Thursday, December 29, 2016

ஓர் ஒற்றைக் குயிலின் ஓலம்.....! .................................கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

சோலையிலே ஓர் ஒற்றைக் குயில்
சோகக் குரலிலே கூவுதடி
மாலையிலும் அதிகாலையிலும் - அது
வாடி மனம் வெந்து கூவுதடி.....!
சின்னஞ் சிறு பராயத்திலே
சேர்ந்த துணை மறைந்தோடியது
வண்ணக் கருங்குயில் தன்துணையை - கிட்டே
வாவென்ற ழைத்துமே கூவுதடி.....!

கொஞ்சிக் கலந்துமே மாமரத்தில்
கூடித் துளிர் கொய்து பாடியதும்
நெஞ்சிற் கனவுகள் கூடிடவே - அன்று
நித்தம் குளிர்ந்ததை எண்ணுதடி.....!
சோலையிலே பறந்தோடிய தும்
சொர்க்கமென ஓன்று கூடியது
பாலையருந்திப் பழஞ்சுவைத்தே - காதற்
பாடலிசைத்ததைக் கூவுதடி.....!
சொந்த அனுபவம் யாவு மின்று
சொப்பன மாகவே போன தெண்ணி
வெந்து மிக நொந்து கூவுதடி - அதன்
வேதனை என்று தான் தீருமடி......?

Kalaimahel Hidaya Risvi

No comments: