Thursday, November 21, 2013

மின்சாரம் – அப்படீன்னா என்னங்க !?

மின்சாரம் – ஆட்சியை மாற்றுகிறது, ஆளுபவர்களை மாற்றி பேச வைக்கிறது, இருட்டை அழைக்கிறது, கொசுவுக்கு வரவேற்பு வைக்கிறது, உரைந்த ஐஸ்-ஐ உருக வைக்கிறது… இப்படியாக சொல்லிக் கொண்டே போனாலும், இன்றைய சூழலில் நமதூரில் மட்டுமா தமிழகம் முழுவதும் மின்சார தட்டுப்பாடு தலை விரித்தாடுகின்றது இதற்கு காரணம்தான் என்ன?

இதற்காக கார் எடுத்துகிட்டு போய் அப்பர் மலையேறி தனிமையில் யோசிக்க வேண்டியதில்லை, முதலில் தேவைக்கு  அதிகமாக நாம் மின்சாரத்தை பயன்படுத்த ஆரம்பித்தோம். அதற்கு காரணம் பெரும்பாலான எலக்ட்ரானிக் (மின்னனு) சாதனங்கள் மின்சாரத்தை அடிப்படையாக கொண்டு இருப்பதால் மின்சாரத் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகின்றது.


அடுத்ததாக அரசும்  உற்பத்தியை அதிகரித்து இருக்க வேண்டும்  ஆனால் முந்தை, இன்றைய அரசுகள்  அதைச் செய்யவில்லை. அவ்வாறு அரசு  செய்யாததால் ஆறு அறிவு  படைத்த மனிதன் இரவு முழுவதும் ஐந்து அறிவு படைத்த கொசுவை விரட்டிக் கொண்டு இருக்கின்றான்.

மின்சாரம் மின்சாரம் என்ற கூக்குரல்! ஆனால், மின்சாரம் அப்படின்னா என்ன  ?

இந்த கேள்வியை அணு உலை எதிர்ப்பாளரிடம் கேட்டாலும் சரியான பதில் வராது அதையே அணு உலை  ஆதரவாளரிடம் கேட்டாலும் சரியான பதில் வராது. ஏன் அதிராம்பட்டினம் மின்சாரத்துறையிடம் கேட்டால் கூட சரியான பதில் கிடைக்குமா என்பது  சந்தேகமே.  இதை சொல்ல தலையை சுத்தி மூக்கை சொறியனுமா என்று ‘யாசிர்’ புலம்புவது காதில் விழுகின்றது விசயத்திற்கு வருவோம்.

மின்சாரம் என்றால் என்ன?  ஒளி என்பது ஒரு வகை ஆற்றல், ஒளியை புரோதான் (proton) துகள்கள்  என்று சொல்லலாம். அனைத்து பொருள்களிலும் எலக்ட்ரான்  என்ற மின்னணு ஒன்று (இறைவன்  படைப்பில் எத்தனை விதங்கள்)  உண்டு இந்த எலக்ட்ரானுக்கு கொஞ்சம் ஆற்றலைக் (அதாவது கொஞ்சம்  சூடு அல்லது உராய்வு) கொடுத்தால், அது இருக்கும் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும். இப்படி இந்த  எலக்ட்ரான் ஓட்டத்தைதான்  நாம் மின்சாரம் என்கிறோம். இந்த எலக்ட்ரான் ஓடுவதை தொட்டால் மரணம் தான் இது ஓடாமல் நின்றாலும் மரண வேதனைதான்.

மின்சாரம் என்பது  இரண்டு வகைப்படும் ஒன்று AC கரண்ட்  (இதிலும் இறைவன் ஜோடிகளை புகுத்தி உள்ளான்) இரண்டு ஜோடிகள் உள்ளன. இரண்டாவது DC கரண்ட்  இதில் இரண்டு ஜோடிகள் உள்ளன. அதாவது பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் இங்கே  ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த மின்சாரம் ஜோடியாகவே இருக்க வேண்டும்  ஜோடியில் ஒன்று இல்லை என்றாலும் வேலைக்கு ஆகாது. இந்த ஜோடி ஒன்று சேர்ந்தால் தான் உருப்படியாக எதையும் செய்ய முடியும் பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் இரண்டும் இருந்தால் தான் இயக்கவோ அல்லது செலுத்தவோ முடியும்.

E-B-ஷேரிங்-இன்-இண்டியா


AC மற்றும் DC மின்சாரம் என்றால் என்ன ?

AC  – மின்சாரம்

AC (ALTERNATIVE CURRENT) மின்சாரம் என்பது ஆல்டர்னேட்டர் அல்லது ஜெனெரேட்டர் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாகும். குறைந்த இழப்பில் இதை நெடுந்தொலைவிற்கு கடத்த முடியும் (மத்திய அரசிடம் ‘அம்மா’ தனி வழித்தடம் கேட்பது இப்போது புரிகிறதா?). எனவேதான் நம் மத்திய அரசு நெய்வேலியில் மின்சாரம் உற்பத்தி செய்து கர்நாடகவிற்கு கடத்துகின்றது. இது  கடத்தலுக்கு எளிமையாய் இருப்பதால் தான் தொழிற்சாலை வீடுகள் அனைத்திற்கும் இந்த AC மின்சாரம் பயன்படுத்தப்படுகின்றது. இந்த AC யை கடத்துவதற்கு செலவும் மிக குறைவு. நம் வீடுகளில் 220-வோல்ட்டுக்கு சிறிய அளவிலான சில்க் (Silk) வயரை பயன்படுத்தி அதாவது விலை  மலிவான கடத்தி / (wire) ஒயர்களை பயன்படுத்தி AC மின்சாரத்தை எளிமையாக  கடத்தி விடலாம். ஆனால், இந்த வகை கரண்டை சேமித்து வைக்க முடியாது.

DC – மின்சாரம்

(DIRECT CURRENT) DC மின்சாரம் என்பது பேட்டரி (Battery) மற்றும் சோலார் (Solar) செல் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரம் ஆகும். DC மின்சாரத்தை நெடுந்தொலைவுக்கு கொண்டு செல்ல முடியாது. காரணம் மின் சிதைவு அல்லது இழப்பு (power loss) என்று சொல்லப்படும்  மின்சார இழப்பு இந்த DC மின்சாரத்தில் ஏற்படும். ஆகவே, இந்த  DC மின்சாரத்தை கூடங்குளத்தில் இருந்து ஒரு 500 கிலோவாட் அனுப்பினால் அது அதிராம்பட்டினம் வரும் போது 100 கிலோ வாட் தான் கிடைக்கும். ஆகையால் இந்த DC கரண்டை எந்த கடத்தல் மன்னராலும் நீண்ட தூரம் கடத்த முடியாது. மேலும், இதை கொஞ்ச தூரம் கடத்துவதாக இருந்தாலும் தடிமனான கடத்தி (Wire) வேண்டும் உதரணமாக கார் பேட்டரி 12 வோல்ட் அல்லது 24 வோல்ட்  இருக்கும் அதற்கு தடித்த இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும் கவணித்துப் பார்த்தால் தெரியும். இந்த DC  மின்சாரத்தில்  ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதம் இதை சேமித்து வைக்கலாம் (அலாவுதீன் காகா விற்கு பிடித்த கரண்ட் )

ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த மின்சாரம் ஜோடியாகவே இருக்க வேண்டும் ஜோடியில் ஒன்று (நியூட்ரல் அல்லது பேஸ் – Phase) இல்லை என்றாலும் வேலைக்கு ஆகாது. இந்த ஜோடி ஒன்று சேர்ந்தால் தான் உருபடியாக எதையும் சுழல அல்லது எரிய விடமுடியும். பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் இந்த இரண்டும் இருந்தால்தான் எதையும் இயக்கவோ செலுத்தவோ முடியும். அதுபோல் மனிதர்களில் ஆண்-பெண்  ஜோடி, மரங்களில் ஆண்  மரம், பெண் மரம், இப்படி உலகில் ஏராளமான ஜோடிகள் இறைவனால் படைக்கப்பட்டுள்ளது. இந்த ஜோடிகளில் ஒன்றை பிரித்தாலும் உற்பத்தியோ அல்லது இனப்பெருக்கமோ உலகில் நடைபெற வாய்ப்புகள் கிடையாது. இந்த மின்சாரத்தை கண்டுபிடிப்பதற்கு முன்பே நம்மை படைத்த இறைவன்   அல்குர்ஆனில் இதைப் பற்றியெல்லாம் மிக விபரமாக கூறிவிட்டான்.அறிவுடையோருக்கு அல்குர்ஆன் ஒரு அறிய பொக்கிஷம்.

அல் குர்ஆன்

36:36. பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.

51:49. நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.

26:7. அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? – அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம்.

Sஹமீது

Source : http://adirainirubar.blogspot.in/