Friday, November 8, 2013

என் விருப்பம்



பார்முழுதும் அமைதித்தென்  றல்வீச  விருப்பம்;

பகையென்னும் புயற்காற்று நீங்கிடவே  விருப்பம்;

 கார்முகிலும் மும்மாரிப்  பொழிந்திடவே விருப்பம்;

காடுகளும் அழியாமற் காற்றுவர விருப்பம்;


பசுமையெனும் தாய்மையைநான்  காத்திடவேவிருப்பம்;

பயிரெங்கும் இயற்கையுரம்  தழுவிடவே  விருப்பம்;

பசுமரத்தா  ணியாய்மரபும்  நினைவிருக்க  விருப்பம்;

பைந்தமிழில் காவியங்கள் படைத்திடவே  விருப்பம்;


முழுசுகமும் உடல்மீது  முத்தமிட  விருப்பம்;

முயற்சிகளால் வாய்ப்புவாசல் திறந்திடவே விருப்பம்;

எழுதுவதும் எட்டுதிசை  எட்டிடவே விருப்பம்;

எல்லார்க்கும் உதவிடவே  என்கரங்கள்  விருப்பம்;


கண்ணியமாய்  மூத்தோரை  மதித்திடவே  விருப்பம்;

கற்றோரின்  காலடியில்  சுற்றிநிற்க  விருப்பம்;

புண்ணியங்கள் செய்வதனால் தீங்கொழிய விருப்பம்;

புவியெங்கும் பூமனங்கள் வாழ்ந்திடவே விருப்பம்


மதம்மொழியால்  பிரியாத  என்நாடு விருப்பம்;

மாணவர்கள் சாய்க்கடையில் வீழாமை விருப்பம்;

நிதம்நடக்கும் வன்முறைகள் இல்லாமை விருப்பம்;

நீதிகளும் எல்லார்க்கும் ஆகத்தான் விருப்பம்;


மண்ணகத்தில் உள்ளவற்றின் மனங்கவர விருப்பம்

மண்ணுக்குள் சென்றபின்னும் புகழ்மணக்க விருப்பம்;

விண்ணகத்தின் வானவர்கள் குடில்புகவே விருப்பம்;

வீணாகும் காலங்கள் முறைப்படுத்த விருப்பம்;


பெற்றோரை மதிக்கின்ற பிள்ளையாக விருப்பம்

பிள்ளைகளும் பெற்றோரை மதித்திடவே  விருப்பம்;

சுற்றத்தார்  விலகாமல் சூழ்ந்திருக்க விருப்பம்

சுவனமாக  வீட்டைத்தான் காணுதலில் விருப்பம்



"கவியன்பன்” கலாம்.
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவித்தீபம்”, “கவியன்பன்” கலாம்,
அதிராம்பட்டினம்

1 comment:

அ.பாண்டியன் said...

வணக்கம் சகோதரரே..
தங்கள் விருப்பங்கள் யாவும் வீறுநடைப் போட்டு தங்கள் முன் காட்சியாய் வடிவெடுக்க எனது வாழ்த்துக்கள். பகிர்வுக்கும் நன்றி.