிறகு முஸ்லிம் கணவனோ, மனைவியோ மதம் மாறினால், அந்த நேரத்திலேயே இஸ்லாமிய சட்டப்படி திருமண ஒப்பந்தம் முறிந்து விடும்.
கணவன் மதம் மாறியதால், மனவூவி வேறொரு முஸ்லிமை மணந்து கொண்டால்; இதை அறிந்த முதல் கணவன் மீண்டும் இஸ்லாத்தில் இணைந்து, தன் மனைவி மறுமணம் செய்த குற்றத்திற்காக வழக்கும் தொடர்ந்தான் என்றால், மனைவி குற்றமற்றவள் என்றே தீர்ப்பு வழங்கப்படும். கணவன் மதம் மாறியதால் மண ஒப்பந்தம் முறிந்து விட்டதே காரணம்.
இஸ்லாமிய சட்டப்படி மனைவி மதம் மாறினாலும் திருமண ஒப்பந்தம் முறிந்து விடும் என்பதே முடிவாகும். ஆனால் 1930-ம் ஆண்டு முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம் 4-வது பிரிவின்படி, மனைவி மதம் மாறினாள் என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் முறிந்து விடாது. மாறாக அவளோடு வாழ கணவன் மறுத்ததால், 2-வது பிரிவில் தரப்பட்டுள்ள காரணங்களில் ஒன்றைக் காட்டி, அதை நிரூபிப்பதன் மூலம் தீர்ப்பினை பெற முடியும். இதுவே இன்று இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் சட்டமாகும்.
ஜீவனாம்சமும் ஷாஹ்பானு வழக்கும்
திருக்குர்ஆன் கூறுகின்றது:
'உங்களில் மனைவியரை விட்டு இற(க்கும் தருணத்தில் இரு)ப்பவர்கள். தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரண சாசனம் செய்வார்களாக! ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற) வற்றைச் செய்து கொண்டார்களாயின், உங்கள் மீது எந்தக் குற்றமும் கிடையாது. அல்லாஹ் மிகைத்தோனும் விவேகமிக்கோனுமாவான்.' (2:240) 'இன்னும் 'தலாக்' சொல்லப்பட்ட பெண்களுக்கு (இத்தா வரை கணவனிடமிருந்து) முறையான பராமரிப்புப் பெற உரிமையுண்டு. (இது) தீமையிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வோர் மீது கடமையாகும்.'(2:241) கணவன் மனைவி இடையே மணமுறிவு (
'தலாக்') ஏற்பட்டுவிட்டால், மனைவி 'இத்தா' இருக்கும் நாள்களில் கணவன் அவருக்கு பராமரிப்புத் தொகை (ஜீவனாம்சம்) தர வேண்டும் என்பதை இவ்வசனம் தெளிவுப்படுத்துகின்றது. இதை ஆதாரமாகக் கொண்டே ‘இந்திய இஸ்லாமியர் சட்டம்' வாழ்க்கைப்படி எவ்வாறு தர வேண்டும் என்பதைக் கூறுகிறது. ஏற்கனவே 'மஹர்' தொகை கொடுக்கப்படாமலிருந்தால் உடனடியாக அதனையும் கொடுத்து விட வேண்டும் என்பது சட்டம். மனைவிக்கும் வாழ்க்கைப்படி எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாக ஹனபி, ஷாபிஈ, ஒயா ஆகிய சட்டப்பிரிவுகளிடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது. ஹனபி சட்டப்பிரிவின்படி கணவன், மனைவி இருவரின் அந்தஸ்துக்கு தக்கபடி வாழ்க்கை செலவுத் தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும். ஷாபி சட்டத்தில் கணவனின் தகுதிக்கேற்பவும், ஒயா பிரிவில் மனைவியின் தரத்திற்கேற்பவும் நிர்ணயித்தல் வேண்டும்.
மணமுறிவுக்குப் பிறகு குழந்தைகள் 18 வயதை அடையும் வரை அவர்களைப் பராமரிக்கின்ற பொறுப்பு தந்தையுடையதாகும். மகளுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டால், தந்தையின் பொறுப்பு நீங்கிவிடுகிறது. இருந்தாலும் மகள் விதவையாகி வந்து நின்றால், அவளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை தந்தையே ஏற்க வேண்டும்.
இந்தியாவில் 1898ல் குற்றவிசாரணைச் சட்டம் (சி.ஆர்.பி.சி) உருவாக்கப்பட்டது. அந்தச் சட்டத்தின் 488-வது பிரிவிலிருந்து தான், 1973-ல் உருவாக்கப்பட்ட 125, 127 ஆகிய பிரிவுகள் தோன்றின. அதன் விபரம் பின்வருமாறு.
சி.ஆர்.பி.சி.125-வது பிரிவு கூறுகிறது; 'போதுமான வசதி படைத்திருந்தும் எவரேனும் தன்னைப் பேணிக்காத்துக் கொள்ள முடியாத மனைவி, அல்லது அத்தைகய புறக்கணிப்பு, அல்லது பேணிக்காக்க மறுத்தல் ஆகியன மெய்ப்பிக்கப்பட்ட பின்னர், ஒரு முதல் வகுப்புக் குற்றவியல் நடுவநர், அந்த நபருடைய மனைவி, குழந்தை, தாய் அல்லது தந்தை ஆகியோரைப் பேணிக்காப்பதற்காக மாதந்தோறும் ஒரு தொகையினை அவர்களுக்கு அவர் அளித்து வரவேண்டும் என்று உத்தரவிடலாம். அத்தொகை மொத்தத்தில் மாதம் 500 ரூபாய்க்கு மேற்படலாகாது. குறிப்பு:- மனைவி என்பதில், கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பின்னரும், அல்லது விவாகரத்து செய்து கொண்ட பின்னரும் மறுமணம் செய்து கொள்ளாதவளும் அடங்குவாள்.'
சி.ஆர்.பி.சி.127 (3-A) வது பிரிவு கூறுகிறது. 'கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண், அத்தகைய உத்தரவுக்கு முன்போ, பின்போ தன் கணவனிடமிருந்து குல வழக்கப்படியோ, அல்லது சொந்த சட்டப்படியோ விவாகரத்தின் போது அளிக்கப்பட வேண்டிய தொகை முழுவதையும் பெற்றுக் கொண்டார் என்று தோன்றினால் (1) அத்தொகை அந்த உத்தரவுக்கு முன்பே கொடுக்கப்பட்டிருப்பின் கணவன் அவளுக்கு அந்த மாதாந்திர தொகையை அளிக்க காலம் முடிவடைந்த தினத்திலிருந்தும் அந்த உத்தரவை ரத்து செய்யலாம்.' 1973 ஆகஸ்ட் 18-ம் நாள் அன்றைய பிரதமர் இந்திராகாந்தியை முஸ்லிம் தலைவர்கள் சந்தித்து 'முஸ்லிம் பெண்களுக்கு இதில் விதிவிலக்கு வேண்டும்' என்று வற்புறுத்தி கேட்டுக் கொண்டார்கள். அதன் பேரில் முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்க புதிய ஏற்பாடு செய்யப்பட்டது.முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசு தலையிடாது என இந்திரா உறுதியளித்தார். அத்தோடு இன்றைய மத்திய அமைச்சர் ஆர்.என். மிஸ்ரா 18.12.1973ல் குற்ற விசாரணைச் சட்டத்தின் மூலம் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் அரசு தலையிடாது' என அறிவித்தார். இஸ்லாத்தில் திருமணம் என்பது பரியக் கூடிய கூட்டாகும். எனவே, திருமணம் செய்து வைப்பதோடு மகளைப் பராமரிக்கின்ற பொறுப்பு நிரந்தரமாக முடிந்து போவதில்லை. கணவனால் விவாகரத்து செய்யப்பட்டால் மகளுக்கான பெற்றோர்களின் பொறுப்புப் புதுப்பிக்கப்படுகிறது.’ என டாக்டர் தாஹிர் 1984 ஆகஸ்டில் பம்பாயில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது குறிப்பிட்டார்.
ஷாஹ்பானு வழக்கு
உச்சநீதிமன்றத்தில் ஷாபானு வழக்கு நடந்த போது டாக்டர் தாஹிரின் பேச்சு நகலும் தாக்கல் செய்யப்பட்டது. பாராளுமன்றத்தில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் தெரிவித்த கருத்துகளும் உச்சநீதிமன்றத்தில் புறக்கணிக்கப்பட்டன. அன்றைய தலைமை நீதிபதி சந்திரசூட் தமது தீர்ப்பில்; 1843-ல் ஐரோப்பியரான எட்வர்ட் லேன் வெளியிட்ட குர்ஆன் ஆங்கில மொழி பெயர்ப்பைப் படித்து விட்டு தவறான முடிவுக்கு வந்தார்.
தலைமை நீதிபதிக்கும் அவரது உதவியாளர்களுக்கும் சட்ட நிபுணர் அமீர் அலி அவர்களின் 'வீக்ஷிசி றீPணூயூணூவீ நுய் ணூறீஸிபுனி' என்ற அற்புதமான நூல் கிடைத்திருந்தும், அதனை அவர்கள் பயன்படுத்தவில்லை. இதில் 'இஸ்லாத்தின் பெண்கள் நிலை' என்ற தலைப்பில் ஒரு முழு அத்தியாயமே உண்டு. மேற்கண்ட திருவசனத்தில் (2:241) இடம் பெற்றுள்ள 'மதாஉ' என்னும் சொல்லுக்கு 'னிபுணூஹிவீசிஹிபுஹிளீசி' என மொழி பெயர்த்ததே கோளாறுக்கு காரணம். மெய்ன்டனன்ஸ்' என்பதற்கு வாழ்க்கைச் செலவுத் தொகை, பராமரிப்பு, பேணுகை ஆகிய பொருள்கள் அகராதியில் காணப்படுகின்றன. இதை வைத்து, 'தலாக்' சொல்லப்பட்ட பெண்ணுக்கு, அவள் மறுமணம் செய்து கொள்கிற வரை வாழ்க்கை முழுவதும் ஜீவனாம்சம் தர வேண்டும் எனத் தீர்ப்பளித்தார் சந்திரசூட்.
(இன்ஷா அல்லாஹ், தொடரும்)

No comments: