Wednesday, July 23, 2014

நிஜங்களைப் பாதுகாத்துக் கொள்

வீண் புகழ்ச்சிகள்.
அவை
வீழ்ச்சிக்கான வலைகள் !

நீயல்லாத ஒருவன் தான்
நீ என்று
யாரேனும் உன்னைப் பார்த்து
சொல்லக் கூடும்.

“உன்னைத் தவிர யார் “?
என்று
உன்னை அறியாதவர்களே
உன்னை உன்னதத்துக்கு
உயர்த்தக் கூடும்.

அவர்கள்
உன் தலையில் விதைக்கும்
வண்ண விதைகளை
அங்கேயே தங்க வைக்காதே
நாளை அவை
ஆழமாய் வேர்விடக் கூடும்.

உன் எடை
உனக்கே தெரியும்,
அடுத்தவன் தராசுத் தட்டை
நம்பி,
உன் எடைக்கற்களை
எடுத்தெறிய எத்தனிக்காதே.

உன்
முகத்துக்கு முன்னால்
முல்லைக்குத்
தேர் கொடுப்பவர்கள்
முதுகுக்குப் பின்னால்
போர் தொடுக்கலாம்.

உன்னை ஓர்
பொய்யான பொய்கைக்குள்
பூக்க வைத்து விட்டு,
உன் நிஜமான நிலங்களை
தரிசாக்கி விடலாம்.

இல்லையேல்,
உன்னைப் பல்லக்கில்
ஏற வைத்து,
உன்
காலணிகளைக் களவாடிச் செல்லலாம்.

கனவுகளின்
கண்கொத்திப் பாம்புகள்
அணிவகுத்து நிற்கின்றன,
நிஜங்களைப் பாதுகாத்துக் கொள்.

சேவியர் கவிதைகள் காவியங்கள் நூலில் இருந்து.

No comments: