Sunday, April 11, 2010

தள்ளிப்போடாமல் இருப்பது எப்படி? தள்ளிப் போடாதீர்கள். துள்ளியெழுங்கள்.

இந்தக் கேள்வியை யாரிடமாவது கேட்டு பதில் பெறலாம் என்று பரபரப்பாக இருக்கிறதா?

பொறுங்கள் - கொஞ்சம் தள்ளிப் போடுங்கள்!!

என்ன - முதலுக்கே மோசமாக இருக்கிறதா?

யாரையாவது கேட்பதற்கு முன்னால் உங்களையே சில கேள்விகள் கேட்டுக் கொள்ளுங்கள்.
1. வேறு முக்கியமான வேலை வந்தததால் எடுத்த வேலையைத் தள்ளிப் போடுகிறீர்களா? இல்லை, சோம்பல் காரணமாகத் தள்ளிப் போடுகிறீர்களா?

2. நேரத்தை வீணடிப்பதென்பது நம்மையும் அறியாமல் நிகழக்கூடிய விஷயம்தான். ஒரு நாளில் எந்த நேரத்தை எப்படி வீணடித்தீர்கள் என்பதை தினமும் டயரியில் குறித்து வையுங்கள்.

3. தள்ளிப் போடுவதை ஒரு வழக்கமாகத் தொடங்கி, வாழ்க்கை முறையாகவே ஆக்கிக் கொண்டவர்கள் எத்தனை பேர்களை உங்களுக்குத் தெரியும்? அவர்கள் என்ன ஆனார்கள்?

இதையெல்லாம் செய்தாலே தள்ளிப் போடுவதில் இருக்கும் எதிர்மறையான விளைவுகள் பற்றி நமக்குப் புரிந்துவிடும்.

ஒரு மளிகைக் கடைக்குப் போகும்போதே நம்மிடம் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியல் இருக்கிறதே, ஒவ்வொரு விடியலின் போதும் அந்த நாளில் செய்து முடிக்க வேண்டிய விஷயங்களின் பட்டியல் வேண்டாமா என்ன?

தள்ளிப் போடும் பழக்கம் நம்மை விட்டுத் தள்ளிப் போக அடிப்படையில் இன்னொரு வேலையையும் செய்தாக வேண்டும்.

அதுதான் விடியல் பொழுதைப் பயன்படுத்துவது. விடிந்து சிறிது நேரம் சென்றபிறகு விழிப்பவர்களுக்கு நாள் நகர்கிற வேகத்திற்கு ஈடு கொடுத்து, அதைத் துரத்திப் பிடிப்பதே பெரியபாடாகி விடுகிறது.

விடியல் நம்மை நன்றாக வேலை வாங்கக் கூடிய நேரம். தள்ளிப் போடுவதைத் தவிர்க்க வேண்டுமென்றால், அந்த வேலைக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை சேகரித்துக் கொண்டு, அதன் பின்னர் வேலையைத் தொடங்குவதே உத்தமம்.

இந்தக் கட்டுரையை எழுதுவதற்குக்கூட பேனா, பேப்பர், கிளிப், எழுதுவதற்கான அட்டை என்று ஒவ்வொன்றையும் தவணை முறையில் எடுத்துக் கொண்டு வந்தால், இதை எழுதி முடிக்கிற வேலை கண்டிப்பாகத் தள்ளித்தான் போகும்.
இதையெல்லாம்விட முக்கியம், ஏன் தள்ளிப் போடுகிறோம் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வது.

ஒரு நாள் முழுவதும் இயந்திரம்போல் யாரும் வேலை பார்த்துக் கொண்டே இருப்பதும் சாத்தியமில்லை.

உல்லாசத்திற்குக் கொஞ்ச நேரம், பொழுதுபோக்குக் கொஞ்ச நேரம், நண்பர்களுடன் பேச சிறிது நேரம் என்று எத்தனையோ விஷயங்களுக்கு சில நிமிஷங்களை அவ்வப்போது ஒதுக்க வேண்டிவருகிறது.

ஏகத்துக்கு வேலை இருப்பதாக நினைப்பவர்கள் இந்த சின்னச் சின்ன சந்தோஷங்களை முற்றாக நீக்கிவிட்டு, வேலையிலேயே முழு கவனம் செலுத்துவதாய்த் தொடங்குவார்கள்.

இடையில் அலுப்புத்தட்டத் தொடங்கிவிட்டால் போச்சு. இந்த வேலை - சொந்த வேலை - எந்த வேலையையும் செய்யாமல், வேலைக்கான ஆயத்தப் பணியை வேண்டுமென்றே நீட்டிக்க மனது தூண்டத் தொடங்கும். உற்சாகமும் தூங்கத் தொடங்கும்.

நம்முடைய நேரங்களை சமவிகிதத்தில் சரியாகப் பங்கிட்டு வேலைகளில் ஈடுபடப் பழகிவிட்டால் நேரம் வீணாவதை நிச்சயமாகத் தடுக்கலாம்.
என்ன செய்ய விரும்புகிறோம் - என்ன செய்து கொண்டிருக்கிறோம். இந்த இரண்டுக்கும் நடுவிலான இடைவெளியை அதிகமாக்குவதே தள்ளிப் போடுகிற மனோபாவம்தான்.

இன்னொன்றும் முக்கியம். ஒரு நாளில் எத்தனையோ வேலைகள் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் மிக முக்கியமான வேலை என்று மூன்றை மட்டும் பட்டியலிடுங்கள். அவற்றை முதலில் முடித்துவிடுங்கள். அதன்பின், மற்றவற்றைச் செய்ய உங்களுக்கு உற்சாகம் தானே பிறக்கும்.

நாள் முழுவதும் காரியங்களைத் தள்ளிப் போடாமல் சாதகமாகச் செய்ய வேண்டுமென்றால், அதற்கு விடியற்காலை விசேஷமானது என்று பார்த்தோம்.

விடியற்காலையைப் பயன்படுத்திக் கொள்ள மிகவும் உகந்த வழி, இரவு விரைவிலேயே உறங்கப் போவதுதான்.

தூங்குவதற்கு இரண்டு மணி நேரங்கள் முன்பே தொலைக்காட்சி - கணினி ஆகியவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

தள்ளிப் போடத் தூண்டும் சோம்பல், உங்களை விட்டுத் தள்ளிப் போகும். தள்ளிப் போடாதீர்கள். துள்ளியெழுங்கள்.

குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா !---

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது

SOURCE: NAMADHUNAMBIKKAI.


நன்றி  :

No comments: