Tuesday, August 11, 2015

வாழ்வின் அத்தனை வெளிச்சங்களிலும் .....!

உடலுக்குள் ஊடுருவி
ஊசலாடிக் கொண்டிருக்கிறது
உயிர் !

உடைகளுக்குள் வெட்கமேயில்லாமல்
சுதந்திரமாய் சுற்றித் திரிகிறது
நிர்வாணம் !

இமைகளுக்குள் உறங்காமல்
எப்போதும் விழித்திருக்கிறது
உறக்கம் !

உறவுகளுக்குள் இணக்கமேயில்லாமல்
ஒளிந்து கொண்டிருக்கிறது
வெறுப்பு !

புன்னகைக்குள் சிநேகமின்றி
குவிந்து கிடக்கிறது
சினம் !

உதவிகளை உபத்திரவமாய் எண்ணி
உதறித்தள்ள காத்திருக்கிறது
விரோதம் !

உணவுகளுக்குள் பொதிந்து வைத்து
கடமைபோல் பரிமாறப்படுகிறது
குரோதம் !

வரவேற்புகளுக்குள் வேஷம் தரித்து
பொய் முகம் காட்டுகிறது
பகை !

மானத்துக்குள் மூடி மூடி வைத்து
வெளிவராமல் அடங்கிக் கிடக்கிறது
அவமானம் !

வாழ்வின்
அத்தனை வெளிச்சங்களிலும்
பூரணமாய் நிறைந்திருப்பது
இருள்களே !


ஆக்கம் Abu Haashima

No comments: