Thursday, February 16, 2017

விடியலில் விழித்த விழிகள்.....!

ஓர் நீண்ட இரவின்
விடியலில் விழித்த
விழிகள் தனக்கேயான
காட்சிகளைக் காண விழைகின்றன!
இரைதேடி பறக்கும்
அதிகாலைப் பட்சிகள்
சென்றடையும் குளங்களும்
குளக்கரைகளும் நீந்தும் சிறுமீன்களும்!

பனிப் படர்ந்த வயல்வெளிகளும்
ஆற்றங்கரையின் ஒற்றையடிப்பாதையும்
கால்நடைகளின் அணிவகுப்பும்
இயற்கை எழில் கொஞ்சும் நாட்டுப்புறமும்!
காணக் கிடைத்ததோ....!
வாகனங்கள் கக்கிய
புகையில் கலந்த பனிமூட்டம்
உபரியாய் உண்டதை எரிக்க
காலை நடைபயிலும் கனவான்கள் கூட்டம்!
வயல்வெளிகளில் மனிதன்
கட்டிய கல் கூ(வீ)டுகள்
பூட்டிய இரும்புக்கதவுகளுடன்
தண்ணீர் சலசலத்து ஓடிய ஓடைகள்
அரவமில்லா தெருக்களாய் அமைதி காக்கின்றன!

ராஜா வாவுபிள்ளை

No comments: