Saturday, June 17, 2017

தாங்கிக் கொள்ள இயலாத வேதனை என்றால் என்ன?


  நாஷித் அஹமத்

...நாம் தாங்கிக் கொள்ள இயலாத சோதனைகளை அல்லாஹ் நமக்கு தர மாட்டான் என்கிற அல்லாஹ்வின் வாக்குறுதியை நாம் சரியாக புரிந்து வைத்திருக்கிறோமா?

எதையெல்லாம் தாங்க இயலாத சோதனை என்று நாம் கருதுவோமோ அவை எதையும் அல்லாஹ் நமக்கு அளிக்க மாட்டான் என்பது இதன் பொருளல்ல.

பெற்றோருடன் அன்புடன் வாழும் ஒரு பிள்ளை, பெற்றோர் த‌ம்மை பிரிந்து விடுவது தாங்க இயலாத சோதனை தான் என்று கருதுவார்.

மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாய் வாழ்பவரிடம் உங்களுக்கு தாங்கவே இயலாத சோதனை என்றால் எதை கருதுவீர்கள்? என்று கேட்கிற போது, மனைவியோ குழந்தையோ இறந்து விடுவதை என்னால் தாங்கிக் கொள்ள இயலாது என்பார்.



அது போல், பொருளாதாரத்தை சிறுக சிறுக சேமித்து வைத்திருக்கும் ஒருவரிடம், இத்தனை வருடமாய் நீங்கள் சம்பாதித்தவை ஒரே இரவில் அழிந்து போனால் அதை நீங்கள் சகிப்பீர்களா? என்று கேட்டால், என்னால் முடியாது, அதை என்னால் தாங்கவே முடியாது என்பார்.

ஆக, ஒவ்வொருவரும், தான் எதை தாங்கிக் கொள்வேன், எதை தாங்கிக் கொள்ள இயலாமல் தவிப்பேன் என்பது பற்றி ஒரு வரையறை வைத்து தான் இருக்கிறோம். இந்த வரையறைக்கு உட்பட்டவைகளை அல்லாஹ் அளிப்பான், இதற்கு மேல், எதையெல்லாம் என்னால் தாங்க இயலாது என்று நான் கருதுகிறேனோ அவற்றை அல்லாஹ் எனக்கு அளிக்க மாட்டான் என்று நாம் நினைக்கிறோம்.

இது முற்றிலும் தவறு.

தாங்கிக் கொள்ள இயலாத வேதனைகளை நமக்கு அல்லாஹ் தர மாட்டான் என்றால், தாங்கிக் கொள்ளவே இயலாது என்று நான் நினைப்பவைகளை கூட நமக்கு அளித்து, அதை தாங்கிக் கொள்ளும் மன நிலையை தருவான் என்று பொருள்.

சிந்தித்துப் பார்க்கையில், இது தான் மனிதனுக்கு தேவையும் கூட.

நாம் எதை ஏற்றுக் கொள்ள இயலாது என்று அஞ்சுகிறோமோ, அவை எவ்வாறாயினும் நம்மை அடைந்து தான் தீரும். நம் பெற்றோர் நம்மோடு எல்லா காலமும் இருக்க மாட்டார்கள். அதை நமது உள்ளம் ஏற்க மறுத்தாலும் அது தான் உண்மை.

உறவுகள், இரத்த பந்தங்கள் எல்லாம் என்றைக்கும் ஒன்றாக இவ்வுலகில் நீடித்து வாழ மாட்டார்கள்.

ஏழை என்றைக்கும் ஏழையாகவே இருக்க மாட்டான் என்பது போல், செல்வந்தர் என்றைக்கும் செல்வந்தனாகவே நீடிக்கவும் மாட்டான்.

ஆக, எது 100% உண்மையோ அதை அல்லாஹ் நிகழ்த்தியே தான் தீருவான். அவை என்னால் தாங்கிக் கொள்ள இயலாதவை என்று நாம் கருதினாலும் சரியே.
அல்லாஹ் அதை நிகழ்த்துவான், அதை ஏற்கும் மன திடத்தை நமக்கு அளிப்பான்.

சிறு சிறு பிரிவுகளை ஏற்க முடியாது மன உளைச்சலுக்கு ஆளாகிறவர்கள், நபிமார்களின் வாழ்வையும் சஹாபாக்களின் வாழ்வையும் திரும்பிப் பார்க்க வேண்டும்.

சொந்த நாட்டையும், சொத்து சுகங்களையும் விட்டு விட்டு உடுத்திய துணியுடன் அகதியாய் நாடு துறக்க நேர்ந்தது அவர்களுக்கு, அப்போது சாதாரண மனிதன் என்கிற பார்வையில் இது தாங்கிக் கொள்ளவே இயலாத வேதனை. அதை அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்தான், அதை தாங்கிக் கொண்டார்கள்.

அல்லாஹ்வை நம்புகிறேன் என்று சொன்ன ஒரே காரணத்தால் எத்தனையோ சஹாபாக்கள் கொடூரமான சித்தரவதைகளுக்கு ஆளானார்கள், இரும்பு சீப்பினால் உடலின் சதை கிழிக்கப்பட்டு எலும்பு வரை துவம்ஸம் செய்த வேதனை என்பது நம் பார்வையில் தாங்கிக் கொள்ள இயன்றதா?

வாளினால் பிறப்புறுப்பு குத்திக் கிழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரங்கள் சகித்துக் கொள்ளத்தக்கவையா? நிச்சயம் இல்லை.

உயிரை காப்பாற்ற‌ ஃபிர்வ்னிடமிருந்து ஓட்டமெடுத்த மூஸா நபியின் அந்த நேரத்து மன நிலை நம் பார்வையில் சகித்துக் கொள்ளத்தக்கதா?

தீப்பிழம்பில் தூக்கியெறிப்பட தயாராக்கப்பட்ட இப்ராஹிம் நபியின் மன நிலை நம் கண்களுக்கு சகித்துக் கொள்ளதக்கதாக இருக்கிறதா?

ஆண் குழந்தையான மூஸா நபியை காப்பாற்றும் பொருட்டு, அவர்களை ஆற்றிலே விட்டு விட்டு குழந்தையின் நிலை என்னவாகுமோ என்கிற பதற்றத்தை கொண்டிருந்த மூசா நபியின் தாயார் அதை சகித்துக் கொண்டிருப்பார்கள் என்று நமக்கு எண்ண முடிகிறதா?

மகனை வெட்டி பலியிடுமாறு அல்லாஹ் சொல்லி விட்டான் என்பதனால் அதற்கு கூட ஆயுத்தமான இப்ராஹிம் நபியின் அப்போதைய மன நிலை நமது பார்வையில் திடமானதா?

இன்று எதையெல்லாம் என்னால் தாங்கவே இயலாது என்று கருதி ஒரு வரையறை இட்டு வைத்துள்ளோமோ அந்த வரையறைக்குள் அடங்காத, நமது கற்பனையிலேயே நிற்காத வேதனைகளை தான் முன் சென்ற நபிமார்களும் உத்தம சஹாபா பெருமக்களும் சந்தித்திருக்கின்றனர்.
அவற்றை சகிக்கும் மன தைரியத்தை அல்லாஹ் இவர்களுக்கு வழங்கியிருக்கிறான்.

காரணம், ஒன்றே ஒன்று தான்.

ஈமான் !

மகிழ்ச்சியும் இழப்பும் அவன் புறத்திலிருந்து தான் வருகின்றன என்பதை உணரும் ஒருவரை எந்த இழப்பும் துவள செய்யாது.

இழப்புகள் யாவும் நம்மை சொர்க்கத்திற்கு தான் கொண்டு செல்லும் என்கிற பொறுமையை மேற்கொள்ளும் எவரையும் எந்த சோதனையும் தோல்வியுற செய்யாது.

ஈமானின் சுவை என்பது அத்தனை மகத்தானது !

ஈமானிய உறுதியை வாயளவில் மொழிந்தவர்கள் அதை சுவைத்துப் பார்க்கவும் வேண்டுமானால், சோதனைகளை கூட, நபிமார்கள் எதிர்கொண்ட விதத்தில் எதிர் கொள்ள தயாராக வேண்டும்.
சோதனை வந்தால் தான் நாம் வெற்றி பெறுவோம்.

அல்லாஹ்வை நம்புகிறேன் என்று இது நாள் வரை நாம் மொழிந்து வந்ததும் பிரச்சாரம் செய்து வந்ததும் வெறும் வாயளவிலான பேச்சா அல்லது உள்ளத்தால் உணர்ந்து செய்தவையா என்பதை பிரித்துக்காட்டும் ஆயுதம் தான் அல்லாஹ் தரும் சோதனை.

உங்களில் தியாகம் புரிந்தோரை அல்லாஹ் அடையாளம் காட்டாமலும், பொறுமையாளர்களை அடையாளம் காட்டாமலும் நீங்கள் சொர்க்கத்தில் நுழையலாம் என்று நினைக்கிறீர்களா? (3:142)

அன்புடன், நாஷித் அஹமத்
http://nidur.info/

No comments: