Saturday, January 30, 2016

வயதும் வாழ்வும்

Vavar F Habibullah
எந்த வயது வரை வாழ்வு இன்பம் அளிக்கும்?
புகழ், பணம், பதவி, ஆரோக்கியம் இதில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க மனிதனுக்கு சான்ஸ் தரப்படுமானால் அறிவுள்ள மனிதன் ஆரோக்கியத்தையே தேர்ந்தெடுப்பான்.
உலகில் பாதி நிலபரப்பை, தன் காலடியில் கிடத்திய மகா அலெக்சாண்டர், 32 வயதில் சாதாரண மலேரியா காய்ச்சல் கண்டு இறந்து போனான். அவன் வழியை பின்பற்றிய மாவீரன் நெப்போலியன், 40 வது வயதில் கான்சர் நோயில் இறந்து போனான். உலகையே அச்சுறுத்திய அடால்ப் ஹிட்லர், தற்கொலை செய்து கொண்டான். உலகப் பேரழகி கிளியோபாட்ரா தற்கொலையில், தன் வாழ்வை முடித்து கொண்டாள். சீசரை அவன் நண்பன் புரூட்டஸ் குத்தி கொன்றான். முசோலினியை, அவன் மக்களே அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டு மகிழ்ந்தனர். உலகை பந்தாடிய இந்த கொடுங்கோலர்களின் நிலை இப்படி என்றால்........

காலத்தின் கோலத்தால் மக்கள் தலைவர்களாகி விட்ட சில கோமாளிகளை நினைத்தால் பரிதாபம் வருகிறது.நோய்களில் விழுந்து எழும் இவர்களால், மக்கள் நலனில் அக்கறை காட்ட இயலாது என்பது மருத்துவ உண்மை.
60 வயதை கடந்த - ரிட்டைர்டு மனிதர்களை, இப்போதைய இளைஞர் உலகம் கண்டு கொள்வதில்லை. வீட்டிற்கும், நாட்டிற்கும் தேவையற்றவர்களாகவே இவர்கள் கருதப்படுகிறார்கள். நோய்களில் வீழ்ந்து விட்டால், இந்த முதியவர்களை அருகிலிருந்து கவனிப்பார் எவரும் இல்லை. சமூகத்தில் தேவையற் ற பிரஜைகளாக நிராகரிக்கப்படும் இவர்கள் நிலை, மிகவும் பரிதாபகரமானது. இன்றைய டிஜிடல் உலகில் வாழ இயலாமல் இவர்கள் தவிக்கிறார்கள். மருத்துவமனைகளும் முதியவர்களை பெரிதாக கண்டு கொள்வதில்லை;
உற்றார், உறவினரும் அக்கறை எடுப்பதில்லை. இவர்களின் துரித மரணமே, உறவினர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
EUTHANASIA எனப்படும் 'கருணைக் கொலை' யை மேநாடுகள் அங்கீகரிக்க துவங்கியுள்ள கால நேரம் இது. உயிருக்கு போராடும் நிலையில் உள்ளவர்களை, இதன் மூலம் மரணம் அடைய செய்ய இயலும். இந்திய அரசும் இதை நடைமுறை படுத்த இயலுமா, என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
"கிழவன் எப்போது சாவான் - திண்ணை எப்போது காலியாகும்" என்று எண்ணுவோருக்கு இது வரப்பிரசாதமாகவும் அமையலாம்

Vavar F Habibullah

No comments: