Tuesday, February 16, 2016

விதி சொல்லும் விதி

விதி என்றால் என்ன? விதியை மதியால் வெல்ல இயலுமா? நினைத்ததை முடிப்பவர்கள் அறிவை நம்புகிறார்களா இல்லை - விதியை நம்புகிறார்களா! தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது மதியா அல்லது விதியா! விதியின் கதை கூட சற்று சுவாரஸ்யமானதுதான். விதியின் சொல்லை மதியென்று நம்பி வாழ்ந்து மாய்ந்தவர்களே சரித்திரத்தின் பக்கங்களில் நாயகர்களாக உலா வரு கிறார்கள்.

கேட்டது கிடைக்கும், விரும்பியது நடக்கும் என்கிறார்களே... இவையெல்லாம் கிடைக்கலாம், நடக்கலாம் - ஆனால் நிலைக்குமா?

கதை சொல்லும் காலம் என்பதால் ஒரு நிஜ கதையும் நினைவில் வந்து போகிறது.

ஜெர்மனியின் ஹிட்லரை தெரிந்த அளவுக்கு கோயபல்சை அதிகம் பேர் அறிந்தது இல்லை.
சாதாரண ஹிட்லரை, உலகறிய செய்தவன் இந்த கோயபல்ஸ். மகா அறிவாளி, அரசியல் பாடத்தில் பிஎச்டி பட்டம் பெற்ற டாக்டர். அறிவு ஜீவி. ஆனால் ஒரு கால் ஊனமுற்றவன். தலைவன் ஆவதற்கான எல்லா தகுதி களும் இருந்தும் தனக்கு இருந்த ஊனம் கருதியே தலைவனாகும் ஆசையை உதறி எறிந்தான். தன் சொல்படி கேட்டு நடக்கும் ஒரு நல்ல தலைவனை ஜெர்மனியில் தேடி அலைந்தான் இவன். அடால்ப் ஹிட்லர் இவனது மனதை கவர்ந்தான். ஹிட்லரை சந்தித்த அவன், ஹிட்லரை ஜெர்மனியின் வரலாற்று நாயகனாக அறிமுகம் செய்ய போவதாக வாக்குறுதி அளித்தான். இவனது பேச்சில் மயங்கிய ஹிட்லர், கோயபல்சை தன் உற்ற நண்பனாக ஏற்று கொண்டான்.விரைவிலேயே நாஜி கட்சியின் - கொள்கை பரப்பு செயலாளராக, ஹிட்லரால் நியமனம் செய்யப்பட்டான். நாஜி கட்சியின் சட்ட திட்டங்களை இவனே வகுத்தான்.

கலை,இலக்கியம்,நாட்டியம், நாடகம், சினிமா மற்றும் ஊடகத்துறை முழு மையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான் கோயபல்ஸ். அவற்றில் நாஜி கொள்கைகளை நாசுக்காக புகுத்தி மக்கள் மனதில் பதிய வைத்தான.பேச்சுக்கலையில் வல்லவனான இவன், ஹிட்லரையும் இந்த கலையில் வல்லவன் ஆக்கினான். தினசரி இரண்டுமணி நேரம் கண்ணாடி முன் நின்று பேசுவதற்கு ஹிட்லருக்கு பயிற்ச்சி அளித்தவனும் இவன் தான். இந்த கலைகளில் அனாயாசமாக வென்று காட்டிய ஹிட்லரை ஓரு ஜீனியஸ் என்று வர்ணித்தான் இவன். ஹிட்லரே தன் கதாநாயகன் என்றும் பெருமைப்பட கூறிக்கொண்டான். இவன் அநுமதியின்றி எந்த செயலையும் செய்வதற்கு ஹிட்லர் தயங்கினான். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கோயபல்ஸ், ஹிட்லரை தன் கைப்பாவையாக மாற்ற முயன்றான். ஜெர்மனியின் முழு அதிகாரமும் இவன் கண் அசைவில் நிகழ்ந்தன.எதிரிகள் பந்தாடப்பட்டனர்.யூதர்கள் கூண்டோடு எரியூ ட்டப்பட்டனர். கலவரங்களை தூண்டுவது, எதிரிகள் மீது பழி சுமட்டுவது, அவர்களை அழிப்பது, மீடியாவை பயன்படுத்தி மக்களை நம்ப வைப்பது, அவர்களை தம் பக்கம் ஈர்ப்பது...... பிரச்சாரக்கலை அவன் கரங்களில் அநாயாசமாக சுழன்று விளையாடியது.

இந்த கலையை பயன் படுத்தியே ஹிட்லரை இரண்டாம் உலக போருக்கு தயார் செய்தான்.
ஹிட்லர் இல்லை என்றால் உலகம் இல்லை - உலகப்போரும் இல்லை என்ற உணர்ச்சி கோசத்தை எழுப்பியவனும் இவனே. உலகாள பிறந்தவன் ஹிட்லர் என்ற போரிசையை, மெல்லிசையாக அவன் காதுகளில் மெதுவாக இசைத்தான். மகுடிக்கு கட்டு பட்ட பாம்பு போல் கோயபல்ஸ் கரங்களில் விழுந்து ஆடினான் ஹிட்லர். அது அவனை பேரழிவில் கொண்டு சேர்க்கும் என்பதை இவன் உணரவில்லை.

மதியின் மடியில் சில காலம் படுத்து உறங்கிய விதி - இப்போது விழித்துக் கொண்டது.மதியை சற்று ஓய்வு கொள் ள செய்து விட்டு, விதி தன் விதியை செயல்படுத்த துணிந்தது.

இரண்டாம் உலகப்போரின் முடிவு ஹிட்லரை தோல்வி என்ற அகல பாதாளத்தில் தள்ளியது. இருள் சூழ்ந்த பாதாள பதுங்கு குழியில் பதுங்கிய ஹிட்லரை எதிரிப்படைகள் முற்றுகை இட்டன. தப்பிக்க முடியாத சூழல்.ஹிட்லர் தன் மனைவியை தன் கைகளால் சுட்டு வீழ்த்தி விட்டு தன்னையும் சுட்டு தற்கொலை
செய்து கொண்டான்.

ஏப்ரல் மாதம் 30 - ம் நாள் 1945... உலகை பயமுறுத்திய ஹிட்லர் தான் நேசித்த உலகை விட்டு மறைந்த நாள்.
விதி விடவில்லை......துரத்தியது.....
கோயபல்சை பிடிப்பது, அத்தனை கஷ்டமான காரியமாக அதற்கு படவில்லை. அவன் அதை அப்போது தேடிக் கொண்டிருந்தான் என்று தான் சொல்ல வேண்டும். அறிவு ஜீவியான அவனுக்கு, மதி சுத்தமாக வேலை செய் யவில்லை. சற்று நேரத்தில் விதி கோயபல்சின் வீட்டு கதவை தட்டியது.

ஹிட்லரின் டாக்டர் - அங்கே கோயபல்சின் ஆறு சின்னச் சிறு குழந்தைகளுக்கும் வலி தெரியாமல் மார்பின் மயக்க ஊசியை செலுத்திக் கொண்டிருந்தார். பின்னர் கொடிய சய னய்டு விஷம் செலுத்தப்பட்டது. கோயபல்சின் கண்முன்னாலேயே அவன் குழந்தைகள் ஒவ்வொன்றாக துடிதுடித்து இறந்தன. தன்னால் உருவாக்கப்பட்ட, தன் ஹீரோ ஹிட்லர் எடுத்த முடிவையே அவனும் எடுக்க விரும்பினான்.

மே மாதம் நாள் 1 - ம் தேதி 1945 - ம் ஆண்டு...
தன் மனைவியை, தன் கைகளால் சுட்டு கொன்ற கோயபல்ஸ் துப்பாக்கியின் முனையை
தன் நெஞ்சில் வைத்து விசையை அழுத்தினான்.....
விதி தன் வேலை முடிந்து விட்ட மகிழ்வில் அங்கிருந்து நடையை கட்டியது.

Vavar F Habibullah

No comments: