Friday, December 26, 2014

நதிமூலம் -நிஷா


பெயர்களின் நீட்சியில் நெளியும் நீள்பாம்புகளை
நாவிலிருந்து பிரித்தெடுக்கிறேன்

கவலைகளென்றேதுமில்லை,
சகலத்திற்கும் நானே ஆதாரமாயிருப்பதால்
சகலத்திற்கும் நானே தீர்வுமாயிருக்கிறேன்

மறுப்புகளும் பிணக்குகளுமற்ற பாட்டை,
என் பிரத்யேக சிறகுகளுக்கு.

தோழி கேட்கிறாள்,
ஆழ்கடலின் பேரமைதியின் போதையில் களிப்புறும்
ரட்சிபிஸ் மீன்களின் ஓங்கார முழக்கம் அறிவாயா...???

இருள் அலையும் அடர்காட்டில் மிதக்கும் ஒளிப்புள்ளிகள்,
என் சுயம் விரிந்துகிளறும் பூக்களின் வாசமென.

பனித்துகள் அலைவுகளின் சிற்றதிர்வு,
தப்பிதமான மீட்ட்டல்களில் தவித்தலையும் பேரிசை.
நிர்விசாரங்களின் மோனப்புயலில் படபடக்கும் செந்நாற்றுக்கள்,
சமர்ப்பித்தலின் மாயையில் மிளிரும் சர்ப்பம்.

எல்லா வாத்தியங்களிலும் என் இசை
எல்லா முகங்களிலும் என் சாயல்
புறக்கணிக்கவியலா மகா வல்லமையில் என் பேரிருப்பு.

தோழி சொல்கிறாள்,
சமுத்திரத்தின் ஒவ்வொரு துளியும்
சமுத்திரம்தான்...!!

கேப்பியார்-2000
நிஷா மன்சூர்

No comments: