Saturday, January 4, 2014

அன்பே நீயென் உடன் வருவாயா

அன்புடன் இதயம்









விரல்கள் விரித்து
விரல்கள் கோத்து
விலகா உறவாய்
அன்பே நீயென் உடன் வருவாயா

என் கையளவே நிறைந்த
உன் சந்தோசங்களையும்
உன் கையளவே நிறைந்த
என் சந்தோசங்களையும்
இணைத்த சந்தோசத்தில்
முளைத்த சந்தோசங்கள்
வான்நிறைத்துப் பூப்பதை
வாய்பிளந்து ரசிக்க

அன்பே நீயென் உடன் வருவாயா

கிட்டத்தட்ட நெருக்கமென
கிட்டக்கிட்டக் கிடக்கும்
தண்டவாளத் தொடர்களாய்
நம் இருவர் எண்ணங்களும்
அருகருகே நெருங்கிக் கிடப்பதை
அதிசயமாய்க் கண்டு
அளவற்ற பெருமிதம் கொள்ள

அன்பே நீயென் உடன் வருவாயா

முகமூடி உடுத்தாத சத்திய முகங்களுடன்
சுத்த பாவங்களை மட்டுமே
சத்தமாய்க் காட்டி
என்றும் நிலைக்கும் நிதர்சனம் தழுவ

அன்பே நீயென் உடன் வருவாயா

ஊரும் உலகமும் உறவும் காட்சிகளும்
தப்பும் தவறுமாய் மொழிபெயர்த்தாலும்
நடுநாசி சிவக்க என் செயல் முகர்ந்து
முழுமனம் பூட்டி
உள் நியாயம் புரிந்த
உன் ஆறுதல் பரிசத்தில்
என்னுயிர் காக்க

அன்பே நீயென் உடன் வருவாயா

சரியா - நூறுசதம்
அழகா - அற்புதம்
என்னும்
இதய மலர்வு வார்த்தைகளும்

சரியா - ம்ஹூம்
அழகா - மாற்று
என்னும் அக்கறை
விமரிசனங்களும் தந்தருள

அன்பே நீயென் உடன் வருவாயா

தன்னம்பிக்கை தத்தளிக்கும்
தோல்வித் தருணங்களில்
உன் நம்பிக்கையோடு
இந்த உலக நம்பிக்கை அனைத்தையும்
என்னம்பிக்கைக்குள் ஊற்றி ஊற்றி
தைரிய தீபம் ஏற்ற

அன்பே நீயென் உடன் வருவாயா

அருகில் இருந்தாலும்
தூரத்தே வாழ்ந்தாலும்
அதே அடர்வில் அக்கறை சுரந்து
அன்பைப் பொழிய

அன்பே நீயென் உடன் வருவாயா

சுக்கல் சுக்கலாய்
மனம் நொறுங்கிக் கிடக்கும்
இருள் பொழுதுகளில்
நான் மறைத்தாலும்
என் கவலைகள் மோப்பமிட்டு
கருணைக் கரம் நீட்டி
இடர்முள் களைய


அன்பே நீயென் உடன் வருவாயா

இத்தனையும் கொண்ட உன்னை
என் ஆருயிர்ப் பொக்கிசமாய்
ஆராதித்து ஆராதித்து
நான் பாதுகாக்க

அன்பே நீயென் உடன் வருவாயா
 அன்புடன் புகாரி
 



 

No comments: