Saturday, April 17, 2010

கொடுக்குறதை கொடுத்தாதான்...


ஒரு ஊர்லே ஒரு மருமவ இருந்தாளாம். மாமியாக்காரி எதை சொன்னாலும் புரிஞ்சுக்காம வேற ஏதாவது செய்வாளாம். அது மாதிரி நேரத்துலே மாமியாக்காரி தொடப்பத்தை எடுத்து நல்லா நாலு வாங்குவாளாம். தொடப்ப அடி பட்டதுக்கு அப்புறமா தான் மாமியாக்காரி சொன்னதை கரீக்ட்டா செய்வாளாம் மருமவ.

”தெனமும் சாயங்காலம் விளக்கு வெக்குறதுக்கு முன்னாடி போய் தண்ணி புடிச்சிக்கிட்டு வாடி”ன்னு மாமியாக்காரி சொன்னா மருமவ வெளக்கு வெச்சதுக்கப்புறமா தான் கொடத்தை கையிலே எடுப்பாளாம். அதனால தெனமும் வெளக்கு வெக்குறதுக்கு முன்னாடி மாமியாக்காரி தொடப்பத்தை எடுத்து நல்லா விளாசி விட்டுருவாளாம். தொடப்பக்கட்ட அடி வாங்குனதுக்கு அப்புறமா தான் தண்ணி புடிக்க மருமவ கொடத்தை எடுக்குறது வழக்கம்.

ஒரு முறை மருமவளோட அம்மா வீட்டுலேர்ந்து ஏதோ சீர் செய்ய வந்திருந்தாங்களாம். அவங்க வந்தது சாயங்கால நேரம். மாமியாக்காரி கிட்டே சீர்வரிசையை கொடுத்து “எம்பொண்ணு நல்லா நடந்துக்கறாளா”ன்னு கேட்டாங்களாம். மருமவளப் பத்தி அவங்க வீட்டுக்கே கம்ப்ளையண்ட் பண்ணக்கூடாதுன்னு “ரொம்ப நல்லா நடந்துக்கறா என் மருமவ”ன்னு மாமியாக்காரி பெருந்தன்மையா சொல்லியிருக்கா. அவங்க வீட்டு மனுஷா முன்னாடி “போம்மா, வாம்மா”ன்னு மருமவளை கவுரதையாவும் மாமியாக்காரி நடத்தியிருக்கா.

விளக்கு வெக்குற நேரம் வந்துருக்கு.

”மருமவளே வெளக்கு வெக்கிற நேரம் வந்தாச்சு. போயி தண்ணி புடிச்சாந்துரும்மா”ன்னு மாமியாக்காரி தன்மையா சொல்லியிருக்கா.

கொடத்தை இடுப்புலே வெச்சிக்கிட்டு வந்த மருமவ, மாமியாக்காரி முன்னாடியும், தன் வீட்டுக்காரங்க முன்னாடியும் முறைச்சிக்கிட்டு நின்னுக்கிட்டிருந்தாளாம்.

மருமவளோட அம்மா, “ஏண்டி அத்தை தான் சொல்றாங்க இல்லை. போயி தண்ணி புடிச்சிக்கிட்டு வாடி”ன்னு சொல்லியிருக்காங்க.

ஒடனே மருமவ, “அத்தை! நீங்க கொடுக்குறதை கொடுத்தா தான் நான் தண்ணி மொண்டாருவேன்”ன்னு சொன்னாளாம்.

மாமியாக்காரிக்கு தர்மசங்கடமாப் போச்சி. “சீக்கிரமா போயி தண்ணி மொண்டாந்துரும்மா. அம்மா, அப்பாவெல்லாம் வந்துருக்காங்க இல்லே”ன்னு பாசமா சொன்னாளாம்.

மறுபடியும் மருமவ, “கொடுக்குறதை கொடுங்க அத்தே. தண்ணி மொண்டாறேன்”னு அடமா சொன்னாளாம்.

உடனே மருமவளோட அம்மா, “ஏன் சம்பந்தி, என் பொண்ணுக்கு ஏதோ பாசமா கொடுப்பீங்களாமே? அதை கொடுங்க, அவ தண்ணி மொண்டாந்துருவா”ன்னு வெவரம் புரியாம வெள்ளந்தியா சொல்லியிருக்காங்க.

நெலைமை கட்டுமீறி போவறதை பார்த்த மாமியாக்காரி வேற வழியில்லாம தொடப்பக்கட்டைய எடுத்து மருமவள நாலு வாங்கு வாங்கினாளாம். அதுக்கப்புறமா தான் மருமவ தண்ணி மொண்டார போனாளாம். மருமவ வீட்டிலேர்ந்து வந்தவங்க வாயடைச்சிப் போனாங்களாம்.

கதை சொல்லும் நீதி : கொடுக்குறதை கொடுத்தா தான் ஆலமரத்துப் பிசாசு அடங்குமாம்.

No comments: