Friday, October 2, 2015

புனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (8)

 Vavar F Habibullah

இந்த முறை, இந்தியாவில் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற் கொண்டனர். இந்திய ஹஜ் கமிட்டி இவர்களை தேர்வு செய்து அனுப்புகிறது என்றாலும், பணக்கார ஹாஜிகளுக்கென்றே செயல்படும் சில ஹஜ் டிராவல் நிறுவனங்கள் இந்த சேவையை முழு அளவில் வியாபார நோக்கிலேயே நடத்து கின்றன. ஹாஜிகள் கொடுக்கும் பணத்தை வைத்தே அவரகளின் ஹஜ் CATEGORY நிரணயம் செய்யப்படுகிறது. A கிளாசில் தொடங்கி, E கிளாஸ் வரை தரவாரியாக ஹாஜிகள் பாகுபடுத்த படுகின்றனர். இதை சவூதி அரசு வகைப் படுத்துகிறது.

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி, இந்திய ஹஜ் கமிட்டியின் ஒரு கிளையாகவே செயல் படுகிறது. தமிழக ஹாஜிகளை தேர்வு செய்து அவர்களை விமானநிலையம் அழைத்து வந்து வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சிகளை மக்கள் வியக்கும் வண்ணம் நிகழ்த்தி அந்த படங்களை பத்திரிகைகளில் வெளியிட்டு மகிழ்வதோடு அதன் திருப்பணி நிறைவு பெறுகிறது.

உலகிலேயே எதற்கும் கோபம் வராத ஹாஜிகள் உண்டு என்று சொன்னால், அது நம் தமிழக ஹாஜிகளையே சாரும். தமிழக ஹஜ் குழுவால் தேர்வு செய்து ஹஜ் சேவை என்ற பெயரில் ஹாஜிகளோடு அனுப்பி வைக்கப் படும் ஹஜ் வாலண்டியர்கள் ஹாஜிகளை மூளைச் சலவை செய்வதில் வல்லவர்கள்.

தரம் குறைந்த விடுதிகளிலேயே, தமிழக ஹாஜிகள் அடைக்கப் படுகின்றனர். சாதாரண மாக 10 பேர் தங்கும் அறையில், 30 போ் வரை திணிக்கப் படுகின்றனர். 6 க்கு 2 என்ற விகிதத்திலேயே, இவர்களுக்கான SPACE ஒதுக்கப் படுகிறது. பல மணி நேரங்கள் கியூ வில் நின்று காலைக் கடன்களை கழிப்பதிலேயே, ஹாஜிகளின் நல்ல நேரங்கள் அனைத்தும் வீணடிக்கப் படுகின்றன. இவர்களின் எந்த குறைகளையும் எவரும் காது கொடுத்து கேட்பதில்லை. ரூமில் அடை பட்டு கிடக்கும் பெரும்பாலான ஹாஜிகள் நோயால் பாதிக்கப்படுகின்றனர். சரியான மருத்துவ பாதுகாப்பு வசதிகள் இவர்களுக்கு முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. வயதானவர்கள் நிலை பற்றி மேலும் விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

பல இன்னல்களுக்கிடையில், ஹஜ்ஜை முடித்து, அருளை சுமந்து வரும் ஹாஜிகளை சந்தித்து, அவர்கள் ஹஜ் பயணம் எப்படி இருந்தது என்று கேட்டால் மிகவும் நல்ல படியாக அமைந்தது ... என்றே பெருந்தன்மையுடன் கூறி மகிழ்வர். மேலும் அவர்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்பங்கள் எதையும் துணிந்து எவரிடமும் வாய் விட்டு சொல்வதும் இல்லை.

அதற்கான காரணத்தை சொன்னால்....

ஹஜ் வாலண்டியர்களாக வருபவர்கள், ஹஜ் அட்வைஸ் என்ற பெயரில், சில நேரம் ஹாஜிகளுக்கு வகுப்பு நடத்துவர். அதில் அவர்கள் முக்கியமாக அறிவிப்பது..... ஹாஜிகளை பரம சாதுக்களாக மாற்றி விடும்

அப்படி என்ன உரை தான் அவர்கள் நிகழ்த்து வார்கள் .............

" மதிப்பிற்குரிய ஹாஜிகளே,
ஹஜ் செய்வது சாதாரண விஷயமல்ல
இறைவன் விரும்புகிறவர்களுக்கு மட்டுமே இந்த நற்பாக்கியம் கிட்டும், எனவே நீங்கள் பாக்கியசாலிகள்.........
இங்கு சில கஷ்டங்கள் இருக்கும், இட நெருக்கடி இருக்கும், பாத் ரூமில் கால் கடுக்க நிற்க வேண்டியது வரலாம், சில நேரங்களில் தண்ணீர் கூட வராமல் போகலாம், பஸ் வசதிகள் கூட சில நேரங்களில் கிடைக்காமல் போகலாம், கால் நடையாகவே சில நேரங்களில் செல்ல வேண்டியது வரலாம். இவற்றை எல்லாம், இறைவனுக்காக நீங்கள் பொறுத்தே ஆக வேண்டும், உங்கள் கஷ்டங்களை வெளியில் சொன்னால் இறைவன் உங்கள் ஹஜ்ஜை ஏற்றுக் கொள்ள மாட்டான், நீங்கள் அறிந்தே மீண்டும் பாவச் செயலை செய்து விடாதீர்கள்"

தங்களை இலவசமாக அழைத்து வந்தவர்களுக்காக, இவர்கள் செய்யும் கைமாறு தான் இந்த உருக்கமான வேண்டு கோளுக்கான மூல காரணம்.

ONE TIME TOURIST போலவே, ஹாஜிகள் நடத்தப்படுவது உண்மையிலேயே மிகவும் கொடுமையான விஷயம் தான்.

எதுவும் பேச இயலாத இன்று பிறந்த குழந்தைகள் போல் தமிழக ஹாஜிகள் மாற இதுவே காரணம்......
தொடரும்

 Vavar F Habibullah

No comments: