Saturday, November 11, 2017

வாழ்க்கை.

வாழ்க்கை வாழ்க்கை என்று வையகத்தில் உழன்று, கிடைக்கப் பெற்றுள்ளவற்றில் எதையுமே அனுபவிக்காமல், நொடிக்கு நொடி என்ன நடக்குமோ? என்னவாகுமோவென ஒவ்வொரு கணமும் எண்ணியபடி மரணித்துக் கொண்டிருப்பதல்ல வாழ்க்கை!
மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதை உணர்ந்து அனுமதிக்கப் பட்ட அனைத்தையும் துய்த்து மனமார வாழ்வதே வாழ்க்கை. ஒவ்வொருவரும் அவரவர்க்கு கொடுக்கப் பட்டுள்ளதில் நேர்மறை பகுதியை உணர்ந்து கண்டும் களித்தும் வாழவேண்டும்.
நம்மில் பலரும் கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்யிக்கு அலைகிறோம்.

சகமனிதனை துக்கிக்க வைத்து
தற்பருமையில் உழன்று
தான்மட்டும் சுகிக்கும் வளங்கள்
தருவதல்ல வாழ்க்கை.
'தான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதுபோல எல்லோராலும் இருக்க முடியுமா? மிகவும் கடினம்தான். ஆனால் Charity starts at Home - என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோல உற்றார் உறவினரோடும் நட்புகளோடும் சகஊழியர்களோடும் வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் நேர்மறையான நிகழ்வுகளையும், கொண்டுவந்த வெற்றியின் வழிகளையும் அதை அடைவதற்கு அடைந்த வலிகளையும் பகிர்ந்து கொள்வதே வாழ்க்கையின் ஒரு அங்கம் எனலாம்.
வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்தையும் அதனதன் சமயத்திலேயே வாழ்ந்து அனுபவிக்க வேண்டும். இளமையை எப்படியோ கழித்தபின்னர் முதுமையை அடைந்ததும் பழையதை நினைத்து கைசேதப்படுபவர்களாகவே நம்மில் பலரும் இருக்கிறோம்.
நேர்மறை எண்ணங்களை வளர்த்து எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.
வாழ்க்கையை எப்படி நடத்திச்செல்ல வேண்டுமென்றால்:
செல்வத்தையும் நன்மையையும் சம்பாதிக்கும்போது வாழ்விற்கு முடிவேயில்லை என்று எண்ணியபடி செயல்பட வேண்டும்.
இறைவணக்கத்தின்போது இப்போது இந்தக்கணமே வாழ்வின் முடிவுக்கு வந்துவிடுமோ என்று எண்ணியபடி வழிபட வேண்டும்.

ராஜா வாவுபிள்ளை

No comments: