Saturday, June 27, 2015

இறைவனிடம் கையேந்துங்கள்!!

இறைவனிடம் கையேந்துங்கள்!!

சில ஆண்டுகளுக்கு முன்னால்....
மருத்துவ பணி நிமித்தமாக புனித மக்கா
நகரில் வாழ்ந்த காலம் அது.

ஒரு நாள் இரவு, நடுநிசி நேரம்...
வீட்டின் டெலபோன் மணி, கிணு கிணுத்தது.
போனில் பேசியவர், தமிழகத்தை சேர்ந்த ஒரு பெரிய இடத்து பெண்.

அவர் குரல் சற்று சோகத்துடன் ஒலித்தது. தன் தந்தை, மரணித்து விட்ட செய்தியை சொன்ன அவர், இறந்து போன தன் தந்தைக் காக, 'கஅபாவில்' இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இது போன்ற கோரிக்கைகள், நான் மக்கா மாநகரில் வாழ்ந்த போது, பல பேரிடம் இருந்து வருவதுண்டு.

இந்த பெண்மணியின் வேண்டுகோளை ஏற்று கஅபா ஆலயம் சென்று, அவருக்காக பிரார்த் தனைகளை நிகழ்த்தி விட்டு முஸ்லிம்களின் சடங்கான ஒரு "உம்ரா" வையும் முடித்து விட்டு, ஒரு வித மன நெகிழ்வுடன் இறை இல்லத்தில் இருந்து, என் இல்லம் சென்றேன்.

வீட்டிற்கு சென்ற நான், அந்த பெண்மணிக்கு போன் செய்து, அவரது தந்தையின் மறுமை வாழ்வுக்காக, இறைவனிடம் கையேந்தி பிராத்தித்த விவரங்கள் அனைத்தையும் கூறினேன். அவர், அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்பது, அவர் பேசிய தொனி உறுதி செய்தது.

நான் கூட, சில வேளைகளில் நினைப்பதுண்டு. பிறருக்காக....நாம் பிராத்தனை செய்யலாமா?
அவர்கள், தங்கள் பிரச்னைகளுக்காக இறைவ னிடம் பிரார்த்திக்காமலா இருந்திருப்பார்கள்?
ஒரு வேளை, அவர்களின் பிரார்த்தனைகள் பலன் தராத கட்டத்தில், நம் உதவியை நாடு கிறார்களோ, என்ற ஒரு ஐயம் என் மனதில் அடிக்கடி எழுவதுண்டு. எனவே என் பிரார்த் தனைகள், பலன் தர வேண்டும், என்ற என் கோரிக்கையை, இறைவன் முன் வைத்த பின்னரே, மற்றவர்களுக்காக இறை இல்லத் தில், நான் கையேந்தி பிராத்திப்பது வழக்கம்.

ஊர் வந்த பின், அந்த பெண்மணியை நேரில் சந்தித்து, அவரது தந்தையின் மரணத்திற்கு ஆறுதல் சொல்லி விட்டு, மக்காவில் செய்த பிரார்த்தனை விவரங்களை, நேரில் தெளி வாக எடுத்து சொன்னேன். அவர் அப்போதும் அதை பொருட்படுத்தியதாக தெரியவில்லை.

ஒரு பெண்மணியால்... எப்படி இவ்வளவு பெரிய விஷயங்களைக் கூட, மிக சாதாரண மாக எடுத்துக் கொள்ள முடிகிறது என்ற ('BASIC PSYCHOLOGY OF THE PERSON') அவரது மனநிலையை, ஒரு மருத்துவனான என்னால் கூட, இன்று வரை புரிந்து கொள்ள இயலவில்லை.

இப்போதெல்லாம் பிறருக்காக இறைவனிடம் கையேந்த, உண்மையிலேயே சற்று தயக்கமா கத்தான் இருக்கிறது.
Vavar F Habibullah

No comments: