Tuesday, January 20, 2015

ஞானமெது

இனிப்பானதொன்றை
கசப்பாக்கினான்
இல்லாத ஒன்றுக்கு
இருப்பதின் கருவறுத்து
கல்லாத கயவன் போலே
கண்ணிருந்தும் குருடானான்

உள்ளுக்குள் வெறும்
பாலை மணல்
ஊருக்கு மட்டும்
பலமுதிர்ச்சோலையாய்
சொல்லுக்குச்சொல்
தூயோர் சொல் மறைத்து
சுயநலப்பகைக்கு
சூத்திரம் போதித்தான்
உன்மதம் என்மதம்
உன் நாடு என் நாடு
உன் குலம் என் குலமெனும்
அங்குல அங்குல மந்திரமதை
ஆணியாய் உள்ளிறக்கி
தணியாத தாகம் தீர
தன் இன இரத்தம் குடித்தான்

உன் மொழியில் உனக்குச்சொல்ல
தன் பெயரை மாற்றியோனை
உன் கடவுள் என் கடவுளென
உறித்தெடுத்து ஒவ்வொன்றாய்
பிரித்தெடுத்தான் சாதிக்கொன்றாய்
எறிக்கொல்லிக்கு பயனான
உறிநாரை மட்டுமே தனதாக்கி
அரியதொரு தேங்காயை
அறிய ஏனோ அறவே மறந்தான்

உத்தமர் யாவருமே
உத்தமராய் வந்ததெல்லாம்
உலக இருட்டுக்கு
ஒளிக்கூட்டவேயன்றி
உன் வயிற்றுப்பிழைப்புக்கு
வழி காட்டவல்ல
பெருமையையும்
சிறுமையையும்
பேசித்திரிய பிறப்பொன்றும்
நீ தேர்ந்தெடுத்தல்ல
இட்டபிச்சைக்கு ஏற்ற
பாத்திரம் மட்டுமே நீ ...

அவரவர் நம்பிக்கையில்
அவரவரை வாழ விடு
அப்படியும் சொல்லியே
ஆகவேண்டுமெனில்
அதற்க்குரியவனாய்
நீ முதலில் மாறு
ஆன்மீகமென்பது
அகம் சார்ந்த ஞானம்
புற வர்ணங்களால் இருட்டை
வெண்மையாக்க முயலாதே

தவறான ஒன்றெனினும்
சரியென்று நம்பியோரை
சரியானவன் கடவுளென்றால்
சரிசெய்யத்தவறுவானோ
விளக்கிட வந்தோரெல்லாம்
விலங்கினத்தோடு உன்னை
பிரித்தெடுக்கத்தானேயன்றி
விளங்காமல் திரிவதற்க்கல்ல
மீண்டும் நீ ........
விலங்காகி மாய்வதற்கல்ல

சத்திய நூலானதை
சதை மறைக்கும்
ஆடையாக மட்டுமே

மேனி போர்த்தாமல்
புத்திச்சுடறொளிர
தீபத்திரியாக்கு
முத்திய தலை பித்தம்
சாம்பலாகி
உனை முடக்கிய
மத பக்கவாதம் சீராகும்..!!

தமிழ் பிரியன் நசீர்

No comments: