Sunday, October 4, 2015

புனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (10 )

உலகில் வாழ பொருள் தேவை
மறு உலகிற்கு அருள் தேவை.

உடல், பொருள், உயிர் அனைத்தையும்
இழந்து, இந்த அருள் ஒன்றை மட்டும் பெற
துடிப்பவர்களே ஹாஜிகள். இது ஒன்றையே தங்கள் வாழ்வின் லட்சியமாக கொண்டு
வாழ்பவர்கள் அவர்கள்.பூர்ணமாக வாழ்வை ரசித்தவா்களுக்கு, ஹஜ் பயணம் கூட ஒரு மரண பயணத்திற்கான பயிற்ச்சி தான்... அவர்கள் அந்த பயணத்திற்காக தேர்வு செய்யும் உடைகளே, அந்த எண்ணத்தை பறைசாற்றுகிறது எனலாம். அந்த நாட்களில் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை எவருக்கும் இருந்ததில்லை. தங்கள் வாழ்ககையின் கடைசி பயணமாகவே, ஹாஜிகள் இந்த பயணத்தை கருதுகிறார்கள்.....

மக்காவில் 'கஅபா' அமைந்துள்ள ஹரம் பகுதி மெய்ஞான அநுபவத்தை வாரி வழங்கும் அருள் ஊற்றாக இன்றும் திகழ்கிறது. இறை பக்தி தியானத்தில், ஹாஜிகள் மெய்மறந்து பரவசம் கொள்கின்றனர். உலக இன்பங்கள் அவர்களை விட்டும் விலகி, ஓடி ஒழிந்து விடுகின்றன. கஅபாவை பார்த்து மயங்காத ஹாஜிகளே இல்லை... எவரையும் பார்த்த மாத்திரத்திலேயே வசீகரபடுத்தும், அதீத சக்தி, இந்த இறை இல்லத்தின் தனிச் சிறப்பு.

ஹாஜிகள் - உள்ளபடியே மெய் மறந்து விடுகின்றனர். கஅபாவை சுற்றி வலம் வருவது, இறை போதையை அதிகரிக்க செய்கிறது...

'ஹஐரத் அஸ்வத்' என்ற அந்த கருப்புக்கல்லை தொட்டால் - மனிதனின் அனைத்து பாவங்களும் தொலைந்து விடும் என்பது ஹாஜிகளின் முழு நம்பிக்கை. அதை தொட முடியாதவர்கள் அங்கேயே விழுந்து கிடந்து அழுது புலம்புகிறார்கள்...

'கிஸ்வா' எனப்படும் கஅபாவை போர்த்தி இருக்கும் வேலைப்பாடுகள் அமைந்த கருப்பு பட்டாடையை கட்டித் தழுவியபடி, (hajis) கதறிக் கதறி அழும் காட்சி, பிறரையும் கண் கலங்க வைக்கும்.... just like a PRIMAL CRY

இப்றாஹிம் நபி (ABRAHAM) முதன் முதலாக நின்று, இறைவனை வணங்கிய அந்த குறிப்பிட்ட இடத்தில் நின்று, ஒருமுறை யாவது இறைவனை வழிபட ஹாஜிகள் துடிக்கிறார்கள்....

காலம் மாறினாலும் வற்றாத அருள் நீரூற்று "ஜம்ஜம்" நீரை பருகினால், நோயெல்லாம் தீர்ந்து போகும் என்பது ஸஹாஜிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை...

ஹரமில், 'ஒரு வணக்கம், ஆயிரம் வணக்கங் களுக்கு சமம்' என்று ஹாஜிகள் கருதுகிறார்கள். அங்கு வணக்கமே அவர்களின் தினசரி வாழ்க்கையாகி விடுகிறது....

சபா - மர்வா மலைகளுக்கு இடையிலான ஒரு 'நடை கலந்த ஒட்டம்' முதியவர்களையும், இளைஞர்களாக மாற்றி விடுகிறது. களைப்பையோ அல்லது சோர்வையோ ஏற்படுத்தாத அந்த ஒட்டம் மனதிற்கும், உடலுக்கும் நல்ல புத்துணர்ச்சி நல்குகிறது....

மினா நகரம் உலக மக்களை ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து கொள்ள உதவுகிறது....

செய்த பாவங்களை நினைவு கூர்ந்து, 'அரபாவில்' ஒரு முறை அழுதாலே அனைத்து பாவங்களும் தீர்ந்து விடும் என்பது ஹாஜிகளின் நம்பிக்கை. அரபாத் மைதானமே ஹஜ் அன்று ஹாஜிகள் அழுகை மழையால் நனைந்து விடுகிறது.....

முஸ்தலிபா - திறந்த வெளி அரங்கு, 'எல்லாம் இருந்தும் ஒனறும் இல்லாத நிலை' - யை மனிதனுக்கு தெளிவு படுத்துகிறது. மனிதன், மனிதனை தனக்கு தானே அறிமுகம் செய்து கொள்ளும் நாள் அது....

சாத்தான் மீது கல்லெறிவது, ஹாஜிகளின் கடமை ஆகி விடுவதால் இதிலிருந்து விலகிப் போக முடியாது. உணர்ச்சி பிரளயமாக அரங்கேறும், இந்த கல் எறியும் நிகழ்ச்சியில் நடந்தேறும் சில அசம்பாவிதங்களை, உயிர் சேதங்களை, மனித சத்தியால் தடுத்து நிறுத்திட இயலவில்லை. எதை காரணமாக சொன்னாலும், அதில் பொதிந்து இருக்கும் உண்மை ரகசியங்களை மனித அறிவால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.....

முகமதுநபி, துயில் கொள்ளும் மதீனா பள்ளி வாசலில் - இன்றும் ஒரு "ஈர்ப்பு சக்தி" நிலவுகிறது. என்றாலும், அனைவராலும் இதை உணர முடிவதில்லை.மெய்யறிவால் மட்டுமே இதை உய்த்து உணர முடியும்.அங்கு நிலவும் பரிபூரண அமைதி இதை உறுதி படுத்தும். ஹாஜிகளின் எண்ணங்களை, வேண்டுதல்களை நிறைவு செய்யும் திருத்தலமாகவே 'மதீனத்து வாசல்' இன்றும் திகழ்கிறது. சாதாரணமாகவே, மதீனா நகர மக்கள் - அன்பும், பணிவும், கருணையும் கொண்டவர்களாகவே திகழ்கிறார்கள். விருந்தோம்பும் பண்பிலும், தலை சிறந்து விளங்குகிறார்கள்.....

இதுவரை, என்னுடன் சேர்ந்து பயணித்த அன்பு உள்ளங்கள் அனைத்துக்கும் நன்றி.....
நன்றி........நன்றி...... விடை பெறுகிறேன்.....


 
Vavar F Habibullah


No comments: