Monday, August 7, 2017

எவ்விதத்திலும் இல்லாள் இந்த இல் ஆள் எனும் நல்லாள்..!

திருமணம் எனும் உறவின் மூலம் பெண்ணுக்கு #இல்லாள் எனும் பெரும் பெயர் கிடைக்கிறது. அப்படி கிடைத்த அந்த பெயர் அப்பெண்ணுக்கு எப்படியெல்லாம் பொருந்துகிறது என்பது பற்றி ஒரு சுருக்கமான பார்வை.
👧 கணவன் என்கிற புது உறவைப்பெற்று அதன் முன்பிருந்த துணை இல்லாள் எனும் நிலை நீங்க அவள் இல்லாள் ஆகிறாள்.
👧 கணவனின் இல்லம் புக அவன் வீட்டின் இல்லாள் ஆகவும்; அதோடு அவ்வீட்டின் ஒரு அங்கமாய் அந்த இல்லத்தின் ஆட்களில் ஒருவர் எனும் வகையிலும் அவள் இல்லாள் ஆகிறாள்.
👧 கணவனின் நீங்கா அன்பைப் பெற்று அவன் உள்ளம் எனும் இல்லத்தில் குடியேறி அந்த இதய இல்லத்தை ஆளும் தகை கொண்டு வகை வென்று இல்லாள் ஆகிறாள்.

👧 இல்லத்தை நிர்வகித்து சீர்படுத்தும் பொறுப்பேற்று எல்லா ஆளுமையும் அவளாகி! நற் குணத்துடன் நல்ல திறன் கொண்டு இல்லாதிருந்ததை இருப்பதாக்கி இயன்று அவள் இல்லாள் ஆகிறாள்.
👧 கணவனின் வழியே பொருட் செல்வமும் மக்கட் செல்வமும் ஒருங்கே பெற்று அவைகள் எல்லாம் இல்லாள் எனும் நிலை நீங்க இல்லாள் ஆகிறாள்.
👧 உறவுகளின் வகையில் வரும் சர்ச்சைகளையும் பலவித பிரச்சினைகளையும் சமாளித்து சரிபடுத்தி அவைகளை எல்லாம் இல்லா நிலைபெறச் செய்து இல்லாள் ஆகிறாள்.
👧 திருமணத்தால் அவள் உறவுகளை எல்லாம் இழந்து இல்லாள் ஆனவள்! கணவனையும் அவன் தம் உறவுகளையும் பெற்று இல்லாள் ஆகிறாள்.
👧 மொத்தத்தில் ஆண்களுக்கு எல்லா வகையிலும் 'இல்லான்' எனும் நிலை நீங்க இல்லாள் வேண்டும்! இதுவே சமயங்களில் மாறி, சில இல்லாள்களின் சோதனையால் எல்லாம் இருந்தும் சில ஆண்கள் இல்லான் ஆகிவிடுவதும் உண்டு.
'இல்லாள்' இல்லத்தின் அணி இலக்கணம்!
அவள் ஒரு தனி இலக்கணமும்தான்...💕🌹

Samsul Hameed Saleem Mohamed 

No comments: