Tuesday, January 5, 2010

அட எப்படித்தான் வரும் நிம்மதி என்றேன் சலிப்போடு


மூச்சுக்கு முச்சு தேவைப்பட்டு
மூச்சு நின்றபின் கிட்டும்
அமைதியா நிம்மதி என்றேன்
வாழ்வின் தேவைக்கு செத்தபின் வருமென்பது
எப்படி ஈடாகும் என்கிறாய்

என்னிலும் துயரத்தில் தள்ளாடும்
உள்ளங்களைக் கண்டு சமாதானம் கொள்ளும்
புத்திதான் நிம்மதி என்றேன்
உன்னை மீறும் எண்ணங்களை
எத்தனைநாள் ஏமாற்றுவாய் என்கிறாய்

எல்லாம் துறந்து
எதையும் சுவைக்காமல
மௌனித்துக் கிடப்பதே நிம்மதி என்றேன்
இயற்கையைச் சுத்தமாய்த் துடைத்தெறிவது
எப்படி நிகழும் என்கிறாய்

அன்னை மடி துயிலும்
மழலைச்சுகமே நிம்மதி என்றேன்
வளராமல் இருக்க
வரம் இல்லையே என்கிறாய்

காதலியின் அணைவில்
நினைவுகளற்றுப் பறக்கும்
சிறகுகளே நிம்மதி என்றேன்
ஒடிப்போயோ அல்லது உடனிருந்தோ
ஒரு நாளவள் காணாதொழிவாளே என்கிறாய்

கண்மூடிக் கண்ணீர் பெருக்கி
தெய்வமே என்று காலடி கிடக்கும்
பக்தியே நிம்மதி என்றேன்
தினமும் தொழுதெழும் தீவிர பக்தனும்
தாளாத்துயரென்று வந்துவிட்டால்
இருக்கிறாயா தெய்வமே என்றுதானே
அழுகிறான் என்கிறாய்

அட எதுதான் நிம்மதி எங்குதான் நிம்மதி
எப்படித்தான் வரும் நிம்மதி
என்றேன் சலிப்போடு

உனக்குள் தேடி
உன்னையே வளர்த்தெடுத்து
உன்னை ஆளவைக்கும்
உன் சக்தியே நிம்மதி என்கிறாய்

மலங்க மலங்க விழிக்கிறேன்
வழியறிந்தும் வாசல் அடையும்போது
ஆயுள் முடியுமே என்ற
கவலையில்

நன்றி :  http://anbudanbuhari.blogspot.com/

No comments: