Wednesday, March 15, 2017

எனக்குத் தெரிந்து ....! ஒரே வேலை ஒரே நிறுவனம்.

எனக்குத் தெரிந்து, ஒருவர் பலகாலமாக ஒரே நிறுவனத்தில் நிதி நிர்வாகத்தில் இரண்டாம் நிலையில் வேலைபார்த்தார்.
நல்ல நிலையில் இருப்பதாலும், நல்ல சம்பளமும் வசதிகளும் கிடைப்பதால்தான் யாரும் ஒரே நிறுவனத்தில் பல வருடங்களாக தொடர்ந்து வேலைபார்க்க முடியும் என்று எண்ணுவதே உலகவழக்கம். சிற்சில சமயங்களில் அது உண்மையாகவும் இருக்கலாம்.
ஆனால் நடப்பது என்னவென்று பார்ப்போமா?

தொடக்கம் முதலாகவே அதே நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து, கல்வி கற்றிருந்தாலும், வேலைகளை அங்கிருந்தே படித்ததால் ஒரு ஈடுபாடு ஏற்பட்டுவிடுவதாலும், அதிக பணி அழுத்தம் இல்லாததாலும், நிர்வாக இயக்குனர்களின் நம்பிக்கையை பெற்றிருப்பதாலும், தனக்கு கீழே பணிபுரிபவர்கள் தரும் மரியாதையில் உறைந்து போவதாலும் ஒரே நிறுவனத்தில் பல வருடங்கள் பணிபுரிய நேரிடுகிறது. இவர்கள் பார்க்கத்தான் பெரிய அந்தஸ்தில் இருப்பதுபோல் தோன்றும் ஆனால் பாவம் வாங்கும் சம்பளம் அவரைப்போல் பணிசெய்யும் மற்ற கம்பெனிகளில் கிடைப்பதைவிட குறைவாகவே இருக்கும். ஏனென்றால் இயக்குனர் அல்லது முதலாளியிடம் உள்ள ஈடுபாட்டினாலும் நெருக்கத்தினாலும் கிடைக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டு பேசாமல் வேலைபார்ப்பார்கள். முதலாளியும் சந்தற்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு கேட்க்காமலே ஏன் கொடுக்கவேண்டும்? கேட்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிடுவார். மேலும், கேட்டு கிடைக்காவிட்டால் என்ன செய்ய போகிறோம் என்ற தாழ்வு மனப்பான்மையுமே இதற்கான காரணங்களாக இருக்க முடியும்.
இப்படியாக எந்தவிதமான மாற்றமோ முன்னேற்றமோ இல்லாமல் போய்க்கொண்டிருந்த நிலவரம் திடீரென கலவரமாக மாறத்தொடங்கியது. எப்போதென்றால், முதலாளி திடீரென காலமாகிவிட்டபோது அவரது மகன்கள் சேர்ந்து ஒற்றுமையாக நிர்வாகம் செய்ய முடியாமல் பிரிந்துபோனார்கள். அந்நிலையில் நிதிநிர்வாக பொறுப்பில் இருவர் தேவையில்லை எனும் முடிவுக்கு வருகிறார்கள். அத்தருணத்தில் மூத்தவரை அனுப்பிவிட்டு அவரின்கீழ் வேலைபார்த்தவரை வைத்துக்கொள்ள முடியாது. இந்த கட்டுரைக்கான கதாநாயகன் இரண்டாம் நிலைப் பொறுப்பு வகித்தவர். வேலையில் இருந்து நின்றுவிட வேண்டப்பட்டார். வேறு வழியில்லை, கிடைக்க வேண்டிய பணிவிடுவிப்பு நலன்களை பெற்றுக்கொண்டு நின்றுவிட்டார்.
இப்போதுதான் குண்டுச்சட்டியில் குதிரை ஒட்டிக்கொண்டிருந்தவர் வெளியே வந்து உலகம் எவ்வளவு பரந்து விரிந்தது என்பதை உணர அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. முழுநேர நிதிநிர்வாகியை பணியிலமர்த்தி முழுசம்பளம் கொடுக்க முடியாத சிறு குறு நிறுவனங்களின் வேலைகளை பகுதிநேரமாக ஏற்றெடுத்து செய்யத்தொடங்கினார்.
பாருங்கள், ஓரிரு வருடங்களில் ஐம்பதுக்கும் மேலான சிறு குறு நிறுவனங்களில் வாய்ப்புக்கிடைத்து அத்தனையையும் தானாகவே ஒரு கணக்கெழுதும் நிறுவனத்தை தொடங்கி சிலருக்கு வேலைவாய்ப்பும் கொடுத்து, தனக்குத்தானே முதலாளியாக முன்பு வேலைபார்த்த போது கிடைத்த சம்பளத்தைவிட பலமடங்கு வருமானமாக ஈட்டினார். தானே முதலாளியாகவும் தனக்கு பதவி உயர்வும் கொடுத்துக்கொண்டார்.
படிய்ப்பினை:
இவருக்கு தடாலடியாக வந்த வாய்ப்பை வேறுவழி இல்லாமல் பயன்படுத்தி முன்னேற்றம் கண்டார். இவரைப்போல் எத்தையோ பேர்கள் நம்மில் இருக்கிறோம். எல்லாருக்கும் இவரைப்போல் தடாலடி வாய்ப்புகள் வருமா என்ன? அவர்களாகத்தான் வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
பாகம் 2.

No comments: