Tuesday, December 24, 2013

இறைவா...

இறைவா...

யாவையும்
பிறக்கவும் இறக்கவும்
வைப்பவன் நீ !
பிறப்பே இல்லாத
பேரதிசயமும்
நீ !

பிரபஞ்சமெங்கும்
பெருங்காற்றை
புரள வைப்பவன் நீ !
அதில்
துளிகூட கொடுக்காமல்
மூச்சுக் காற்றை
மூடி விடுபவனும்
நீ !

காவியமும்
ஓவியமும்
எல்லாமும்
எழுத வைத்து
அறிய வைப்பவன் நீ !
எழுதுபவன்
விதியை
எப்போதோ
எழுதி வைத்தவனும்
நீ !

இருப்பவனுக்கும்
இல்லாதவனுக்கும்
தேடித் தேடிக்
கொடுக்கின்ற
கொற்றவன் நீ !
எவ்வளவு கொடுத்தாலும்
தேவைகளே இல்லாத
தயாளனும் நீ !

காதலிலும்
காமத்திலும்
செல்வத்திலும்
சுக போகத்திலும்
எம்மை
மூழ்க வைத்து
உன்னை
மறக்க வைப்பவன் நீ !
நன்றி மறந்தாலும்
எம்மை மறவாமல்
மன்னிப்பவனும்
நீ !

எதையெல்லாமோ
யாரையெல்லாமோ
எழுதவைத்து
ரசிப்பவன் நீ !
என்னதான்
எமை மறந்து
வாழ்ந்தாலும்
உன்னையும்
எழுத வைத்து
ரட்சிப்பவனும்
நீ !

இறைவா...
என்
எண்ணத்திலும்
என்
எழுத்தின்
வண்ணத்திலும்
எனை ஆளும்
வல்லவன் நீ !

உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்
அருள்வாய்
என்னிறைவா !
- Abu Haashima Vaver  அபூ ஹாஷிமா வாவர்

No comments: