Monday, April 5, 2010

வணங்காமுடி பதில்கள் (04-04-2010)

இந்நேரம்.காம் 


போலி மருந்து கம்பெனிகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் மற்ற மருந்து கடைகளின் மீது சந்தேகத்தை எழுப்புகிறது. ஆங்கில மருந்துகளை நம்பி வாங்கலாமா? - ஜமீல்
இனி நம்பிக்கையோடு வாங்கலாம்.

தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே போலி மற்றும் காலாவதியான மருந்துகள் குப்பையில் கொட்டப்பட்டும் தீவைத்து எரிக்கப்பட்டும் அழிக்கப்பட்டு வருவதால் இனி ஆங்கில மருந்துகளை நம்பி வாங்கலாம்.

மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை, மருந்து வாங்குவதற்குச் சில "டிப்ஸ்"களைத் தந்துளது. அவற்றைப் பின்பற்றினால் தொல்லையில்லை!

மருந்துகளை உரிமம் பெற்ற சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும்.

மருந்துகள் வாங்கியதற்குக் கடைக்காரர்களிடம் இருந்து ரசீது கேட்டுப் பெற வேண்டும். இது போலி மருந்துகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் உத்திரவாதமாகும்.

மருந்துகளின் மேல் குறிப்பிட்டுள்ள விலையையும், பில்லில் போடப்பட்டுள்ள விலையையும் ஒப்பிட்டு பார்த்துத் தவறுகள் இருப்பின் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.

மருந்துகளை வாங்கியவுடன் அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை நன்கு கவனிக்க வேண்டும். அதில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருந்தால் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.

மருந்துகளைக் குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத உலர்ந்த இடத்தில் வைக்கவும். மருந்துகளைக் குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும். மருந்துகளை சமையல் அறை, குளியல் அறையில் உள்ள அலமாரிகளில் வைக்காதீர்கள்.

மற்றவர்களுடைய நோயின் தன்மை உங்களது போன்று இருந்தாலும் நீங்கள் பயன்படுத்தும் மருந்துகளை அவர்களுக்குக் கொடுக்காதீர்கள்.

மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு, சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருந்துகள் மற்றும் மருந்தியல் விழிப்புணர்வு மையத்தை அணுகலாம்.

அல்லது 044 24338421, 24328734, 24310687, 24351581 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு விளக்கங்கள் பெறலாம் என மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் அறிவித்துள்ளது.



திருமணத்துக்குப் பின் மனைவியைச் சமாளிப்பது கஷ்டமா? அம்மாவைச் சமாளிப்பது கஷ்டமா? - கண்ணன்

சமாளிப்பு?

ஏன்?

மாமியாரை மருமகளும் மருமகளை மாமியாரும் போட்டியாக / எதிரியாகக் கருதுவதாலேயே இவ்வினா எழுகிறது.

இருவருமே உங்கள் மீது "பொஸஸிவ்னெஸ்" காட்டுவதால் போட்டி வருகிறது.

மனைவியிடம் காதலையும் தாயிடம் பாசத்தையும் அவரவர்க்குரிய விதத்தில் செலுத்தும்போது சமாளிப்பு ஏன்?



மழை பொழிய காடுகள் தான் காரணம் என என் நண்பன் கூறுகிறான். அவ்வாறெனில் அண்டார்டிக் பகுதிகளில் மழையே பெய்யாதா? - பிருந்தா

அதீதக் குளிரான பகுதிகளில் நாம் நாடுகளில் பெய்யும் மழை போன்று பெய்வதில்லை.

பனி நீர் சொட்டுவது சின்னஞ்சிறு சாரலாகத் தெரியும்.



டைம் மெஷின் என்று கூறுகிறார்களே? அது என்ன? - பிருந்தா

இது ஹெச் ஜி வெல்ஸ் என்பார் எழுதிய அறிவியல் புதினம். பின்னர் இப்பெயரிலேயே இரு முறைத் திரைப்படமாகவும் வந்தது. பின்னர் தொலைக்காட்சித் தொடராகவும் சிறுவர் படக்கதையாகவும் கூட வந்தது.

ஒரு எந்திரத்தின் உதவியால் பயணம் செய்து இறந்தகாலத்துக்கோ எதிர்காலத்துக்கோ போக முடியும் என்ற கற்பனையே கரு.




முல்லைப் பெரியாறு பிரச்சனையில் உண்மை யார் பக்கம் உள்ளது? - தமிழன்பன்

தமிழ்நாட்டில் உருவாகும் நதி, கேரளம் வழியாகச் சுற்றித் தமிழ்நாட்டுக்கு வருகிறது.

பலவீனமான முல்லைப் பெரியாறு அணை உடையும் ஆபத்து இருப்பதால் புது அணை கட்டுவோம் என்கிறது கேரளாம்.

அணைக்கு ஆபத்தில்லை; புது அணை கட்டுவதால் தமிழகத்திற்குத் தரும் நீரின் அளவைக் கேரளம் குறைத்துவிடும் என்பது தமிழ்நாட்டின் அச்சம்.

இரு பக்கமும் உண்மை இருப்பதாகவே படுகிறது.

அரசியல் ஆதாயத்தை ஒதுக்கிவைத்துவிட்டுத் திறந்த மனதுடன் பேசினால் சிக்கல் தீர்ந்துவிடும்.



பென்னாகரத்தில் விஜயகாந்த் கட்சி மட்டும் தான் ஓட்டுக்குக் காசு கொடுக்கவில்லை என்கிறார்கள். உண்மையா? - ஆகாஷ்

இருக்கிறவர்கள் கொடுப்பதால் இல்லாதவர்கள் கொடுக்கவில்லை என்கிறார்கள்.



பென்னாகரம் இடைத்தேர்தலில் சுமார் 85 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? - செல்வா

முன்னர் நடந்த இடைத்தேர்தல்களின் போதும் இதே வினா தொடுகப்பட்டிருந்தது நினவில் உள்ளது.

வெற்றி பெற்றேயாகவேண்டும் என்ற ஆவேசமும் தொண்டர்களின் உழைப்பும் வாக்குகளுக்குக் கொடுக்கப்பட்ட விலையும் எனப் பலவாறகலாம்.



தூங்கும் போது வரும் குறட்டைக்கும் வயிறு நிறையும் போது வரும் ஏப்பத்துக்கும் என்ன வித்தியாசம்? - தமீம்

முன்னது தன்னை மறந்த உறக்க நிலையில் வெளிப்படும்..

பின்னது வயிறு நிரம்பினாலும் நிரம்பா விட்டாலும் ஏற்படும்.

உறங்கும் ஒருவரின் தொண்டையின் பின்புறம் உள்ள திசுக்களும் நாக்கின் தசைகளும் தளர்வடைந்து விடுவதால் நாக்கு மூச்சுப் பாதைக்குள் விழுகிறது. இதனால் மூச்சு போகும் பாதை குறுகலாவதால் மூச்சு அழுத்தத்துடன் வெளியேறும்போது குறட்டைச் சத்தம் உண்டாகிறது.

உணவுண்னும் போதும் நீர் பருகும்போதும் காற்றும் சேர்ந்தே இரைப்பையினுள் செல்கிறது. நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் சேர்ந்த வாயு ஜீரணக் குழாய்களிலிருந்து வாய் வழியாக வெளியேறுவதை ஏப்பம் என்கிறோம்.



இந்நேரம்.காமில் சினிமா தொடர்பான கவர்ச்சிப் படங்கள் ஏதும் வராமைக்குக் காரணம் என்ன? - செந்தில்

பொழுதுபோக்குத் தளமில்லை இந்நேரம். வாசகனுக்கு உண்மையான செய்திகளை உடனுக்குடன் தருவதே தளத்தின் நோக்கம்.

நடிகையின் கவர்ச்சிப் படத்தைப் பார்ப்பதால் அறிவு வளரும் என்றிருந்தால் இந்நேரம் தளத்தில் அதிகளவு படங்களைத் தந்திருப்போமே!
நன்றி :Source : http://www.inneram.com

No comments: