Friday, August 14, 2015

""பேரீச்சம் பழக் காட்டின் பிரதிநிதிகள்" --- முதலாளித்துவம்! --

--- முதலாளித்துவம்! --

கட்டுமானங்கள் இல்லாமல்
நிறுவப்பட்ட
வான முகட்டின்
கீழும் மேலுமுள்ள
கோளப் பிரதேசங்களின்
ஏக முதலாளியே !

உனது
சொத்துகள் மட்டுமே
இங்கு தனியுடைமைகள் !

ஆனாலும்
உன் அடிமைகளுக்குக் கூட
முதலாளிப் பட்டம்
தொங்க விடப்படுகிறது !

உனது சொத்துகளைப்
பொதுவுடைமை யாக்கப்
புரட்சி வெடிசல்கள்
புறப்படும் போதெல்லாம்
மரண வானத்திலேதான்
உதய சூரியனை
உதிக்க வைக்கிறாய் !

கோளக் குலுக்கலில்
மோதல் வராமல்
கூட்டிக் கழிக்கிற
வித்தைக்காரனே !

இரவுக் கழுதைக்குப்
பகல் தீனியைக்
காட்டிக் காட்டி
நகர்த்தி வருகிறான்
நாளரக்கன் !

அந்த
நாளரக்கனை
வருட யுகங்கள்
நாட்டிற்கு
ஓட்டி விடுகிறாய் !

வழியிலே நீயே
மாத மைல் கற்களை
நாட்டி வைக்கிறாய் !

ஜோடிகளைச் சேர்த்துச்
சுகக் கலாசாலை
நடத்தும் நீ
வாரிசுப் பட்டம்
வழங்கி வருகிறாய் !

சில மாணவர்களுக்கோ
தேர்வுகள் மட்டும்
தேதி குறிக்கப் படுகிறது
ஆனால்
பட்டமளிப்பு விழா
பண்ண மறுக்கிறாய் !

உன் பல்கலைக் கழகம்
நிராகரிக்கிற
"அலிப்" பிள்ளைகளை
எந்த மாடு மேய்க்க
அனுப்பி வைக்கிறாய் ?

கடல்தொட்டிலில்
காற்றுத் தாலாட்டில்
கண்ணயரும்
அலைக் குழந்தைகளுக்குப்
பசி எடுக்கையில்
நிலக் கவளங்களை
உருட்டி ஊட்டுகிறாய் !

சமயா சமயங்களில்
அந்தக் குழந்தைகள்
செறிமானம் ஆகாமல்
எடுக்கும் வாந்தியில்
மலைகளைக் கூட
வெளிப்படுத்தி விடுகிறாய் !

திராவகப் பெண்ணையும்
தீக் கனல் ஆணையும்
பூமி வீட்டின் கீழே
புணர விட்ட நீ,
அவ்வப்போது
தனித்தனியாக
எங்களை நோக்கி
ஏன் அனுப்பி வைக்கிறாய் ?

விநோதங்களுக்கு
விருத்தியுரை தருபவனே !

வெள்ளை விந்திலே
என்ன
ரசவாதம் செய்தோ
கறுப்பு வெள்ளை
சிவப்புத் தோல்களை
நெய்து போர்த்தி
உதறி விடுகிறாய் !

அந்த
நிற பேதங்களின் மேலே
ஷைத்தான்
ஆயுதச் சாலைகளை
ஆரம்பித்து
கலகப் பயிர்களை
அறுவடை செய்கிறான் !

பிரமிப்புகளை
எங்கள்
நெஞ்சங்களில்
சதா காலம்
பெய்து கொண்டிருக்கும்
பெரியவனே !

நட்சத்திரக்
கை காட்டியால்
திசை யூர்களைத்
தெரிசிக்க வைக்கிறாய் !

நிலாப் போதனையில்
இரவுப் போதுகளில். ..
நிம்மதி மஞ்சத்தில்
நீ
எங்களைச் சந்திக்கின்றாய் !

காற்றுத் தீண்டலில்
கருணைத் தாழ்வாரத்தில்
எங்கள்
கண்களின் இமைகளில்-நீ
கவிதை எழுதுகிறாய் !

சூரியச் சூட்டுக்குள்
சுறுசுறுப்பு மந்திரத்தைக்
காலை வேளையில்-நீயே
கற்றுக் கொடுக்கிறாய் !

மகோன்னதங்களின்
மொத்த மகசூலே !

மண் சிதறலில்-உன்
வார்த்தை வருடலே
மானிடப் பொம்மையை
வார்த்து விட்டது !

தீச் சூலில்
ஜின் கூட்டத்தைத்
திரட்டி விரட்டினாய் !

ஒளிக் கதிர்களுக்கும்
கர்ப்பப் பரிசீலனை
பண்ணி வைத்தாய் !

மலக்குகளாக
மகிமைப் படுத்தினாய் !

ஆண்மைத் தடவலுக்கு
அனுமதி தராமல்
கன்னிப் பெண்ணுக்குக்
கர்ப்ப முத்திரை
கட்டி விடடவன் நீ !

தீர்ப்பு நாளின்
எஜமானனே !

உனக்கு நாங்கள்
உண்டாக்கி இருக்கும்
உற்பவப் பட்டியல்-இதோ
தருகிறோம் !

நிராகரிப்புக்
கோட்டைக்கு
நாங்கள்தாம்
நிஜத் தலைவர்கள் !

அக்கிரம வீதிகளில்
அசிங்கப்பட்டு
அலைகையில். ..

மடத்தன மாகாணத்தில்
வாக்காளப் பட்டியலில்
எங்கள் பெயர்கள்
எழுதப்படுகையில்...

குற்றத் தேர்தலில்
கூட்டணி ஆதரவில்
அபேட்சக மனு
அனுப்புகையில்...

இன்பச் சில்லறைகளை
எடுத்துக் கொடுத்து
வேதனை மாட்டை
விலை பேசுகையில்...!

எங்களிலிருந்தே
நீ
நபித்துவ மகத்துவத்தை
அறிமுகப் படுத்தினாய்...!

ஷைத்தான்
தயாரித்துத் தந்த
தீமை ஆடைகளைக்
கொள்முதல் செய்து
கொழுத்த பணமுதலைகள்...

ஞானப் படுதாவுக்குள்
நாங்களா வருவோம்...?

இறை உபசரிப்பு
எங்களை நோக்கி
இறங்கி வருகையில்
தீமைக் குளத்தில்
திறந்த மேனியில்
நீச்சல் அடித்த
நீசர்கள் நாங்கள்...!

குரங்குகள் கூடி
மானுடம் பிறந்தது
என்ற
கோணல் தத்துவம்
கொண்டதனாலே
தாவல் புத்தியைத்
தழுவிக் கொண்டோம் !

எனவேதான்
படைப்புகள் எல்லாம்
படைத்துக் கொடுத்த
படைப்பாளிக்கே
இணையாகப்
படைத்துப் பார்த்தோம்! ...

அருள்மழைக் கொட்டிக்
கழுவிப் பார்த்தாய் !

அந்த
மழைகளைக்கூட
அழுக்குகள் ஆக்கினோம்...!

ஓ...!
எங்களின் படைப்பாளியே !

பக்கத்து வீட்டை
ஷைத்தானுக்கு
ஏன்-நீ
வாடகைக்கு விட்டாய் ?

அதனால்தானே
பிறந்த வீட்டை
மறந்து பிரிந்து
புகுந்த வீட்டில்
விசுவாசம் வைக்கும்
பத்தினி யானோம் !

உன்
அத்தாட்சிகளை
அடிக்கடித் தருகிறாய் !

இரவு வானத்தின்
வெள்ளை உருண்டையை
இறைவன் ஆக்கினோம்...!

ஞானச் சுத்தியலால்
நீ
எங்களை அடித்தபோது
அந்த
நிலவின்
வெளிச்ச மண்ணில்
ஏறி நின்றோம் !

நிலவை முதலில்
நீ தான் என்றோம்
நிலவில் எங்களை
நிறுத்திய போது
நீயே
இல்லை என்றோம் !

எப்படி எங்களின்
பரிணாம வளர்ச்சி ?

இத்தனைக்குப் பின்னேயும்
மானிடத் துரும்புகளின்
மண்டையை நோக்கி
மன்னிப்பு
மணிமகுடத்தை
அனுப்பி வைக்க
நீ
காத்து நிற்கிறாய் !

ஆதாம் தோட்டத்தில்
அவதாரம்
எடுத்த நாங்கள்
விரட்டப்பட்ட
ஷைத்தானுக்கு
விலக்கப்பட்ட கனிகள் !

ஆனால்
நிராகரிப்புக் குகையில்
நிர்வாணக் கிடக்கையில்
கிடந்தவன்...!
அந்த ஷைத்தான்...!

அவன்
எங்களைப் புசித்து
ஆடைகள் பெற்று
அங்காடித் தெருக்களில்
நடைபோடுகின்றான் !

ஷைத்தானின்
மானம் காக்கும்
உடைகளே நாங்கள் !

இந்த ஆடைகளை
அப்புறப்படுத்தி
அந்த
நீசனை நிர்வாணமாக்க
இறைவா
உன் அருள்தானே
உறுதி மிக்கது...!

கண்ணீர் நதிகளைக்
கழற்றி விடுகிறோம்
அருள் தோணியை
நீ
அனுப்புவாயா...?
Hilal Musthafa
 மே மாதம் 1981--ஆம் ஆண்டு நான் ஒரு கவிதைத் தொகுப்பை
ஹிலால் பதிப்பகம்( நெல்லை ஹிலால் பதிப்பகம் இல்லை.) வழியே வெளியிட்டேன். மொத்தம் 118 பக்கங்கள். விலைரூபாய் 7.00. இக் கவித்தொகுப்புக்கு""பேரீச்சம் பழக் காட்டின் பிரதிநிதிகள்"எனப் பெயரிட்டிருந்தேன்.
இத்தொகுப்புக்கு சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது சாஹிப் ஓர்
அற்புதப் பரிந்துரை வழங்கி இருந்தார்.
அதன் பின் இத்தொகுப்பு வேறு பதிப்பு காணவே இல்லை.
இத்தொகுப்பின் நான்கு பிரதிகள் தற்போது கிடைத்தது.
அதில் இருந்து ஒவ்வொரு தலைப்பையும் பதிய யிருக்கிறேன்.
மறுபதிப்புக்கு என்னிடம் இப்போதைக்கு வாய்ப்பில்லை.

---1---


Hilal Musthafa

No comments: