Saturday, June 23, 2012

முடிவுக்கு வா

                                                            முடிவுக்குவா
நீயும் நானும்
செய்துகொண்டிருப்பதென்ன
சிந்தையுண்டா உனக்கு
கயிறிழுத்துப் பார்க்கிறோம்
வாழ்ந்த வாழ்க்கைக்கு
கேவலம் இல்லையா
முடிவுக்கு வா

*

பலசாலியல்ல....
வாழக் கிடத்ததை
வாழாதிருப்பவர்

பலசாலியல்ல....
வாழ்வை விட்டுவிட்டு
வறட்டுத் தனம் பற்றிக்கொண்டவர்

பலசாலியல்ல....
உறவை வெளியேற்றி
வெறுமையில் அமிழ்ந்தவர்

பலசாலியல்ல...
வளையத் தெரியாது
வம்படி நிற்பவர்

பலசாலியல்ல....
வாழ்வின் கழிவுகளைக்
களையத் தெரியாதவர்

பலசாலியல்ல....
விட்டுக்கொடுப்பதோ
என்றோர் ஜம்பமடிப்பவர்

பலசாலியல்ல....
உசுராய் வந்ததை
உதறும் கர்வமுடையவர்

பலசாலியல்ல....
அன்பைத் தெரியாது
பிழைகளைத் துருவுபவர்

பலசாலியல்ல....
வாழத் தெரியாது
வீழ்வதில் பெருமையுடையவர்

பலசாலியல்ல....
சந்தேகங்களுக்கு
சந்தோசங்களை பலியிடுபவர்

பலசாலியல்ல....
முட்டாள்தனங்களையே
முறையென்று பற்றியவர்

பலசாலியல்ல
தொலைந்துபோவதே ஏதெனத் தெரியாது
சினம் கட்டிக் கூத்தாடுபவர்

பலசாலியல்ல
பழநெறிகள் பற்றிக்கொண்டு
துளிர் மனம் புதைப்பவர்

பலசாலியல்ல
காதல்தரும் மெல்மனப் பிறப்பறியாது
வஞ்சந்தரும் மரணங்கள் நேசிப்பவர்

*

நீயும் நானும்
செய்துகொண்டிருப்பதென்ன
சிந்தையுண்டா உனக்கு
கயிறிழுத்துப் பார்க்கிறோம்
வாழ்ந்த வாழ்க்கைக்கு
கேவலம் இல்லையா
முடிவுக்கு வா

 கவிதை ஆக்கம் கவிஞர் புகாரி  
Source http://anbudanbuhari.blogspot.in/

No comments: