Thursday, September 7, 2017

இருட்டுகள் அழகானவை / Abu Haashima

இருட்டுகள் அழகானவை
இருட்டுகள் சுத்தமானவை
இருட்டை எதிர்பார்த்திருப்பது
இனிய அவஸ்தை !
கவிழ்ந்து கிடக்கும்
இருட்டுகளில்தான்
சத்தியம்
உயிரோடு இருக்கிறது !
பொய்களைக்
காண முடியாத நிஜம்
இருட்டு !
வேஷங்களைப் பூசி வந்து
ஏமாற்றும் வாய்ப்பை
யாருக்கும்
தருவதேயில்லை
இருட்டு !

இருட்டில்
எல்லாமே அழகாக இருக்கிறது !
இருட்டில்தான்
இதயம் விழித்துக் கொள்கிறது !
இருட்டுதான்
ஒளியை இறக்குமதி செய்கிறது !
கண்ணீரைக் கூட
களங்கப்படுத்த முடியாதபடி
கண்களுக்கு
ஹிஜாப் அணிவித்து விடுகிறது
இருட்டு !
பகலின் அழுக்குகளையெல்லாம்
இருட்டுதான்
கழுவிக் காயப்போடுகிறது !
இருட்டை
நான் நேசிக்கிறேன் ...
ஹிராவில் நபிகளாரோடு
இணக்கமாக இருந்தது
இருட்டு !
தவ்ரில் நபிகளாருக்கு
காவலிருந்ததும்
இருட்டு !
இருட்டில்
எல்லோருக்கும்
ஞானம் வந்து விடுவதில்லை !
இருட்டை
நேசிப்பவர்களுக்கே
ஞானம் வசப்படுகிறது !
இருட்டுதான்
வெளிச்சத்தின்
தாய்வீடு !
இருட்டை
நான் நேசிக்கிறேன்...
ஆன்மாவின்
வெளிச்சத்திற்காக !

Abu Haashima

No comments: