Friday, December 30, 2016

நகரத்து தார்ச்சாலை ....!

ஒரு பகல்நேர வேணாவெயிலில்
கொதிக்கும் தார்சாலையில்
கானல்நீர் வழிந்தோடி
வெம்மையின் தணலை
பதம்பார்த்துக் கொண்டிருந்தது
பரபரப்பாக விரைந்தோடும்
வாகனங்கள் வரிசையை
விட்டுவிலக்காமல்
குளிரூட்டலில் வெளிவெக்கையை
அறியாத பயணிகளை சுமந்தபடி
நேர்கோட்டில் பயணிக்கின்றன
பக்கவாட்டுப் பாதையில்
பாதசாரிகள் நடைபோடுகின்றனர்

அவரவர் மனச்சுமைகளின் அழுத்தத்தின்
அளவிற்கேற்ப துரிதகதியில்
நடைபாதை சிறுவியாபாரிகள்
கடைவிரித்து கூவிவிற்கும்
பொருட்கள் அவர்களது பசித்த வயிற்றை
நிரப்ப விரிந்து கிடந்தன
எல்லாமே நகர்ந்துகொண்டிருக்க
கன்னங்கரேலென இரையெடுத்த
மலைப்பாம்புபோல தார்ச்சாலை
நகராமலே கிடக்கிறது


ராஜா வாவுபிள்ளை

No comments: