Friday, April 6, 2012

வெகுளாமை - கோபம் - கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

 வெகுளாமை
குறள் 301:

    செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
    காக்கின்என் காவாக்கா.
மு.வ உரை:

    பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?.

குறள் 309:

    உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
    உள்ளான் வெகுளி எனின்.

மு.வ உரை:

    ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.

 ---------------------------------------------
கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) - புகாரி) (Volume 8, Book 73, Number 135)

"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்" என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்.


கோபம் ஏன் ஏற்படுகின்றது?

கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை  காரணமாக உண்டாகிறது.

   நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள்  மதிக்காத போது...
  
 நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது...
  
  நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது...
  
எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது ...

இப்படியே பல காரணங்கள் உள்ளன.

ஒருவன் நம்மைப் பார்த்து "கழுதை" என்று திட்டும்போது நாம் "குரங்கு" என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும்.

ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம்.  அல்லது நம்மை நாமே  தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு  கோபமாகும்.

கோபம் தன்னையே அழித்து விடும்

மனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து - பாராட்டி - உதவி செய்து  வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும்.

ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.

கோபம் கொள்வதால் நமது சிந்தனை,  கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்...

    வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்)
  
 திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும்.
  
  தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது.
  
 மனஇருக்கத்தை இருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.
  
முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது.

கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள. 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.

    கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது  மாரடைப்பில் விட்டு விடும்.
  
 இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான்.
  
 மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு.

ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.

கோபத்தைக் கட்டுப்படுத்துதல்:

கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

கோபத்தை குறைக்க சில வழிகள்:

   1.கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.
   2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.
   3.அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்
   4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.
   5.செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.
   6.கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்
   7.நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புகளை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
   8.எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.
   9.சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.
  10.கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
  11.முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.

நீண்ட நாள் சந்தோசமாக வாழ வேண்டுமானால் நிச்சயம் நாம் கோபத்தை குறைத்தாக வேண்டும்.

Source : http://chittarkottai.com/general/anger.htm
--------------------------------------------------------------------------


கோபம் !

அறிவிப்பாளர்: அபூஹுரைரா  رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன் ஆவான். (அதாவது கோபம் வரும்போது இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் விருப்பமில்லாத செயலை தவிர்ப்பவன்) (புகாரி)

   அறிவிப்பாளர் : அத்தியா அஸ் ஸஅதி  رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான். நெருப்பு, நீரால் மட்டுமே அணைகின்றது. எனவே, உங்களில் ஒருவருக்கும் கோபம் வந்துவிட்டால் அவர் ஒளு செய்து கொள்ளட்டும். (அபூதாவூத்)

   அறிவிப்பாளர் : அபூதர்  رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். இப்படிச் செய்து கோபம் மறைந்துவிட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும். (மிஷ்காத்)

 அறிவிப்பாளர் : அபூஹுரைரா  رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள்: “என் அதிபதியே! உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும் நேசத்திற்குரியவர் யார்? ”இறைவன் கூறினான்“ எவர் பழி வாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் மன்னித்துவிடுகின்றாரோ அவரே என்னிடம் மிகவும் நேசத்திற்குரியவர் ஆவார். (மிஷ்காத்)

அறிவிப்பாளர் : அனஸ்  رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “(உண்மைக்கு மாறாகப் பேசுவதைவிட்டு) தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தைத் தடுத்துக் கொள்பவனை விட்டு மறுமை நாளில் வேதனையை அல்லாஹ் அகற்றிவிடுவான். இறைவனிடம் மன்னிப்புக் கோருபவனை அல்லாஹ் மன்னித்துவிடுவான்.  (மிஷ்காத்)

 அறிவிப்பாளர் : அனஸ்  رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “மூன்று விஷயங்களை இறை நம்பிக்கையாளரின் பண்புகளில் கட்டுப்பட்டவையாகும்:
ஒருவனுக்கு கோபம் வந்தால் அவனது கோபம் அவனை ஆகாத செயலைச் செய்ய வைக்கக் கூடாது. அவன் மகிழ்ச்சியடைந்தால், அவனது மகிழ்ச்சி சத்தியத்தின் வட்டத்தைவிட்டு அவனை வெளியேற்றிவிடக் கூடாது.
அவனுக்கு வலிமையிருந்தாலும், அவனுக்கு உரிமையில்லாத பிறருடைய பொருள்களை அவன் அபகரித்துக் கொள்ளக் கூடாது.  (மிஷ்காத்)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா  رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் ஒரு மனிதர், “எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள் என்று கேட்டுக்கொண்டார். (அந்த மனிதர் அநேகமாக சீக்கிரம் கோபத்திற்குள்ளாகும் இயல்பு கொண்டவராக இருந்தார்.) அதற்கு அண்ணலார், “கோபம் கொள்ளாதீர்  என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், “எனக்கு அறிவுரை கூறுங்கள்! என்று மீண்டும் மீண்டும் (பலமுறை) கேட்டுக் கொண்டார். அண்ணலார் ஒவ்வொரு முறையும் “நீர் கோபம் கொள்ளாதீர்!  என்றே பதில் தந்தார்கள். (புகாரி)
Source : http://www.readislam.net/anger.htm

No comments: