Saturday, July 7, 2018

குடும்பமும் குழந்தையும்

14 வயது இளம் பருவ மாணவன் ஒருவனை,
இரண்டு நாட்கள் முன்பு எங்களது மருத்துவமனைக்கு ஒரு மருத்துவ செக்கப்புக்காக, அவனது தாய் - அழைத்து வந்தார்.

மெயின் பிரச்சினைகளை, தாய் விவரித்தார்....
படிப்பில் கவனமில்லை
சரியான தூக்கம் இல்லை
எப்போதும் எரிந்து விழுகிறான்
சரியாக பேசுவதில்லை
எவரோடும் அதிகம் பழகுவதில்லை
அதிக சோர்வாக இருக்கிறான்
அதிகம் உணவு அருந்துவதில்லை

உண்மையைச் சொன்னால், அதிகம் மனச் சோர்வுற்று இருப்பது போல் தெரிகிறது.
பல மருத்துவர்களைப் பார்த்தாகி விட்டது.
உங்களை பற்றி சொன்னார்கள், அதனால் அழைத்து வந்தேன். ஒரே பையன் டாக்டர்....

அருமை பெருமையாய் வளர்த்தேன். நீங்கள் தான் இவனை சரி படுத்தி தர வேண்டும்.
தாயார் விம்மினார்.....

பையன் 'டிப்பரஷனில்' இருப்பது தெளிவாகவே புரிந்தது. பெரிய பையன் என்பதால் தாயாரை சற்று வெளியே அமரச் சொல்லி விட்டு, மாணவனை செக் செய்து விட்டு, டைரக்டாக சில கேள்விகளை முன்
வைத்தேன்.

"சார்.....யாருமே என்னிடம் காரணத்தை கேட்கவில்லை. செக் அப் செய்தார்கள்..
டெஸ்ட் பண்ண சொன்னார்கள்... மாத்திரை, மருந்துகளை எழுதி தந்தார்கள். இதனால் அதிக தூக்கமும், சோர்வும் தான் ஏற்படுகிறது."

என்னை புரிந்து கொண்ட அவன், மெதுவாக சில உண்மைகளை சொல்ல துவங்கினான்.

"அம்மாவும், அப்பாவும் எப்போதும் சண்டை போடுகிறார்கள் . என் கண் எதிரிலேயே, இருவரும் கட்டிப் புரண்டு ஒருவரை ஒருவர் அடிக்கவும் செய்கிறார்கள்...
முடிவில், அம்மா...அப்பா கட்டிய தாலியையும், அறுத்து எறிந்து விட்டார்கள். விவாகரத்து செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறார்கள்.
அப்பா - இப்போதெல்லாம் வீட்டுக்கு வருவதில்லை. அம்மா, அப்பாவை தூக்கி எறிந்தது போல், என்னால் அப்பாவை தூக்கி எறிய முடியவில்லை டாக்டர்........"

பையன், அழுத அழுகையை கட்டு படுத்த எவராலும் இயலவில்லை. இப்படி ஒரு சிறுவன், நீண்ட நேரம் அழுது நானும் பார்த்தது இல்லை.


Vavar F Habibullah

No comments: