Sunday, January 29, 2017

மனதிற்கு ரொம்பப் பிடித்திருக்கின்றது

கவி அமுதன்
வானில்
தூண்டில்போட்டு
ஒரு விண்மீனையாவது
பிடிக்கலாம் என்று
முயற்சிக்கிறேன்
பனித்துளிகள்
ஒவ்வொன்றிலும்
முகம் பார்க்க
முனைகிறேன்
மரணத்தாகம் கொண்டு
ஒரு முழுநதியையாவது
குடிக்கப் பார்க்கிறேன்

நிலாமேல்
சவாரிசெய்தாவது
இந்தப் பூமியை
ஒரேஒரு தடவை
சுற்றி வரப்பார்க்கிறேன்
உறக்கம் வந்து
தலைகோதினால்
அதை விழுங்க
நினைத்து
மல்லாக்காய்ச்
சரிந்துகொள்கிறேன்
காணல்நீரில்
மீன் பிடிக்க
கைகள் நீட்டுகிறேன்
இப்படியே
நிகழ்காலம்
வேடிக்கையாய்
கழிகிறது
ஆசைகள்
தீரவுமில்லை
நிறைவேறவுமில்லை
ஆனாலும்
இப்போதைக்கு
இவையெல்லாம்
மனதிற்கு ரொம்பப்
பிடித்திருக்கின்றது

#கவி_அமுதன்

No comments: