Sunday, August 21, 2016

ஊனம் என்பது நமக்கு உடலில் மட்டும்தான்…

*ஊனம் என்பது
நமக்கு
உடலில் மட்டும்தான்…
உள்ளத்திலோ
நாம்
ஒலிம்பிக் வீரர்கள்!

*கவலை
கொள்ளாதே…
தேய்பிறையிலும்
நிலா அழகுதான்!


*மகிழ்ச்சி கொள்…
நட்சத்திரங்களை
நம்பி
வானம் இல்லை…
ஆனால்,
நம்மை நம்பி
உலகம் இருக்கிறது!

*கவனம் கொள்…
கிளை ஒடிந்தாலும்
கனிகள் தர
மரம் மறுப்பதில்லை!

* உறுதிகொள்…
வால் அறுந்த
பல்லிக்குத்தான்
வலிமை அதிகம்!

*உற்சாகம் கொள்…
துளையிட்ட
பிறகுதான்
புல்லாங்குழலாய்
பூபாளம்
இசைக்கிறது
மூங்கில்!

*நாம்
சாய்ந்து
நடந்தாலும்…
நம் சாதனைகளால்
நிமிர்ந்தே நிற்போம்!

*கைகள்
இல்லாமல்
போனாலும்…
நம்பிக்கையால்
நாம்
வெற்றி கொள்வோம்!

*கால்கள்
இரண்டும்
இல்லாமல் போனாலும்…
தன்னம்பிக்கையால்
இந்தத்
தரணியை வெல்வோம்!

*குள்ளமாய்
நாம் இருந்தாலும்…
நம் முயற்சியால்
சிகரம் தொடுவோம்!

* பேச முடியாதவர்களாக
நாம்
இருந்தாலும்…
நம் வெற்றிகளால்
இந்த உலகம்
நம்மை பேசட்டும்!

*வெட்டிய பிறகுதான்
சந்தனமே
மணக்கிறது…
பார்க்க முடியாதவர்களாக
நாம்
இருந்தாலும்…
நம் சாதனைகளை
இந்த உலகம்
பார்க்கட்டும்!

*மாற்றுத் திறன்
கொண்டவர்கள் நாம்…
இந்த
உலகத்தையே
மாற்றி அமைப்போம்!

================================

— மின்னல் பிரியன், சென்னை.

நன்றி: வாரமலர் (தினமலர்)
https://rammalar.wordpress.com



No comments: