Monday, January 12, 2015

வருவதும் போவதும் ... - அபு ஹாஷிமா

 
வரும் நேரம்
நெருங்கி விட்டது !

நிமிடங்கள்
மின்னலைப்போல் மறைய
மனதுக்குள்
மின்சாரத்தின் அதிர்வு !

நெஞ்சுக் குழிக்குள்
ஊற்றெடுத்த வியர்வை
நெற்றியிலும்
மிருதுவான முகத்திலும்
பனித்துகள்களாய் பூக்க
எதிர்பார்ப்பிலேயே
அடிவயிற்றில்
அமிலம் சுரக்கிறது !

வெளியே வருவதற்கு
இத்தனை சிரமமா ?

முகத்தைப் பார்த்து விட்டால்
போதும் !
மனம் நிறைந்து விடும் !
பட்ட துன்பமெல்லாம்
தீர்ந்து விடும் !

அனுபவித்துப் பார்க்கும் போதுதான்
தெரிகிறது
அவஸ்தையிலும்
இப்படி
ஓர் இன்பம் !

000000
போகும் நேரம்
நெருங்கி விட்டது !

நேற்று வரை இருந்த
சிரிப்பை
மெல்ல மெல்ல வந்த
சோகம்
துடைத்துச் சென்று விட
செடியைப் பிரிந்த
பூவாய்
வாடிக் கிடக்கிறது
முகம் !

தண்ணீரை வாரி
முகத்தில் அறைந்தாலும்
இதழோரத்தில் கரிக்கிறது
கண்ணீரின் உப்பு !

வேதனைச் சுமைகள்
அழுத்திய போதும்
மூட மறுக்கும் இமைகள் !

கண்ணீரால்
தடை போட முடியாத
பயணம்
தொடங்கி விட்டது !

இனி
நினைவுகளைச் சுமக்கக்
கற்றுக் கொள்ள வேண்டும் !

000000

வரவேற்கவும்
வழியனுப்பவும் வரும்
பெண்களைப் பார்க்க
பரிதாபமாகத்தானிருக்கிறது
விமான நிலையத்தில் !
 

No comments: