Tuesday, August 5, 2014

நீர்ப் பறவையின் நீள் அழைப்பினுள்


ஓர்
அழகெழில் நீர்ப்பறவை
என்னைத்
தன் காந்தக் காதலோடு
கவர்ந்திழுத்தே அழைத்தது

அதன் கவர்ச்சியில்
தகர்ந்து
வெணிலா பனிக்குழைவின்
நட்டநடுவினில்
விரும்பியே தவறி விழும்
செந்திராட்சைக் கனியாக
சரக்கென விழுந்தேன்

அதன்
ராட்சசச் சிறகினைப்
பித்து ரசிகனாய்ப்
பற்றியே ஏறிக்கொண்டேன்
அடடா
அந்தச் சொர்க்கத்தின்
முத்தக் கிடங்கில்
நான்
சுதந்திரமாகச்
சிக்கிக்கொண்டேன்

ஓர்
அற்புதக் கனவின்
நம்பமுடியா
விசித்திரங்களாக விரிந்த
வேற்றுக்கோள் உலகத்துள்
மெல்ல மெல்ல நுழைந்தேன்

சரிந்தேனா பறந்தேனா
விழுந்தேனா நனைந்தேனா
நடந்தேனா கிடந்தேனா
ஏதும் அறியேன்

கட்டுகளிடா
விடுதலை இலக்கியத்துள்
கட்டமுற்படும்
இலக்கணக் கயிறுகளை
வெட்டியெறிந்த ஏற்றத்தில்
சறுக்கியே சென்றேன்

பொற்கனவின்
பூமடிகளில்
மழலையாய்க்
கிடந்தேன்

பின்
கண்விழித்தேன்


விழித்தேனா

விழித்தேன்
என்பதே
தெரியாமல் விழித்தேன்

ஆம்
அப்படித்தான் நினைகிறேன்

அதுவன்றி
உண்மை ஏதென அறிய
நான்தான் இன்னமும்
அதனிடமிருந்து
மீளவே இல்லையே?

இப்போதும்
நான்
எதை எழுதுவது
எப்படி எழுதுவது என்றே
அறியாமல் விழிக்கிறேன்
விழி கிழிகிறேன்


அன்புடன் புகாரி 

 அன்புடன் புகாரி 

 என் உல்லாசக் கப்பல் பயணத்தில் (MSC Musica Cruise ) இட்டாலியில் பலர்மோ என்ற நகரத்தில் ஜூலை 28, 2014 திங்கள் அன்று ஒரு நூல் விறபனை நிலையத்தில் எடுத்த புகைப்படம் இது.(ஒரு நூல்கூட அங்கே ஆங்கில நூல் இல்லை. அனைத்து நூல்களுமே இடலியானோவில் தான். அவர்களின் மொழிப்பற்று பிரமிக்க வைக்கிறது. தமிழர்கள்தான் மொழியெனும் அபூர்வக் கற்பை இழந்து சோரம் போகிறார்கள்.)

நன்றி : http://anbudanbuhari.blogspot.in/

No comments: