Saturday, December 27, 2014

பூட்டிவைத்த உணர்வுகள்

உள்
ஓர் அலுப்பு சுகமறியாத
உணர்வுகளின் பிரசவ அறை

உணர்வுகளோ
பிறந்த கணமே தாயைத் தகிக்கும்
நெருப்புக் குஞ்சுகள்

வெப்பம் தாளாமல்
வெளியேற்றும் வழிகேட்டு
மனம் அறிவுக்கு அனுப்பும்
ஓர் அவசர விண்ணப்பம்

கூடாதென்று கூக்குரலிட்டு
வழிகளை அடைத்து வாசலை மூடி
வைராக்கியனைக் காவலிடும்
அறிவு

முட்டி மோதி நினைவுகளை
நிமிசம் தவறாமல் அழைத்து
சிந்தனையை நச்சரித்து
மறுப்பு வார்த்தைகளை மிதித்து
சபல சந்தர்ப்ப மரங்கொத்திகள்
கொத்திக் கிழித்த பலமற்றத் தளங்களைப்
பயன்படுத்தத் துடிக்கும் உணர்வுகள்
இமைகளை வெட்டி வீசிவிட்டு
முழு விழியையும்
விளக்கெண்ணையில் நீராட்டி
விறைப்பாய்க் காவல் காக்கும்
வைராக்கியம்

கால நார் காரிய சிரத்தையில்
நிமிசங்களைச் சேகரித்துக்
கனமான மணிமாலைகளைத்
தொடுத்துக் கொண்டிருக்க

பிறந்து பிறந்து
அடர்ந்த உணர்வுகளோ
நிமிசங்களைப் பலவந்தமாய்ப் புணர்ந்து
சடசடவென்று பிரசவித்த
நெருப்பு நகம் பூட்டிய ஊசி விரல்களால்
உயிரையே குத்தி
வைராக்கியக் காவலனைச் சாம்பலாக்கிப்
பாய்ந்து...
படர்ந்து...
வடிந்து...
வீரமிழக்கும்

பின்
காற்றுத் துப்பிப் போட்ட
பலூனாய் மனம்
கண்ணீர்க் கண்களை
உடைத்து விட்டுக் கொண்டு அறிவு
 

No comments: