Monday, November 18, 2013

கவிதையின் கதை - அன்புடன் புகாரி [பகுதி-2]

பதின்வயதில் விளையாட்டு
பருவத்தின் குறுகுறுப்பு
புதுவனப்பில் தரையிறங்கி
பகல்நிலாக்கள் வலம்போக

மதுக்குடத்தில் மனம்விழுந்து
மதிமயங்கிக் கூத்தாட
உதித்தகவி கொஞ்சமல்ல
ஒவ்வொன்றும் முத்தழகு

காதலெனும் புயல் ஊற்றைக்
கவியேற்றாக் கவியுண்டோ
காதல்நதி குதிக்காமல்
கவிஞனென்று ஆனதுண்டோ

காதலுக்குள் விழும்போதும்
காதலாகி எழும்போதும்
காதலோடு அழும்போதும்
கவிதைகளோ பலகோடி

கவிதைகளால் சிறகசைத்த
காகிதங்கள் பார்வையிட்டு
கவிஞரே என அன்போடு
கற்றுத்தரும் தமிழய்யா

உயிர்மலர எனையழைத்து
உற்சாகம் தந்திடுவார்
பயிர்வளர்க்கும் உழவன்போல்
பாசமுடன் அரவணைப்பார்

அடுக்கடுக்காய்ப் புத்தகங்கள்
ஆயிரமாய் அள்ளிவந்து
படிக்கவேண்டும் என்றெனக்குப்
பரிவோடு தந்திடுவார்

விடுப்பில்தான் படிக்கவேண்டும்
வேண்டாமிது இப்போது
இடுப்பொடியும் பாடமுண்டு
எப்படியும் முடிக்கவேண்டும்

மருத்துவனாய் எனையாக்க
மனமெல்லாம் கனவுகளாய்
இருக்கின்றார் என்வீட்டில்
எனைவிடுவீர் இப்போது

வருத்தம்தான் எனக்குவேறு
வழியுண்டோ கூறுங்கள்
விருப்பத்தை ஒத்திவைத்து
விடைகூறிப் புறப்பட்டேன்

போதுமான மதிப்பெண்கள்
பெற்றேநான் தேர்ந்தபோதும்
மோதிமுட்டிப் பார்த்தேன் நான்
முடியவில்லை மருத்துவமும்

சாதிவழிச் சலுகையில்லை
சந்துவழி வசதியில்லை
வேதனையில் விளைந்ததடா
வைரமணிக் கவிவரிகள்

                                                                        தொடரும் ...

கவிதையின் கதை - அன்புடன் புகாரி [பகுதி-1]

                                                           அன்புடன் புகாரி

நன்றி :http://anbudanbuhari.blogspot.in/

No comments: