Saturday, November 25, 2017

உகாண்டா நினைவுகள் ....! வீடும் நாடும்

வீடும் நாடும்
அது ஒரு பழங்காலத்து வீடு. இன்னும் மெருகு குலையாமல் அப்படியே இருந்தது. அதைக் கட்டியவன் கொலோனியல் காலத்து ஆங்கிலேயனாக இருக்கலாம் அனால் இப்போது வசிப்பது இந்திய வம்சாவளியினர், என் மக்கள் உட்பட.
அந்நகரத்திலேயே மிகவும் வசதிபடைத்தவர்கள் வசிக்கும் அந்த மலையின் மேல் ஒருபக்கத்து சாய்வில் அமைந்திருந்தது.
அழகிய வராந்தாவும், விசாலமான அரங்குகளும் கொண்டிருந்தது. இயற்கையினால் குளிரூட்டப் பட்டிருந்தது இயற்கையாகவே.
அந்த வீட்டின் சிறப்பு அம்சமும் எனக்கு மிகவும் வியப்பை தந்ததுமாவது,
அது இரு வீடுகள் ஒன்றாக கட்டப்பட்டது. அதாவது எல்லா வசதிகளும் இரண்டு இரண்டாக சரிசமமாக இருக்கும் ஆனால் பொத்தம் பொதுவாக வரவேற்பு அறை, வாழும் அறை, தோட்டத்து வீடு போன்றவை பொதுவாக இருக்கும்.
நுழைவாசல் ஒன்றாக இருக்கும் தலைவாசல் இரண்டு இருக்கும். இவை யாவுமே நான் பிறந்து வளர்ந்த எங்கள் பூர்வீக வாவுப்பிள்ளை வீட்டைப் போலவே அமைந்திருந்ததுதான். பல சமயங்களில் பால்ய நினைவுகளை என்னுள் எழுப்பி இளமையின் உயிரோட்டத்தை துடிக்கச் செய்யும்.
அங்கு நான் வசித்திருந்த காலத்தில் பின்பக்க பால்கனியில் இருந்து பார்த்தல் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப் பசேலென அடர்ந்த மரங்களும் அதிலமர்ந்து பசியாறி பாடிக்களிக்கும் பறவைகளும் ஏராளம் காணலாம். அதன் அப்புறத்தில் ஆங்கிலேய கனவான்கள் விளையாட்டான கோல்ப் விளையாடும் புல்வெளி வேய்ந்த மைதானம் பரந்து விரிந்து கிடக்கும் பார்க்கவே பரவசமாக இருக்கும்.
இதைத்தான் இருண்ட கண்டம் என்று அவர்கள் அன்று சொன்னார்கள். இப்போது அந்த வீட்டில் நான் வசிக்கவில்லை என்றாலும், இப்பவும் எங்கள் குழுமத்தின் வசமே இருப்பதால் எப்போதாவது
அங்கு போவதுண்டு. அதே பால்கனியில் இப்போது நின்று பார்த்தால் அடர்ந்த மரங்களைக் காணவில்லை. பாடும் பறவைகளும் இல்லை. ஆனால் அடர்ந்துவிட்ட கான்க்ரீட் வனமாகி இருக்கிறது. பழையகாலத்து பங்களாக்கள் எல்லாம் இப்போது வணிகவளாகங்களாக வளர்ந்து நிற்கிற்றன.
இப்போது அப்போதைய ஆங்கிலேயன் உகாண்டாவின் தலைநகரம் கம்பாலாவில் உள்ள கொலோலோ என்ற அழகிய இடத்தைப் பார்த்தால் எங்கெங்கு காணினும் பிரகாசம் - இருண்ட கண்டம் என்று சொல்லி இருக்கவே மாட்டான்.
தொடரலாம்.

ராஜா வாவுபிள்ளை

No comments: