Sunday, October 19, 2014

மனுஷங்களா.....அவங்க? - by. LKS.Mohamed Meera Mohideen

கொஞ்ச நாட்களுக்கு முன்னர், எங்கள் குடும்ப நண்பரும் மிகச்சிறந்த பாடலாசிரியருமான கவிஞர் வீரை.அப்துல் ரகுமான் என்னை காலை ஏழு மணி அளவில், அலைபேசியில் அழைத்தார்.. அப்போது நெல்லை விரைவு வண்டியில், சென்னையில் இருந்து ஊர் நோக்கி வந்து கொண்டு இருந்தேன்..
கவிஞர் வீரை ரகுமான் அவர் கள் ,இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களுக்காக, நிறைய இஸ்லாமிய பாடல்கள் எழுதியுள்ளார்...
ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்.......இறைவா வரம் தருவாய்,......கைகளை எந்திவிட்டேன்,.....சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவரே,கொஞ்சம் சீர் தூக்கிப்பார்க்கனும் நெஞ்சுக்குள்ளே...முதலான சிறப்புக்குரிய பாடல்களும் அதில் உண்டு..
தமிழ் மீது மாறாத காதல் கொண்டவர்....

வாசகர் வட்டம் நடத்தி...பாரதியார்,பாரதி தாசனார்.,வ.உ.சிதம்பரனார் , பெரியார்,அண்ணா,காயிதே மில்லத் ,காமராசர்,பசும் பொன் தேவர்,அம்பேத்கர்,பிறந்தநாள் சொற்பொழிவுகள் பல நடத்தியவர்.சமூக நல்லிணக்க இயக்கங்கள் பலவற்றில் பங்கெடுப்பவர். முஸ்லிம் லீக் இயக்கத்தின் முன்னணித்தலைவர்களில் அவரும் ஒருவர்....
"என்ன கவிஞரே எப்படி இருக்கீங்க.?."...
வழக்கமான விசாரிப்புக்கள் முடிந்தன...
“அப்புறம்?...”
‘இன்னைக்கு சாயந்திரம் ஊருக்கு வரணுமே..’
“எங்கே வீரவ நல்லூருக்கா?”....
“ஆமாம்,...அங்கே ஒரு அன்பு இல்லத்துக்கு போகனும்”...என்றார்.
மாலை ஐந்து மணி சுமாருக்கு வீரவநல்லூர் போய் சேர்ந்தேன்...
கவிஞர் கைகளில் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாமற்றும் மிச்சர்,பலகாரங்கள் கொண்ட ஒரு பெரிய பை இருந்தது...காருக்குள் நுழைந்ததும் எல்லாம் சேர்ந்த ஒரு வாசனை வந்தது...
“தம்பி....நான் உங்களை ஒரு வாரமா நினைச்சுக்கிட்டு இருந்தேன்....இன்னைக்குத்தான் கிடைச்சீங்க” என்றார்...
கூட வந்த அவர் மகன், ‘இந்த ரோடு அந்த ரோடு” என்று அந்த ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருந்த வீடு ஒன்றுக்கு வழி காட்டிக் கொண்டு இருந்தார்....
ஒரு பழைய பெரிய வீட்டின் வாசலில் காரை நிறுத்தினேன்...
வாங்க மீரான் போலாம்....என்று அந்த வீட்டுக்குள் அழைத்துச்சென்றார்...அந்த வீட்டில் முன் பக்கம் இருந்த அறை ஒன்றில் என்னை உட்கார வைத்தார்...
“அண்ணே....இதுதான் நீங்க சொன்ன அன்பு இல்லமா?”... என்று கேட்டேன்..
‘ஆமாம்.’...என்றார்.
“உள்ளே வாருங்கள்”...ஒரு பெரிய அறைக்கு கூப்பிட்டார்.
அங்கே நுழைந்த பின்னர்....மனது என்னவோ போல ஆகி விட்டது....
அந்த அன்பு இல்லத்தில் குழந்தைகளைக் காணோம்...ஆனால்......
எத்தனையோ குழந்தைகளைப் பெற்றெடுத்து....பேரன்கள் பேத்திகளும் கண்ட முதியவர்கள், என் பாட்டி வயதுடைய தாய்மார்கள் இருந்தார்கள்...நான் மனதால் நொறுங்கிப்போனேன்....
கொஞ்ச நேரம் நான் எதுவும் பேசவில்லை....
“அண்ணே இவங்கல்லாம் யாருண்ணே?.”...கவிஞர் காதுகளில் மட்டும் விழும் அளவில் கேட்டேன்..
“இவங்கல்லாம் ஆதரவு யாருமே இல்லாத அப்பாவி....முதியோர்கள்”.என்றார்..
நான் உற்று நோக்கிய போது அதில் பலர் நோயாளியாக இருந்தார்கள்...
பலர் இருமிக் கொண்டு இருந்தார்கள்...

யாரும் யாரிடமும் பேசாமல், எங்களைப் பார்த்ததும் ஒரு வகை அமைதி அங்கே இருந்தது....
நான் பார்த்த அந்தமக்களிடம் குலம் தெரியவில்லை....மதம் தெரியவில்லை.... ஜாதி ஒன்று மட்டும் தெரிந்தது......அது புது ஜாதி...
என்ன ஜாதி?....ஆமாம் பிள்ளைகளால் கைவிடப்பட்டோர் ஜாதி...
கையோடு கொண்டு வந்த பலகாரங்களை கவிஞரும் நானும் கொடுத்தோம்....”வாங்காவிட்டால் வந்திருக்கிறவர்கள் வருத்தப்படுவார்களோ?..” என்கிற நினைப்பில் பட்டும் படாமல் வாங்கிக் கொண்டார்கள்....
அவர்கள் கண்களில் யாரையோ தேடுகிற முழிப்பு இருந்தது....கொஞ்சம் பக்கம் போய் ஆண்கள் பிரிவில் இருந்த பெரியவர்களிடம் கொஞ்சம் பேச்சுக் கொடுத்தேன்....


ரொம்ப நேரம் ஒண்ணுமே பேசல்ல....அப்புறம் "சொல்லுங்கையா உங்களைப்பற்றி" ன்னு சொன்னதும் ஒரு வயசாளி மெல்லிய குரலில் என்கிட்டே பேசத்துவங்கினார். “ நான் வயல் தோட்டமுன்னு செழிப்பா இருந்தேன்.... ரண்டு பொம்புளை புள்ளைங்கள கட்டிக்
கொடுத்தேன்...மூணு பையங்க....எல்லாருக்கும் சொத்து பத்துக்களை பிரிச்சு எழுதிக் கொடுத்தேன்... வீட்டுக்காரி....போய் சேர்ந்துட்டா....கண்ணீரோடு சொல்லி கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தார்...
பாதகத்தி அப்பவே சொன்னா....” இப்படி செய்யாதிய ....நீ ராசா...ய்யா .....நாம மண்டையை போட்ட பொறகு, அது அதுங்க பிரிச்சுக்கட்டும்” ன்னு. நாந்தான் கேட்டுத்தொலைக்கல்ல....இன்னைக்கு எங் கதியப்பார்த்தியாய்யா ?...எல்லாத்தையும் இழந்து இப்போ இங்க வந்து நிக்கேன்.”...என்னால் பேசமுடியவில்லை...
அவர் தோள்களில் கைகளை வைத்திருந்தேன்...அவர் அதில் தம் முகத்தை சாய்த்துக் கொண்டார்...கொஞ்ச நேரம் கழித்து ...அவரிடம் விடை பெற்று ஆறுதல் சொல்லி அங்கே இருந்து அடுத்த பகுதிக்கு போனேன்.
முழுதும் பெண்மக்கள் அதுவும் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களே அங்கு இருந்தார்கள்..பார்வை ஒன்றே சொல்லியது...
அவர்களின் வேதனையை...
ஒவ்வொருவர் பக்கமும் போய் அவர்களின் நலம் விசாரித்தேன்...அப்போது அந்த அறையின் மூலையில் முகத்தில் செழுமை நிறைந்து...அது காணாமல் போய் இருந்த ஒரு பாட்டியைப்பார்த்தேன்...கொஞ்ச நேரம் என் பார்வை அவரை விட்டு மாறவில்லை...அந்த பாட்டியும் என் மீது வைத்த பார்வையை மாற்றவே இல்லை...
மெதுவா பல படுக்கைகளைத்தாண்டி அவர் பக்கம் போனேன்..அவர் இருந்த படுக்கையில் என்னை “உட்காருப்பா”, என்று சொல்லிவிட்டு மீண்டும் என்னையே அந்த அம்மா பார்த்துக் கொண்டே இருந்தார்...
“ மேலப்பாளையமாய்யா நீ ” ? என்று என்னிடம் கேட்டார்.
“ஆமாம்மா .எப்படித்தெரியும்?..” என்று கேட்டேன்.
“உம் பேரை, காலைலயே இங்க எழுதிப் போட்டாங்கப்பா....ந்தா அங்கப்பாரு...”,.என்று என் முதுகுப்பக்கம் இருந்த கரும்பலகையில், சாக்பீசால் என் பெயரும், ஊரும் எழுதி வைத்திருந்தார்கள்..அதைக் காட்டினார்...
மீண்டும் அமைதி ....என்னையே பார்த்துக் கொண்டு இருந்தார்...நானும் ஒன்றும் சொல்லவில்லை..
“அம்மா....”

“என்னப்பா சொன்னே?...” ...
”அம்மான்னு சொன்னேம்மா.”என்றேன் ..
அவ்வளவு தான்...எங்கு தான் அடக்கி வச்சிருந்தாரோ...விக்கித்து அழ ஆரம்பித்துவிட்டார்...
அழாதீங்கம்மா...என்றேன்..என் கைகளைப்பற்றி பிடித்துக் கொண்டார்...
எய்யா....நான் கார் பங்களான்னு, பாளையங்கோட்டையில் ஒரு பகுதியைச்சொல்லி அங்கே வாழ்ந்தவள், என்று சொல்லத்துவங்கினார்...
"என்னம்மா ஆச்சு?"....

"எனக்கு ஒரே ஒரு மகன்...அவனுக்கு வந்தாள் ஒருத்தி... மெட்ராசில இருந்து பிடிச்சிட்டு வந்தான்.வருஷக்கணக்கா காதலிச்சோம்ன்னு சொன்னான்...அவ பூர்வீகம் ஆந்திரா பக்கம்..அவம் விரும்பினானேன்னு, என்ன ஏதுன்னு விசாரிக்காம கட்டி வச்சேன்...சண்டாளி....என்ன அவன்கிட்ட இருந்து பிரிச்சு, இங்க இருந்த வீடு வாசலைஎல்லாம் வித்து முடிச்சு அவனை மெட்ராசுக்கே கூட்டிப்போய் விட்டாள்....அவன் குடிச்சு குடிச்சு முழு போதையிலேயே முடங்கிட்டான்...
“உங்களை யாருமே தேடல்லியாமா?”...
“என் பேரப்பிள்ளைகள் தான் என்னைத் தேடனும்....அதுங்க தான் என்கிட்டே உயிரா இருந்துச்சுங்க....நானும் அப்படி இருந்தேன்...என்னப்பத்தி அந்தப் பிள்ளைகளிடம் என்ன சொல்லி வச்சிருக்காளோ? .....அவங்க .... எங்க இருக்காங்கன்னே தெரியல்லைய்யா ....அவங்க கிட்ட பேச, செல் போன் நம்பர் கூட என் கிட்ட இல்லைய்யா.”....
“கண்டிப்பா அந்தப்பிள்ளைங்கஉங்களைத்தேடி வருவாங்க பாருங்க....” என்றேன்..அவர் அழுத அழுகை என்னை என்னவோ வேதனைப்படுத்தியது...என்னாலும் கண்ணீரை அடக்க முடியவில்லை..
ஒரு அரை மணி நேரம் போனது....நாங்கள் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
“அம்மா.....நான் போயிட்டு வரட்டுமா?...”....கொஞ்ச நேரம் மௌன மாக இருந்தார்...அப்புறம் சரி என்பதற்கு அடையாளமாக தலையை ஆட்டி காட்டினார்...போய்ட்டுவாய்யா...என்றார்..
“இந்தப்பக்கம் வந்தா கொஞ்ச நேரம் இந்தக் கிழவி கிட்ட வந்து பேசிட்டு போய்யா...” சரி என்று சொல்லிவிட்டு அவரை நோக்கி கையை அசைத்து காட்டி விட்டு “வர்ரம்மா.....” என்று கண்ணீரோடு கிளம்பினேன்..ஒரு நாலு எட்டு வச்சிருப்பேன்,.
“எய்யா....கொஞ்ச நில்லுய்யா...எனக்கு ஒரு உதவி செய்யணும்...செய்வியாய்யா ”
“என்னம்மா செய்யணும் சொல்லுங்கம்மா ?...”
“நான்....இந்தக் கதியில இருப்பதையும் ....என்ன இங்கப் பார்த்ததையும் எங்கயும் சொல்லிடாதேப்பா"....
அடுத்து அழுகைமேலிட அவர் சொன்னது, என்னையும்
அழ வைத்தது .
.."என் புருஷன் ஊரு மெச்ச வாழ்ந்தவருப்பா...”
என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை .
 
கட்டுரை ஆக்கம் 

LKS.Mohamed Meera Mohideen
நன்றி : http://lks-meeran.blogspot.in/

No comments: