Monday, November 18, 2013

கவிதையின் கதை - அன்புடன் புகாரி [பகுதி-3]

பட்டமொன்று பெற்றுவிட்டேன்
படையெடுத்தேன் வேலைகேட்டு
வெட்டவெளிப் பொட்டலிலே
வெறுமைகூட்டி நிற்கவைத்து

கெட்டகெட்ட கனவுகளைக்
கண்களுக்குள் கொட்டிவிட்டு
பட்டமரம் போல என்னைப்
பாதையோரம் நிறுத்தியது

எல்லோரும் மன்னரென்ற
என்நாட்டு நாற்காலி
அல்லாடும் மனத்தோடு
அரபுநிலம் புறப்பட்டேன்

சொல்லவொருச் சொல்லுமில்லை
சுகம்பெற்றேன் சத்தியமாய்
இல்லாமைப் பேய்விரட்டி
என்வீட்டைக் காத்திட்டேன்

பாலைவனச் சாலைகளில்
பார்த்ததெலாம் நெருப்பெனினும்
ஊளையிடும் வறுமைபோக்கி
உறவுகளைக் காத்துநின்று

மாலையிட்டு மக்களீன்று
மனம் முழுதும் பசுமை பூக்க
வேலை தந்தப் பாலைவனம்
வேதனையைத் தீர்த்த தெய்வம்

பெற்ற மண்ணை உறவை நட்பை
பிரிந்துவந்த சோகவிதை
நெற்றிவரி இழுத்துச்சென்ற
நிலம்விழுந்து முட்டிமோத

பெற்றதுன்பம் கொஞ்சமல்ல
பிரிவென்பதும் வாழ்வுமல்ல
கற்றபெரும் அனுபவங்கள்
கவிதைகளாய் வெடித்ததடா

                                                    தொடரும் ...
கவிதையின் கதை - அன்புடன் புகாரி [பகுதி-1]

 கவிதையின் கதை - அன்புடன் புகாரி [பகுதி-2]
அன்புடன் புகாரி

நன்றி :http://anbudanbuhari.blogspot.in/

No comments: