Tuesday, August 26, 2014

நான் யார்


பத்துமாதமேனும்
என் பரிசுத்த நிம்மதிக்கு
சொர்க்க அறை தந்த
தாயிடம் கேட்கவேண்டும்
என்னைத் தெரியுமா என்று

வாழ்வெனும் ஓட்டை ஓடத்தின்
வழிபாதைகளையும்
அக்கறையாய்ச் செப்பனிடும்
தந்தையைக் கேட்கவேண்டும்
என்னைத் தெரியுமா என்று

என் மோக அனல் மூச்சில்
முழுச் சுவாசம்தேடி
என்னைப் பிரித்தெடுக்கும்
பெருமுயற்சியில்
சரிபாதிப் பங்கெடுக்கும்
இல்லாளைக் கேட்கவேண்டும்
என்னைத் தெரியுமா என்று

கூத்தாடும் குரங்கு மனத்தைத்
தொட்டும் அதட்டியும்
நில்லென நிலைப்படுத்தும்
நண்பர்களைக் கேட்கவேண்டும்
என்னைத் தெரியுமா என்று

ஏனெனில்
என்னை எனக்கே தெரியாமல்
எண்ணற்ற ராத்திரிகள்
ஞான விளக்கேற்றி
விடைதேடி இருக்கிறேன்

இருந்தும்
இன்னமும் எனக்கது
பனிமூடிய பேருண்மைதான்
கவிதை :அன்புடன் புகாரி 

No comments: