Tuesday, October 7, 2014

புரிந்து கொண்டேன் - என்றான்.

இருப்பதை பகிர்ந்தேன் -
என்றான்.

பகிர்ந்தது இனிக்கும் -
என்றேன்.
************
கற்றதை பயன்படுத்த
முடியவில்லை - என்றான்

பயனுள்ளதை பயன்படுத்திக்
கொள் - என்றேன்
********************
கவலைப் படவேண்டாம் -
என்றான்.

காலம் கடக்கும்முன்
கடந்ததை நினைவுகொள் -
என்றேன்.
*****************
தேடியது கிடைக்கவில்லை -
என்றான்.
கிடைத்ததை பெற்றுக்கொள் -
என்றேன்.
***************
தேவைகள் கூடுதல் -
என்றான்.

எண்ணிச் சுடு
பணியாரத்தை - என்றேன்.
******************
தொடர்ந்து சொல்வேன் -
என்றான்.

உள்ளத்திலிருந்து சொல்
உதட்டிலிருந்து சொல்லாதே - என்றேன்.
********************
மரண பயம் -
என்றான்.

மாற்று இல்லை -
என்றேன்.
*************
பயணம்
ஏற்ற இறக்கமாக
இருக்கிறது - என்றான்.

போகும் இடம்
வெகுதூரம் இல்லை -
என்றேன்.
*****************
அள்ளித் தருவேன் -
என்றான்.

சிந்தாமல் சிதறாமல்
தரவேண்டும் - என்றேன்.
*************
தொடர்ந்து செல்கிறேன் -
என்றான்.

தொட்டும் தொடாமலும்
செல் - என்றேன்.
******************
தோல்வி துரத்துகிறது -
என்றன்.

வெற்றி நெருங்குகிறது -
என்றேன்.
****************
ரணம் ஆறிவிட்டது -
என்றான்.

மனம் ஆறினால்
மார்க்கம் தெரியும் -
என்றேன்.
******************
புரிந்து கொண்டேன் -
என்றான்.

புறம் பேசாமல் இரு -
என்றேன்.
 
ஆக்கம்  ராஜா வாவுபிள்ளை(சங்கம் அப்துல் காதர் )

No comments: