Tuesday, August 12, 2014

இதுதான் இஸ்லாம்

ஓ.... மன்னா!

நாங்கள்
அறியாமையிலும்
ஒழுக்கக் கேட்டிலும்
மூழ்கிக் கிடந்தோம்

சிலைகளை
வணங்கிக் கொண்டும்
செத்தவைகளைப்
புசித்துக் கொண்டும்
வாழ்ந்திருந்தோம்
அட்டூலியங்கள்
அத்தனையையும்
அநாயாசமாய்ச்
செய்துகொண்டிருந்தோம்

உறவின் கயிறுகளை
அறித்தெறிந்தோம்

அயலாரைப்
படாதபாடு படுத்தினோம்

வலிமை கொண்டவர்கள்
வலிமை அற்றவர்களின் மீதேறி
சொகுசாகச் சவாரி செய்தோம்

எங்களில் இருந்து
ஓர் இறைத் தூதரை
இறைவன் எங்களுக்கு
அனுப்பித் தரும்வரை நாங்கள்
இப்படித்தான்
கேடுகெட்டு வாழ்ந்திருந்தோம்

எங்களிடம் அனுப்பட்ட தூதரின்
சத்திய வழி
நேர்மை
கண்ணியம்
பண்பு
தூய்மை
ஆகிய அனைத்தையும்
நாங்கள் நன்கறிவோம்

இறைவன் ஒருவனே என்றும்
அவனையே வணங்குதல் வேண்டும்
என்றும் அவர் கற்பித்தார்

கற்களையும் சிலைகளையும்
வணங்குதல்
வேண்டவே வேண்டாம்
என்றார்

சொல்லில் உண்மை
கொடுத்த வாக்கைக் காத்தல்
நம்பி ஒப்படைக்கப்பட்ட
பிறர் உடைமைக்கு துரோகம் இழையாமை
பெற்றோர் சுற்றத்தாரிடம்
அன்பும் கருணையும் கொண்டு நடத்தல்
குற்றம் புரிவதிலிருந்தும்
ரத்தம் சிந்துவதிலிருந்தும்
முழுவதும் விலகிக்கொள்ளுதல்
என்பனவற்றை
அழுத்தமாக எடுத்துரைத்தார்

தீமை கூடாது
பொய் கூடாது
திருட்டு கூடாது
பெண்களை இழித்தல் கூடாது
பொய்சாட்சி கூடாது
விபச்சாரம் கூடாது
என்றும் உறுதியாகக்
கட்டளை இட்டார்

ஒரே
இறைவனுக்காகவே
எங்கள் வணக்கங்கள் யாவும்
இருத்தல் வேண்டும் என்றும்

தொழுகை
நோன்பு
ஏழைவரி
ஆகியவற்றைக்
கடைபிடிக்க வேண்டும் என்றும்
கேட்டுக்கொண்டார்

நாங்கள்
அவரை நம்பினோம்

அவர் இறைவனிடமிருந்து
கொண்டுவந்த கட்டளைகளை
பின்பற்றி நடந்தோம்

ஆனால்
எங்கள் நாட்டவர்
எங்களுக்கு எதிராகக்
கிளர்ந்து எழுந்தனர்

எங்கள் நம்பிக்கையையும்
மார்க்கத்தையும்
நாங்கள் கைவிட வேண்டும் என்று
கடுமையாகத் துன்புறுத்தினர்

சிலை வணக்கத்திற்கும்
அழிவுப் பாதைக்குமே
நாங்கள் திரும்ப வேண்டும் என்று
எங்களைக் கட்டாயப்படுத்தினர்

உங்கள் நாட்டில்
அடைக்கலம் புகுந்துள்ளோம்

உங்கள் நீதியின்மீது
நம்பிக்கை கொண்டுள்ளோம்

எங்களைக்
கொடுமைக்குள்ளாக்கும்
எங்கள் எதிரிகளிடமிருந்து
எங்களைக் காப்பீர்கள் என்று
நம்புகின்றோம்

*

இதுதான் இஸ்லாம்

மக்கா நகர குறைசிகள் இஸ்லாத்தின் எதிர்ப்பு காரணமாக முஸ்லிம்களைப் பெருங்கொடுமைப் படுத்தியபோது அபிசீனியா நாட்டை நேகஸ் என்ற
கிருத்துவ மன்னர் ஆண்டுவந்தார்.

இறைத்தூதர் முகம்மது நபி கேட்டுக் கொண்டதன்படி சில முஸ்லிம்கள் அந்நாட்டுக்குள் அடைகலம் புகுந்தனர்.

இதை அறிந்த குறைசிகள் இஸ்லாத்தைப் பற்றி அபிசீனியா மன்னரிடம் அவதூறுகள் கூறி அடைக்கலம் புகுந்தவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கக்
கேட்டனர்.

நெறி தவறாத அபிசீனியா மன்னர் முஸ்லிம்களை அழைத்து உங்கள் இஸ்லாத்தைப் பற்றிக் கூறுங்கள் என்றார்.

அன்று அடைக்கலம் தேடி அபிசீனியா வந்தவர்கள் கூறியதுதான் இஸ்லாத்தின் அடிப்படை.

அவர்களின் தலைவன் ஜஃபர் அபுதாலிபு கூறியது இதுதான்.

இதைவிட ரத்தினச் சுருக்கமாக இஸ்லாத்தைப் பற்றி வேறு யாரும் சொல்லிவிட முடியாது.

பல மூடப்பழக்கங்களை இன்று சில முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அதற்குக் காரணம் அவர்களைத் தவறான வழியில் நடத்தும் சில தகாதவர்கள்தாம்.

அவர்களெல்லாம் பொருள், புகழ், அதிகாரம் தேடி தவறானவற்றைப் போதிப்பவர்களை விலக்கி, குர்-ஆனை முழுமையாகப் பொருள் உணர்ந்து வாசித்துத் தெளிவுபெற்றால் இஸ்லாத்திற்கு அதுவே பொற்காலம் ஆகும்.

(நாகூர் ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் என்ற நூலை ஆதாரமாகக் கொண்டு எழுதியது)

கட்டுரை :அன்புடன் புகாரி 

http://anbudanbuhari.blogspot.in/

No comments: