Friday, May 5, 2017

தீக்குச்சியாய் இருப்பது எளிது

தீக்குச்சியாய் இருப்பது
எளிது
தீயணைப்புப் படையாய்
இருப்பதோ கடினம்

தீக்குச்சி தன் தலையில்
கொல்லி நெருப்பின்
கனத்தோடு
இருப்பது சுலபம்தான்



அந்தத் தலைக்கனம்
உரசும்போதெல்லாம்
பற்றி எரியும் தீயைக் கண்டு
அது மகிழ்ந்தாலும்
உண்மையில்
அந்தத் தீக்குச்சிகூட
அதில்
கருகிப் போய்தான் வீழும்

தனக்கான பாதிப்பையும்
பொருட்படுத்தாத
பொறுப்பான
அக்கறைமிக்க
தீயணைப்புச் சேவை என்பதோ
நியாயத்தை
நிலைநாட்டக்கூடியது
அமைதிக்கும்
வன்முறையற்ற வாழ்க்கைக்கும்
உத்திரவாதம் தருவது
உயிர்களைக் காக்கவல்லது

- அன்புடன் புகாரிhttps://anbudanbuhari.blogspot.in/

No comments: