Monday, June 18, 2012

மனச்சோர்வுக்கு ஆளாக்கப் படும் குழந்தைகள்!

ஆங்கிலத்தில் ஒரு சொல். Depression.
இதற்கு ஆங்கிலத்தில் இப்படி பொருள் கொள்கிறார்கள்: “The state of feeling very sad (and anxious) and without any hope.
தமிழில் இதனை – “ஆழ்ந்த கவலையில் மூழ்கியிருக்கும் நிலை” என மொழி பெயர்க்கலாம்.
அந்தக் கவலைக்குக் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு விடிவு தெரியாத நிலையில் விரக்தியும் சோகமும் நிலை கொள்வதால் இதனை மனச் சோர்வு என்றும் பொருள் கொள்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஆழ்ந்த கவலை எதனால் ஏற்படுகின்றது, இந்நிலை ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன என்பதை ஆய்வதற்கு முன்பு சில தகவல்கள்…
இந்த ஆழ்ந்த கவலை என்பது நவீன உலகம் நமக்களித்த “பரிசு” என்றால் அது மிகையில்லை!
நமது இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டை – “The Age of Meloncholy” – அதாவது மனிதர்களை விரக்திக்கு இட்டுச் செல்லும் காலம் என்று வர்ணிக்கிறார்கள். (கடந்த இருபதாம் நூற்றாண்டை – “The Age of Anxiety” - அதாவது பதற்றத்தின் காலம் என்று வர்ணித்தார்களாம்.)
நவீன வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்த எல்லா நாட்டு மக்களையும் தொற்றிக் கொண்டிருக்கின்ற ஒரு நோய் தான் இது!
கட்டுக்கோப்பான, கட்டுப்பாடான குடும்ப அமைப்பு சிதறிப் போனமை,
அதிகரித்துக் கொண்டே செல்கின்ற திருமண முறிவுகள்.
குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் அலட்சியம்;
வேலைப் பளுவின் காரணம் காட்டி – குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்காமை.
இறை நம்பிக்கையின் அடிப்படையில் வாழத் தவறியமை.
மற்றவர்களைப் பற்றிய அக்கரையற்ற சமூகச் சூழல்.
மனதுக்கு ஆறுதல் அளிக்க என்று எந்த ஒரு அமைப்பும் இல்லாத நிலை.
இப்படிப்பட்ட காரணங்களாலேயே குழந்தைகள் சோக மயம் ஆகிறார்கள்.
இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் – இந்த ஆழ்ந்த கவலை தொற்றிக் கொள்கின்ற வயது என்ன தெரியுமா? பத்து வயதிலிருந்து பதிமூன்று வயதுக்குள்! அதாவது நமது சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும்.
கவலைப் படுவது என்பது வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு அம்சம் தானே – இதற்குப் போய் ஏன் கவலைப் படுகிறீர்கள் என்று கேட்கப் படலாம்.
சின்னச் சின்னப் பிரச்னைகள் ஏற்படுவதும், அது பற்றிக் கவலைப் படுவதும், பின்னர் பிரச்னை தீர்ந்து விட்டால் அதிலிருந்து விடுபட்டு விடுவதும், வாழ்க்கையின் யதார்த்தமே.
ஆனால் நாம் இங்கே சொல்ல வருவது ஆழ்ந்த கவலை குறித்து. அதுவும் சிறிய வயதிலேயே தொற்றிக் கொள்கின்ற ஒரு எதிர்மறை மன நிலை குறித்து.
சிறு வயதிலேயே ஆழ்ந்த கவலைக்கு ஆட்பட்டு விடுபவர்கள் தான் – பின்னாட்களில் மனச் சோர்வாளர்களாக ஆகி விடுகிறார்கள் என்பதும் ஆய்வுகள் தெரிவிக்கும் செய்தியாகும்.
அப்படியானால் இந்த Depression குறித்து நாம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
குழந்தைகளுக்கு கவலை எப்படி ஏற்படுகிறது?
குறிப்பாக இரண்டு சூழல்களில் தான் குழந்தைகள் கவலைக்கு ஆளாகிறார்கள்:
ஒன்று: தன் முயற்சியில் தோல்வி அடைந்திடும் போது.
ஒரு காரியத்தில் இறங்குகிறான் ஒரு சிறுவன். அதில் தோல்வி அடைகின்றான். அல்லது ஒன்றை அடைந்திட முயற்சி செய்கின்றான். அது அவனுக்கு கிட்டிடவில்லை. அடுத்து என்ன செய்தால் தான் நினைத்தது கைகூடும் என்று அவனுக்குத் தெரியவில்லை. தான் எதற்கும் இலாயக்கில்லை என்று எண்ணத் தொடங்குகிறான். அப்போது தான் அவனை கவலை தொற்றிக் கொள்கிறது!
இரண்டு: மற்றவர்களோடு பழகுவது எப்படி என்பது புரியாத போது.
கவலைக்கு இன்னொரு காரணம் அவன் மற்றவர்களோடு பழகும் போது ஏற்படுகின்றது. ஏதோ ஒரு தேவைக்காக மற்ற ஒருவனை அணுகுகின்றான். அதை அவன் மறுத்து விடுகின்றான். இவன் அவனை விட்டு விலகி விடுகின்றான். தொடர்பை முறித்துக் கொள்கின்றான். மறு படி அவன் வந்து “சமாதானம்” பேசினாலும் அதனை இவன் ஏற்பதில்லை. அவன் எதிரே வந்தாலும் தலையைத் திருப்பிக் கொண்டு விலகிச் சென்று விடுகின்றான். இப்படியாக அவன் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்கின்றான். விளைவு: கவலை!!!
இப்படிப்பட்ட இரண்டு சூழ்நிலைகளில் இருந்தும் இத்தகைய சிறுவர்களைக் காப்பாற்றிட வேண்டியது யார் பொறுப்பு?
பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு இதில் நீங்காப் பொறுப்பு இருக்கிறது என்கிறார்கள் வல்லுனர்கள்.
சோக வயப்பட்ட குழந்தைகள் – படிப்பில் கவனம் செலுத்திட இயலாது! இப்படிப்பட்ட குழந்தைகள் பள்ளியிலிருந்து இடையிலேயே நின்று விடும் நிலையும் (drop out) ஏற்பட்டு விடுகிறது.
எனவே – ஆசிரியர்கள் அன்றாடம் நடத்துகின்ற பாடங்களோடு சேர்த்து – தோல்வியைச் சந்திப்பது எப்படி என்றும், அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடப்பது எப்படி என்றும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்திட வேண்டும். (மேலை நாடுகளில் சில பள்ளிகளில் இவ்வாறு சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விட்டனர்).
அடுத்து பெற்றோர்கள்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் காட்டினால்? தந்தை எப்போதும் வேலை வேலை என்று தனது தொழிலில் பிஸியாக இருந்து விட்டால்? தாய்க்கு தன் பிள்ளைகளைப் புரிந்து கொள்ளத் தெரியவில்லை என்றால்? கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்தால்? கணவனும் மனைவியும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டிருந்தால்……..? என்னவாகும் குழந்தைகள்?
குழந்தைகளின் கவலைகளை நீக்கிடப் போதுமான விழிப்புணர்வு இன்னும் ஏற்படாத காரணத்தினால் தான் உலக அளவில், சோகத்துக்கு ஆளாகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றதாம். இதற்கு வழி ஒன்றை நாம் கண்டே ஆக வேண்டும் தானே!
குழந்தைகளின் கவலைகளைப் போக்கிட இஸ்லாம் என்ன தீர்வு தருகின்றது?

ஒன்று:
மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்வை இறைவன் கற்றுத் தருகின்றான். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருந்திட வேண்டும் எனில் பெற்றவர்கள் முதலில் மகிழ்ச்சியாக இருந்திட வேண்டும்.
 
இரண்டு:
போதும் என்ற மனப்பான்மையுடன் வாழ்ந்திடக் கற்றுத் தருகின்றான் இறைவன். பொருள்களை வாங்கி வாங்கிக் குவிப்பதில் மகிழ்ச்சி இல்லை என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்குப் புரிய வைத்திட வேண்டும்.
 
மூன்று:
மற்றவர்களுடன் மகிழ்ச்சியோடு பழகுவது எப்படி என்று கற்றுத் தருகின்றான் இறைவன். சிரித்த முகத்தோடு அணுகுவது, கை குலுக்குவது, சலாம் சொல்வது, அன்பளிப்புகளைப் பகிர்ந்து கொள்வது, மற்றவர்களுக்கு முன்னுரிமை தருவது, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, மன்னிக்கும் மனப்பான்மை, வீணான சந்தேகங்களைத் தவிர்த்தல், கோள் சொல்லாமை, மற்றவர்க்கு உதவி செய்தல் மற்றும் துஆ செய்தல் – இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
மற்றவர்களோடு பழகுவது எப்படி என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுத் தந்திட வேண்டும். பெற்றோர்களின் முன்மாதிரியை அப்படியே பின்பற்றுவார்கள் என்பதால், பெற்றோர்கள் மற்றவர்களுடன் இனிமையாகப் பழகுவதை வழக்கமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும் அதற்குத் தக நடந்து கொள்வது எப்படி என்பதையும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் புரிய வைத்திட வேண்டும்.
குழந்தைகள் கவலை தோய்ந்தவர்களாக ஆவதிலிருந்து காப்பதே சாலச் சிறந்தது. ஏனெனில் ஒரு முறை அவர்கள் சோக வயப் பட்டு விட்டால், காலம் முழுவதும் அது தொடருமாம்!
குழந்தைகளை மகிழ்ச்சியுடன் வைத்திருத்தல் சமூகக் கடமை. ஏனெனில் அவர்களே எதிர்கால சமூகத்தின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கப் போகிறவர்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது!
by S.A. மன்சூர்  அலி .M.A., B.Ed.,


Source : http://counselormansoor.blogspot.in/2012/01/blog-post_22.html