Friday, December 20, 2013

பாவ சுபாவம்


நெய்விளக்கு ஏற்றவோ
நெஞ்சிருண்ட வேளையில்...
பொய்விலக்கி வாழவே
புனிதப் பாதைத் தேடினேன்
மெய்விலக்கம் கண்டபின்
மீண்டும் மீண்டும் பேதைநான்...
செய்வதென்ன பாவமா...?
செய்வதென் சுபாவமா...?

திரியிழந்த தீபமாய்
திரிந்துளைந்த என்னை நீ
நெறியிலே அமர்த்தினாய்
நினைவுகள் திருத்தினாய்
பொறியில் சிக்க வேகமாய்
போகும் பாவ ஜீவனாய்
அறிவிலாது போகிறேன்
ஆண்டவா நீ காத்தருள்...

சோதியில் நிறுத்தினாய்
சூன்யமாய் வழுக்கினேன்
நீதியால் நிமிர்த்தினாய்-அ
-நீதியில் தடுக்கினேன்
தூதினால் துலக்கினாய்
தூயதை விலக்கினேன்
ஆதியாதி ரட்சகா...
அடிமையென்னை ஏற்றருள்...


தறியில் நெய்யும் ஆடையை
தறி தரிக்க நேருமோ?
உரியில் தொங்கும் பானையின்
உரிமை வெண்ணை ஆகுமோ...
வெறிவளர்க்கும் வாழ்வினில்
வேட்டையாடும் வேட்கையில்
சரியில்லாமல் சரிகிறேன்...
சரிவை மாற்று ரட்சகா...

நன்றியாய்த் துதித்திடும்
நாவினை நீ தந்தருள்
தின்றென்னைச் செரித்திடும்
தீவினைகள் தீர்த்தருள்...
கன்றெனத் தவிக்கிறேன்
காவலா நீ காத்தருள்...
என்றும் ஏக நாயகா...
என்பிழைப் பொறுத்தருள்...

கவிதை யாத்தவர்
- Haja Gani  ஹாஜா கனி

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... ஹாஜா கனி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...