Friday, July 18, 2014

எழுத்தால் போட முடியாத எடை ......... கவிஞர் வாலி

 இஸ்லாம் குறித்து கவிஞர் வாலி:
எழுத்தால் போட முடியாத எடை .........

கவிஞர் வாலி

பாடம் பயில நான்பள்ளிவாசல் புகுந்த

பிராயந்தொட்டு தொழுகை புரிய பள்ளிவாசல்

புகுவாரோடு பழகி நின்றவன்!

அவர்களது அன்பை ஆரா

அமுதமாய் தின்றவன் !

என் ஒவ்வொரு பருவத்திலும்

எனக்கு ஒத்தாசை பண்ணிய பெருமக்கள்

இஸ்லாமிய இனத்தவர்

அவரெலாம் - தண்ணீர் கலவா தாய்ப்பால் மனத்தவர் !

இன்றைய என் ஏற்றம் அவர்களிட்ட பிச்சை

இதைச் சொல்ல எனக்கில்லை லஜ்ஜை !

எல்லா சமயமும் எல்லாச்சமயமும் பேசுவது அன்பு

பேணுவது அறம் இதை ஒர்ந்தார்க்கு இயல்பாகக்

கைவரும் சமயப் பொறை எனும் இமயப் பொறை ! இந்தப் பொறை

இருப்பின் இச்சமயம் அச்சமயம்

என எச்சமயமாயினும் எவரும்

அச்சமின்றி வாழலாம் என்பதை

உணர்ந்து வாழ்ந்திடும் மன்பதை !

கவிவேந்தர் மு.மேத்தா காவியமாய்

வரைந்த நபிகளார் வரலாற்றை வரிவிடாமல்

படித்தவன் படித்து - பரவசத்தில் புளகாங்கிதம் எய்தி

விழிப்புனலை வடித்தவன் !

அருளார்ந்த அத்தனும் அன்னையுமான

அப்துல்லாவும் ஆமினாவும்

 இருளார்ந்த உலகிற்கு ஓர் இரவியை ஈந்தனர்

 அங்கனம் ஈர்ந்ததால் அவர்கள் மரித்த பின்னும்

மக்கள் மனங்களில் மீந்தனர் !

அண்ணலார் அவர்கள் என்பு தோல்

கொண்டு எழுந்து வந்த அன்புரு ! ம

றம் தன்னை புறம் காண வந்த அறம் !

காலணி அணிந்து தர்மம் நடந்த நூலணி !

மனிதம் என்னும் வடிவில் வந்த புனிதம் !

பயிர் உய்ய பெய்யும் வான் மழைபோல்

ஞாலத்தின் உயிர் உய்யப் பெய்த ஞான மழை !

உலகு வணங்கும் உயரிய விழுமங்களின் மொத்தக் குழுமம்

தகிக்கும் பாலையில்

தவிக்கும் வேர்களுக்கான

தண்ணீர்த் தடாகம் !

கதியற்றோர் கண்ணீரைத் துடைக்க

வந்த பூந்துவாலை !

விட்டொழிக்க வேண்டிய வெற்றுச் சடங்குகளை

சுட்டெரிக்க வந்த செந்தணல் சுவாலை !

எவ்வுயிரும் ஏற்று நிற்கும் செவ்வுயிர் !

சுருங்கச் சொன்னால்

அண்ணல் நபிகளார் அவர்கள்

இவ்வுலகிற்கு இறைவன் தந்த கொடை !

தூரிகையால் தீட்ட முடியாத ஓவியம் !

யாப்பதிகாரங்களால் காட்ட முடியாத காவியம் !

வார்த்தைகளால் சுட்ட முடியாதவர் வானம் போல்

எட்ட முடியாதவர் !

பகை புகுந்த நெஞ்சத்தார் பார்வையில் படாமல்

குகை புகுந்த குணாளரை

கதீஜா மணாளரை காத்து நின்றது - ஒரு கருஞ்சிலந்தி !

அது - வாய் நூலால் குகைக்கு

வாய்ப் பூட்டுப் போட்ட அருஞ்சிலந்தி !

ஆறறிவிடமிருந்து - ஒரு பேரறிவை

ஆன்றறிவில்லாத ஒரு மூன்றறிவுக் காத்தது

அதனால் அதற்கு அழியாப் புகழ் பூத்தது !

நபிகளார் பற்றி நாளெல்லாம் சொல்லலாம்

சொல்லச் சொல்ல இன்னும்

சொல்லாததாய் இருக்கும் சொல்லலாம் ! ......
 --------------------------------------------------
நன்றி:நமது முற்றம் - மாத இதழ் - ஜூலை -2007
நன்றி: அபு ஹாசிமா
by mail from:     Kalam Kader
<kalamkader2@gmail.com>

No comments: