Thursday, February 16, 2017

அன்று, கல்லூரியில் படிக்க மறுக்கப்பட்டவர்...

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு திமுக அரசு பொறியியல் சேர்க்கைக்கு ஒற்றைசாளர முறையை கொண்டுவந்தது. இதில் கிராமப்புற மாணவர்கள் பெருமளவில் பயனடைந்தனர். அம்மாதிரி அண்ணா பல்கலைக்கழகத்தால் இடம் ஒதுக்கப்பட்டு, மதுரை தியாகராசர் கல்லூரிக்கு கல்வி பயில சென்ற செல்வாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கிருந்த கல்லூரி முதல்வர் இவருக்கு இடம் தர மறுத்தார். “மின்னியல்/மின்னணுவியல் படிக்க போலியோவால் இருகால்களும் செயலிழந்த உங்களால் முடியாது. ஆய்வகத்தில் ஏதேனும் விபத்துகள் உங்களால் ஏற்படும் பட்சத்தில் அது பெரிய பிரச்சினை ஆகிவிடும்” என்று மறுத்தார்.


கல்வி மட்டுமே தன்னை கரை சேர்க்கும் என்று நம்பியிருந்தவரின் தலையில் இடி விழுந்தது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு திரும்பவும் வந்து பெரும் போராட்டங்களை நடத்தியே கல்லூரியில் மீண்டும் இடம்பெற்றார்.

அன்று, கல்லூரியில் படிக்க மறுக்கப்பட்டவர்...

இன்று, ஐரோப்பாவின் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் ஆராய்ச்சிக்கான டாக்டரேட்டுடன் ஹானர்ஸ் பட்டம் கொடுத்து கவுரவிக்கப்பட்டிருக்கிறார்.

வாழ்வில் சிறந்தபிறகு பெற்ற தாய் தந்தையரைகூட மறந்துவிடும் இளைஞர்கள் வாழும் காலத்தில்தான் செல்வாவும் வாழ்கிறார். எனினும் இந்தியாவில் சமூகநீதி சிந்தனைகளும், அதை செயல்பாட்டுக்கு கொண்டுவந்த தலைவர்களாலும்தான் தான் இந்த நிலைக்கு உயர்ந்ததாக இன்றும் நன்றியோடு இருக்கிறார். எனவேதான் டாக்டரேட்டுக்காக தான் சமர்ப்பித்த ஆராய்ச்சித் தாளிலும் கூட இந்தியாவில் சமூகநீதி காத்த தலைவர்களான பெரியார், அண்ணா, கலைஞர், வி.பி.சிங் ஆகியோருக்கு நன்றி செலுத்தியிருக்கிறார்.

விடாமுயற்சித் தமிழனான செல்வகுமாரின் வெற்றிக்கதை வரும் ஞாயிறு (19-02-2017) அன்று ‘தினகரன்’ நாளிதழோடு இணைப்பாக வெளிவரும் ‘வசந்தம்’ வார இதழில் கவர்ஸ்டோரியாக வெளிவருகிறது.

வாழ்த்துகள் வினையூக்கி செல்வா!

யுவ கிருஷ்ணா

No comments: