Thursday, January 26, 2012

பதற்றம் தவிர்! வெற்றி நிச்சயம்!


 பதற்றம்! ஆங்கிலத்தில் இதனை Anxiety என்று குறிப்பிடுகின்றார்கள். அடுத்து என்ன நடந்திடுமோ என்ற பயம் கலந்த அச்சம். இது ஒரு மனித பலவீனம். இதனை நாம் வென்றாக வேண்டும்.
தனி மனித வாழ்விலும் சரி, குடும்ப வாழ்விலும் சரி, தொழில் துறை அல்லது பணியிடம் ஆனாலும் சரி, தொண்டனாக இருக்கும் போதும் சரி, தலைவர் பொறுப்பில் இருக்கும் போதும் சரி – இந்த பதற்றம் கூடவே கூடாது.
ஏனெனில் – பதற்றம் – நமது செயல் திறனை பாதிக்கும் (performance).
பதற்றம் – நமது முடிவெடுக்கும் திறனை பாதிக்கும் (interferes decision making).
பதற்றம் – எந்த ஒன்றிலும் நமது கவனத்தைக் குவித்திட இயலாமல் தடுக்கும் (shatters concentration).
எந்த ஒரு செயலையும் நாம் அழகே செய்து முடித்திட நிதானம் தேவை. அவசரம் கூடாது. பதற்றம் எந்த ஒரு காரியத்தையும் கெடுத்து விடும். பதறாத காரியம் சிதறாது என்பது முதுமொழி.
சாதாரண சூழலில் யாரும் பதற்றம் அடைய மாட்டார்கள் தான். ஆனால் சில அழுத்தம் தரும் சூழல்கள் (stressful situations) பதற்றத்தைக் கொண்டு வரலாம். அந்த சமயங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதே நமது ஆளுமையை (personality) நிர்ணயிக்கும்.

இதோ பதற்றம் வரவழைக்கும் சூழல்களில் சில:

மாணவர்கள் தேர்வு எழுதும் முன்பு.
ஏதேனும் அவசியமான பொருள் ஒன்று அவசியமான நேரத்தில் தொலைந்து விட்டால்.
அவசிய வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் போது Traffic jam ஏற்பட்டால்.
புதிதாக ஒரு இடத்துக்குச் சென்றிருக்கும் போது.
முற்றிலும் புதிதான மனிதர்கள் (strangers) இருக்கும் இடத்தில்.
சொற்பொழிவுக்கு முன்னர்.
நேர்முகத் தேர்வுக்கு முன்னர் – நேர்முகத் தேர்வின் போது.
சரி, இப்படிப்பட்ட தருணங்களில் பதற்றம் தவிர்க்க என்ன வழி?
ஆசுவாசப் படுத்துதல் – Relaxation!
நன்றாக மூச்சை இழுத்து விடுதல்.
நகைச்சுவை உணர்வை வரவழைத்துக் கொள்ளுதல்.
“நல்லதே நடக்கும்” என்ற சிந்தனையை வலிந்து நினைத்தல்.
எது நம் கைகளில் இல்லையோ அது குறித்து கவலைப் படுவதைத் தவிர்த்தல்.
எது நம் கைகளில் உள்ளதோ அது குறித்து ஆகக் கூடிய காரியத்தில் இறங்குதல்.
இறைவன் மீது நம்பிக்கை (தவக்குல்) வைத்தல். துஆ செய்தல்.
சரி, பதற்றமான சூழல்களில் அண்ணலார் (ஸல்) அவர்களின் முன்மாதிரி எப்படி என்று பார்ப்போமா?
பத்ர் போருக்கு முன். நபியவர்கள் பதற்றப் பட்டார்களா? இல்லையே! ஏன்? எந்த ஒரு போரின் போதும் சரி நபியவர்கள் பதற்றப்பட்டதே கிடையாது.
அரபுலகம் முழுவதுமே திரண்டு வந்து மதீனாவை முற்றுகையிட்டு அழித்திட வந்த அகழ் யுத்தத்தின் போதும் நபியவர்கள் பதற்றம் அடைந்திடவில்லை. நபித்தோழர்களும் பதற்றம் அடைந்திடவில்லை.
அவ்விடத்தில் முஃமின்கள் (பெருஞ்) சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, இன்னும் கடுமையான அதிர்ச்சியினால் அதிர்ச்சிக்கப்பட்டார்கள். (33: 11)
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. அன்றியும், முஃமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, “இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்” என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை. (33: 21 – 22)
பொதுவாகச் சொல்வதென்றால் – எல்லா இறைத்தூதர்களின் வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட சூழல்கள் நிறைந்தே காணப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழல்களில் வைத்துத் தான் அல்லாஹு தஆலா இறைத்தூதர்களுக்கும் இறை நம்பிக்கை கொண்ட அந்த நபித் தோழர்களுக்கும் “பயிற்சி” அளித்திருக்கின்றான்.
ஹிஜ்ரத்தின் போது தவ்ர் குகையில் அண்ணலாரும் அபூ பக்ர் சித்தீக் அவர்களும் தங்கியிருந்த சமயம் பதற்றத்திற்குரியது தான். “பயப்பட வேண்டாம்! அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்!” என்றார்கள் நபியவர்கள்.
அதுவெல்லாம் சரி! நாம் எப்படி நிதானத்தைக் கற்றுக் கொள்வது?
தினமும் அதற்குப் பயிற்சி அளிக்கின்றானே அல்லாஹு த ஆலா!
என்ன அது?
ஐந்து வேளை தொழுகையைத் தான் சொல்கின்றேன். அவசரப்படாமல் நிதானமாகத் தொழுங்கள்!
இன்னும் சொல்லப்போனால் – உளூவை நிதானமாகச் செய்யுங்கள்.
பள்ளிக்கு நிதானமாக கம்பீரத்துடன் நடந்து வாருங்கள். ஓடி வர வேண்டாம் என்பது நபிமொழி.
“தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் ஓடி வராதீர்கள். நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். கிடைத்ததைத் தொழுங்கள். தவறியதைப் பூர்த்தி செய்யுங்கள்.” (புஹாரி )
தொழுகையில் நிதானமாக குர் ஆனை நிறுத்தி நிறுத்தி ஓதுங்கள்.
மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக. (73: 4)
தொழுகையின் ஒவ்வொரு நிலையிலிருந்து மறு நிலைக்குச் செல்லும் போது நிதானத்தைக் கடைபிடிக்கவும்.
இவ்வாறு நிதானமாக ஒவ்வொரு நாளும் நாம் பெற்றுக் கொள்கின்ற பயிற்சி, நமது வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் நமக்கு நிச்சயம் உதவும்.
நாம் தான் இரண்டு ரக்அத் தொழுகையை இரண்டு நிமிடங்களில் முடிப்பவர்கள் ஆயிற்றே!
அவசரம் அவசரமாக தொழுது முடிக்கப் படும் தராவிஹ் தொழுகையும் நமக்கு எப்படி பயிற்சியாக அமையும்?
இன்றிலிருந்து நிதானமாகத் தொழுவோம் தானே!
பதற்றம் தவிர்க்க இதுவே சிறந்த வழி! வெற்றிக்கான வழியும் கூட!
நமது பாங்கொலியே இதற்குச் சான்று!
“தொழுகையின் பக்கம் வாருங்கள்! தொழுகையின் பக்கம் வாருங்கள்!
“வெற்றியின் பக்கம் வாருங்கள்! வெற்றியின் பக்கம் வாருங்கள்!
by நீடூர் SA மன்சூர் அலி M.A., B.Ed.,
Source : http://meemacademy.com/?p=731

No comments: